Skip to main content

கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிட எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை! 

Published on 06/08/2020 | Edited on 06/08/2020

 

 

கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க முன்னாள் தலைவர் கலைஞரின் 2-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, நினைவு அஞ்சலி செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும் என கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

 

“கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 07.08.2020 அன்று காலை கடலூர் கிழக்கு மாவட்டத்திலுள்ள ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு வாரியாக கிளைகள் தோறும் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்தும், நினைவு அஞ்சலி செலுத்தியும்,  கலைஞரின் சாதனைகளை பதாதைகள் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஏழை எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும். 

 

மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு கோவிட் முன்கள பணியாளர் ஒருவரை அடையாளம் கண்டு (மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அத்தியாவசியப் பொருட்களை வழங்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் பேன்றவர்கள்) அவர்களுக்கு அழைப்பு விடுத்திட வேண்டும்.

 

மேலும் ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், மருத்துவமனைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகள் மற்றும் இதர ஆதரவு இல்லாதோர் அமைப்புகளுக்கு சென்று நிவாரண உதவிகள் அளித்திட வேண்டும்.

 

இந்நிகழ்ச்சிகளை அந்தந்த பகுதிகளிலுள்ள, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும்.

 

மேற்கண்ட நிகழ்ச்சிகளை சமூக இடைவெளியுடன் நடத்தி, இந்நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், வீடியோக்களை அனைத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து 9171091710 என்ற வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்.   மேலும் புகைப்படங்களின் தொகுப்பினை மாவட்ட கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.