Skip to main content

வாய்ப்பை நழுவவிட்ட சீமான், கமல்...!!!

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

 

மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்திருக்கிறார் கமலஹாசன். மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும், வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. இதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளார் கமலஹாசன். 

 

kamal



மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னர் கமலஹாசன் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம் அல்லது சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம் என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அவரிடமே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பொறுத்திருங்கள் என்று பதிலளித்தார். ஆனால் வேட்பாளர்கள் அறிவிப்பில் அவரது பெயர் இடம் பெறவில்லை. 
 

கமலஹாசன் போட்டியிட்டால் அந்த ஒரு தொகுதியில்தான் கவனம் செலுத்த நேரிடும், அவர் போட்டியிடாததால் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுக்கு கமல் பிரச்சாரம் செய்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இருக்கும் என்று தெரிவித்தனர். 

 

இதனால் கமலஹாசனின் ரசிகர்களைப் போலவே ''பொதுமக்களும் கமலஹாசன் போட்டியிடவில்லையா?'' என ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அரசியல் கட்சியினர்களோ பெருமூச்சு விட்டனர். 
 

இதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த தேர்தலிலும் தனது பிரச்சார வீயூகம் மூலம் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியும் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.


2016ல் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சீமான், இந்த நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலோ போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தல்களில் அவர் போட்டியிடவில்லை. சிவகங்கை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்ற பேச்சும் இருந்து வந்தது. 
 

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் சீமான் மற்றும் கமல் கட்சிக்கு புதிய வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாகவும், மேலும் நடுத்தரமான வயதுள்ளவர்கள் சிலரும் வாக்களித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 

 

சிவகங்கையில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டியதை ஓரளவு சரியாகவே கொடுத்திருந்தாலும், ''இந்தப் பணத்துக்காக எங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்காதீர்கள். அந்த கட்சி ஜெயித்தால் தொகுதி நாஸ்தியாகிவிடும். அதோடு எப்போதுமே எங்கள் அதிமுக இங்கே நிற்க முடியாமல் போய்விடும். அதனால் வேறு யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள். எங்கள் பங்காளி தினகரனின் வேட்பாளருக்கு போட்டாலும் பாதகமில்லை'' என்று அதிமுகவினர் கூறியதாக தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர், திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வேண்டா விருப்பதாகத்தான் வேலை செய்தார்கள், ராமநாதபுரத்திலும் இதே நிலைமைதான். இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடபடாத நிலையில் ராமநாதபுரத்திலோ அல்லது சிவகங்கையிலோ கமலஹாசன் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார் என்றனர்.

 

seeman



கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்தித்த சீமானை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர், இந்த இடைத்தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ போட்டியிட்டிருக்க வேண்டும். அப்படி போட்டியிட்டிருந்தால் கட்சியினருக்கு ஒரு உற்சாகமும், நம்பிக்கையும் பிறந்திருக்கும். சிவகங்கையில் சீமான் போட்டியிட்டிருந்தால் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள மக்கள் ஒத்துழைத்திருப்பார்கள். மேலும் பிரதான கட்சிகளின் நிர்வாகிகளோ, தொண்டர்களோ அந்தக் கட்சிகளுக்காக தீவிரமாக பணியாற்றவும் இல்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சீமான் இங்கு பிரச்சாரத்தில் தீவிர கவனம் செலுத்தியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தல் பறக்கும் படை கலைப்பு; எல்லையில் மட்டும் கண்காணிப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Dissolution of Election Flying Corps; Surveillance only at the border

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும்,  24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.

ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.