Skip to main content

கலைஞரின் குருகுலத்தில் வீதிகள் தோறும் புகழஞ்சலி.... 

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் தமிழகத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்த கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று தமிழகம் முழுக்க தி.மு.க.வினரால் நடத்தப்படுகிறது. சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் முதன்மை நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்திற்குச் சென்று அவரது நினைவிடத்தில் புகழ் மாலை அணிவித்தனர். அதேபோல் தான் தமிழகம் முழுக்க அனைத்து ஊர்களிலும் கலைஞரின் சிலைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

கலைஞர் தொடக்கக் காலத்தில் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பின்பற்றிய போது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரோடு ஈரோட்டில் சில காலம் வாழ்ந்தார். தன் வாழ்நாள் முழுக்க ஈரோடு நகரத்தை எனது குருகுலம் என பெருமை பொங்க கூறுவார் கலைஞர். அப்படிப் புகழ் பெற்ற குருகுலமான ஈரோட்டில் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி திரும்பிய திசையெல்லாம் நிகழ்ந்தது. 

 

தி.மு.க.வினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பு கலைஞரின் புகைப்படங்களை வைத்து மாலை அணிவித்தனர். அதே போல் ஒவ்வொரு வீதியின் முகப்பிலும் பெரிய படங்கள் வைக்கப்பட்டு மாலை சூடப்பட்டது. அங்கு பூக்களும் வைக்கப்பட்டிருந்தது. கட்சிக்கு சம்பந்தமில்லாத பொதுமக்கள், இளைஞர்கள், இளம் பெண்கள், வயதான பெண்கள் எனப் பலரும் கலைஞர் படத்திற்கு பூக்கள் தூவி சிலர் கண்ணீர் சிந்தியது உணர்ச்சிகரமாக இருந்தது. 

 

வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் இல்லாது இருந்தபோது கடவுள் போல முதியோர் உதவித் தொகை நீங்கதானே ஐயா கொடுத்தீங்க என ஒரு வயதான பாட்டி வாய் விட்டு கூறி அழுததும், இன்று நான் அரசுப் பணியில் இருப்பதற்கு நீங்கள் வழங்கிய மூன்று சதவீதம் உள்ஒதுக்கீடு தாங்க ஐயா, எங்களுக்கு நீங்க தான்யா கடவுள் என ஒரு தலித் பெண் கண் கலங்கிய நிகழ்வுகள் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. 

 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் ரமேஷ்குமார் முப்பது இடங்களில் கலைஞரின் படங்கள் வைத்து மலர் மாலை சூடியதோடு அப்பகுதி மக்களுக்கு கபசுர சித்த மருந்தும் நோய் எதிர்ப்பு சக்தி சித்த மருத்துவ மாத்திரைகளும் வழங்கினார்.

 

http://onelink.to/nknapp

 

தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சு.முத்துச்சாமி தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ.செந்தில்குமார், செல்லப் பொன்னி மனோகரன், பொருளாள் ப.க.பழனிசாமி முன்னாள் மேயர் குமார் முருகேஷ் கவிஞர் ஈரோடு இறைவன் உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் ஈரோடு முனிசிபல் காலனி மற்றும் வ.ஊ.சி. பூங்காவில் உள்ள கலைஞரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் அதே போல் அங்கு இருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கும் மாலை அணிவித்தனர். தொடர்ந்து தந்தை பெரியார் பிறந்து வளர்ந்த வீடான பெரியார், அண்ணா நினைவகத்திற்குச் சென்று மூன்று தலைவர்களின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்கள்.

 

ஈரோடு மாவட்டத்தில் குக்கிராமம் முதல்கொண்டு வீதிகளில் கலைஞரின் புகைப்படங்கள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் மக்கள் மனதில் கலைஞர் நீங்காத இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.