Skip to main content

''உங்களால எதுவுமே செய்ய முடியாது சார்...'' -ஆடியோ வெளியிட்டு ம.நீ.மய்யத்திலிருந்து விலகிய தொழிலதிபர்

Published on 26/03/2019 | Edited on 26/03/2019



 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், சுயேட்சையாக திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், ஆடியோ ஒன்றை வெளியிட்டள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன். 
 

அவர் அந்த ஆடியோவில், 
 

''மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நாங்க இறங்கி செலவு பண்ணினோம். நீங்க வந்த திருப்பூர் சுற்றப்பயணம், சேலம் நிகழ்ச்சியாகட்டும் 50, 60 ஆயிரம் செலவு செய்துவிட்டு ஒரு நாள்கூட ஓய்வு இல்லை. பின்னர் விவசாயிகளை அழைத்து வர சொன்னீர்கள். மூன்று தொகுதி பொறுப்பாளர் நான். அதுகூட ஒரு தொகுதி சேர்த்து பார்க்க சொன்னீர்கள். எனக்கே தெரியவில்லை நான் எந்த தொகுதி பொறுப்பாளர் என்று. திருப்பூர் மாவட்டத்தை நான் பார்க்கிறேன் என்று சொன்னால், உங்களுக்கு கொடுத்த வேலையை பாருங்கள் என்று அருணாச்சலம் அய்யா சொல்லுகிறார். அதற்கும் நீங்கள் தலையை ஆட்டிவிட்டீர்கள். எல்லாவற்றிற்கும் நீங்கள் தலையையாட்டி பொம்மையாகத்தான் இருக்கிறீர்களேயொழிய நீங்களாக எந்த முடிவும் எடுப்பதில்லை. 

 

Makkal Needhi Maiam kamal-vengadesan thirupur


 

நாமக்கல் தங்கபாலு எனக்கு எதுவுமே தெரியாது என்கிறார்.  ஸ்ரீப்ரியா மேடமும் அதைத்தான் சொல்லுகிறார்கள். அப்ப உங்களுக்கு என்னதான் தகவல் தெரியும். அப்புறம் எப்படி நாட்டை மாத்துவீங்க, எப்படி ஊழலை ஒழிப்பீங்க, சொல்லுங்க பார்க்கலாம். உங்களால எதுவுமே செய்ய முடியாது சார். 
 

நான் பேசியதை நம்ம குரூப்பில்தான் போடுவேன். இது இந்தியா முழுவதும் பரவும். அந்த அளவுக்கு நெட் ஒர்க் நான் வைத்திருக்கிறேன். ஏனென்றால் என்னை கட்சியில் இருந்து தூக்கிவிடுவீர்கள் என்று தெரியும். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் இன்னைக்கு ஒரு நாளில் எல்லோருக்கும் போய் சேர்ந்துவிடும். 


எல்லா மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை சந்தித்து பேசுங்கள். காலேஜ் காலேஜா போனீங்கன்னா ஓட்டு போடுவாங்களா? யாரும் போட மாட்டாங்க. கமல் சாரை பாக்கணுமுன்னு வருவாங்க. பாப் கார்ன் சாப்பிட்டு, பப்ஸ் சாப்பிட்டு போயிடுவாங்க. நீங்க நினைப்பதெல்லாம் தவறு. 
 

மக்களை சந்திக்கணுமுன்னா ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களை சந்தியுங்கள். உங்களுக்காக உயிரை கொடுத்து வேலை செய்யுற ஒவ்வொருத்தரையும் பாருங்க. யார் யார் எதை எதை வித்தார்கள் என்று பாருங்கள். 

 

kamal-vengadesan thirupur makkal needhi maiam


 

கமல் சார் உங்க மேல எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் படிக்காதவர்களாக இருந்தாலும் புத்திசாலி. நீங்க புதுமையை உருவாக்க நினைக்கலாம். உங்க பின்னால் நிற்பவர்கள் மிக மோசமானவர்கள். இந்த தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று நினைத்தால் திமுக, அதிமுக மட்டும்தான். அதுதான் உண்மையான கட்சி. அவர்களுக்குத்தான் தெரியும் எங்க மேடு இருக்கிறது, எங்கு பள்ளம் இருக்கிறது, எங்கு குழி இருக்கிறது, எங்கு தண்ணீர் வரும், எதை நிறுத்தணும் என்று அவர்களுக்குத்தான் தெரியும். 

 

நீங்க முதல்ல மக்கள் நீதி மய்யத்தில் நல்ல ஆட்களை தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று பாருங்கள். 110 மாவட்ட பொறுப்பாளர், 500க்கும் மேற்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள் களப்பணியாளர்களெல்லாம் போட்டு எல்லாவற்றையும் கெடுத்திடாதீங்க. உண்மையை முதல்ல தெரிஞ்சி, வேலை செய்யுங்கள் ஒவ்வொரு விஷயத்திலும். நன்றி அய்யா. இதற்கு மேல பேச விருப்பமில்லை. ஏனென்றால் இதற்கு மேல பேசினால் உங்களைப் பற்றியே தவறாக பேசிவிடுவேன். நீங்களும் அந்த அளவுக்குத்தான் இருக்கிறீர்கள். நன்றி. வணக்கம்.'' இவ்வாறு பேசியுள்ளார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.