Skip to main content

காடுவெட்டி குரு மரணம் அடைந்த போது வன்முறையால் பேருந்துகள் சேதம் - ராமதாசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Published on 21/08/2018 | Edited on 21/08/2018
gu

 

காடுவெட்டி குரு மரணம் அடைந்த போது அக்கட்சியினர் அரசு பேருந்துகளை சேதபடுத்தி ஏற்பட்ட இழப்பை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸிடம் பெற உத்தரவிட கோரிய  ராமதாஸிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  

 

நெல்லையை சேர்ந்த சுந்தரவேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில்,   " பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த காடுவெட்டி குரு கடந்த  26.05.2018-ல் இறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு அவரது ஆதரவாளர்கள், அக்கட்சியினர் பேருந்துகள் மீது கல்லெறிந்து, கடைகளை மூடுவது போன்ற அசம்பாவித செயல்களில் ஈடுபட்டனர். கடலூர் பகுதியில் பேருந்துகளை இயக்கவிடாமல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  அப்பகுதியில் போராட்டத்தின் போது 17 அரசு பேருந்துகளை சேதபடுத்தினர். சமூக விரோதிகள் புதுச்சேரி  விழுப்புரம் சாலையில் வன்முறை உருவாக்கியது. இதில் 24 அரசு பேருந்துகளுக்கு பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தி, பேருந்துகளில் ஜன்னல்களை உடைத்து வீழ்த்தியது. இதன் விளைவாக அதிகளவில் பேருந்துகளில் கோளாறுகள் ஏற்பட்டு இயங்க முடியாத அளவிற்கு இழப்பு ஏற்பட்டது. 

 

இச்சம்பவத்தில் மொத்தம் 73 பஸ்கள் சேதமடைந்தன. இந்த சேதமடைந்த பேருந்துகள் தற்போது இயங்க தகுதியற்றவை.  தற்போதுள்ள அரசாங்கமானது இத்தகைய வன்முறை காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் மட்டும் பாதிக்கப்பட்டனர். எனவே காடுவெட்டி குரு மரணம் அடைந்த போது அக்கட்சியினர் அரசு பேருந்துகளை சேதபடுத்தி ஏற்பட்ட இழப்பை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸிடம் பெற தமிழக தலைமை செயலர்,தமிழக உள்துறை செயலர்,தமிழக காவல்துறை ஐஜி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு இன்று நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி  சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது  "பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

சார்ந்த செய்திகள்