Skip to main content

திரண்டு வந்த மக்கள்... அலறி அடித்து ஓடிவந்த அதிகாரிகள்... கோரிக்கை நிறைவேறுமா? 

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

 

மாப்பிள்ளை இவர்தான் இவர் போட்டிருக்கும் சட்டை இவருடையது அல்ல "என்பது ரஜினியின் திரைப்படமொன்றில் வரும் பிரபலமான வசனமாகும். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுக்காவைச் சார்ந்த எல்ராம்பட்டு கிராம தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை கதையும் இப்படித்தான் உள்ளது. 1994ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் வீடற்ற ஏழை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு மனை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டதை தொடந்து, அதன் ஒரு பகுதியாக  எல்ராம்பட்டு கிராமத்தில் உளுந்தூர்பேட்டை ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் அந்த கிராமத்தில் வீடற்ற 130 ஏழை தாழ்த்தப்பட்ட குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு குடி மனைப்பட்டா வழங்க மேற்கண்ட கிராமத்திலுள்ள தரிசு இடத்தை ஆர்ஜிதம் செய்து அளந்து அத்து காட்டி பட்டாவும் வழங்கப்பட்டுவிட்டது.

 

thirukovilur - cpi



பட்டா வழங்கப்பட்டு 26 ஆண்டுகளை கடந்த சூழலில் இன்றும் அரசாங்க வருவாய் கணக்கில் மேற்கண்ட வீட்டுமனைகள் உள்ள இடம் தரிசு நிலம் என்றே உள்ளது. காரணம் என்னவென்றால் குடிமனை பட்டா பெற்ற ஏழை தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுடைய குடி மனைகளை அரசின் வருவாய் கணக்கில் ஏற்றுவதற்கு நில அளவர், தனி வட்டாட்சியர் என்று துவங்கி எல்லோருக்கும் கப்பம் கட்டி இருந்தால் இவைகள் அரசாங்க வருவாய் கணக்கில் இருந்திருக்கும். ஒருவேளை சோற்றுக்கே அல்லல்படும் ஏழைகள் எங்கே போவார்கள்? எனவேதான் உரிய கவனிப்பு இல்லாததால் அரசாங்க அதிகாரிகள் எழைகளுக்கு கொடுத்த குடிமனைகளை  உரிய வருவாய் கணக்கில் ஏற்றாமல் இன்றுவரை இருந்து வந்துள்ளனர்.
 

இந்த நிலையில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை துவக்க விழா பொதுக்கூட்டம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் நடைபெற்றபோது அந்த கிராமத்தில் வாழும் ஏழை தாழ்த்தப்பட்ட மக்களின் மேற்கண்ட கோரிக்கையை கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதை தொடர்ந்து அக்கிராமத்தைச் சேர்ந்த 130 ஏழை தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் (முதியோர் மற்றும் பெண்கள், குழந்தைகள் அடங்குவர்) திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்னால் திங்கள்கிழமை காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை  துவக்கினர்.


 

 

எங்கள் குடிமனைகளுக்கு  உரிய வருவாய் கணக்கை அரசு பதிவேட்டில் ஏற்றி அடங்கல் வழங்க வேண்டும் இல்லையெனில் நாங்கள் எத்தனை நாட்கள் மாதங்கள் ஆனாலும் இவ்விடத்திலேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு காத்திருப்போம். உங்களிடம் இருந்து  நியாயம் கிடைக்கிற வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர். 
 

அவர்களின் போராட்டம் அரசுத்துறை அதிகாரிகளை  கதிகலங்கச் செய்து விட்டது. இப்போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் கொளஞ்சி தலைமை வகித்தார். காத்திருப்பு போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட துணை செயலாளர் கே.இராமசாமி, ஒன்றிய செயலாளர் கே.ரவி, நகரச் செயலாளர் பி.எச். கே.பசீர் அகமது, ஒன்றிய பொருளாளர் எஸ்.கோவிந்தன்மாவட்டக்குழு உறுப்பினர் ஜே.கே.கதிர்வேல் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் எஸ்.விஜய் எனகம்யூனிஸ்ட்கட்சியின்முன்னணி படையே திரண்டு நின்று போராட்டத்தில் கோரிக்கைகளை முழக்கங்களாகவும்  கண்டன உரைகளாகவும் நிகழ்த்தினர்.


 

 

இதனைத்தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்குப் பிற்பகலில் அழைத்தனர். பேச்சுவார்த்தையில் வரும் 15 தினங்களுக்குள் 130 தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளையும் வருவாய் கணக்கில் ஏற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
 

எனினும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி நகரில் காத்திருப்புப் போராட்டம் கைக்குழந்தைகள், முதியோர், பெண்கள் என குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் இணைந்து போராட்டத்தை துவங்குவது என அறிவித்துவிட்டு கலைந்து சென்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர்” - முத்தரசன் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Mutharasan condoles the demise of MP Ganesamoorthy

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக இருந்த மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், ஈரோடு மாவட்ட மூத்த அரசியல் முன்னோடியுமான அ. கணேச மூர்த்தி எம்.பி. (77) இன்று (28.03.2024) அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார் என்று துயரச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஈரோடு அருகில் உள்ள அவல் பூந்துறை, கவுண்டிச்சிபாளையம் என்ற ஊரில் செல்வாக்கு பெற்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெருந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து சென்னையில் உயர் கல்வி பெற்றவர்.

கல்லூரி கல்வி பயின்ற காலத்தில் தமிழ் மொழி பற்று, தேசிய இனங்கள், தமிழர் தனித்துவ பண்புகள் குறித்த அறிஞர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தி.மு.கழக மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்படத் தொடங்கியவர். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக உயர்ந்தார். கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி தி.மு.கழக வேட்பாளராகத் தேர்தல் களம் இறங்கியவர். முதல் மூன்று முறை தொடர்ந்து தோல்வி அடைந்த போதும் கொள்கையில் நிலைகுலையாமல் பயணித்தவர்.

1977 முதல் 1992 வரையான காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த நெருக்கடிகளை முன்னின்று எதிர் கொண்டவர். 1980களின் ஆரம்பத்தில் திமுக மாநில சிறப்பு மாநாடு நடத்தி தலைவர் கலைஞரிடம் 33 லட்சத்து 33 ஆயிரத்து 333 ரூபாய் நிதி வழங்கிய பெருமைக்குரியவர். கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் பேராதரவு பெற்று  தி.மு.கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர். 1989 மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.

கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து வைகோவுடன் இணைந்து மறுமலர்ச்சி தி.மு.கழகம் உருவாக்கியவர்களில் அ. கணேசமூர்த்தி குறிப்பிடத்தக்கவர். பொடா சட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர். பழனி மக்களவைத் தொகுதியில் இருந்து இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வந்தவர். கட்சியின் உயர் பொறுப்புகளிலும் பணியாற்றியவர். உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ. கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. பொதுவாழ்வு பணிகளை ஒருங்கிணைக்கும் தலைமை பண்புமிக்க ஒருவரை ஈரோடு மாவட்டம் பறிகொடுத்து விட்டது.

அ. கணேசமூர்த்தியின் வாழ்விணையர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு கபிலன் என்ற மகனும் தமிழ் பிரியா என்கிற மகளும் பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். அ. கணேசேமூர்த்தியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.