Skip to main content

ஆத்திரப்படாதீர்..! அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம்! கி. வீரமணி அறிக்கை

Published on 16/07/2020 | Edited on 16/07/2020
k. veeramani

 

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

தமிழ்நாட்டில் காவி கட்சிகள் என்னென்ன வெல்லாமோ ‘சித்து’ விளையாட்டுகள் ஆடிப் பார்த்தும் கால் ‘ஊன்ற’ முடியாத ஆற்றாமையால், திராவிடர் இயக்கத்தினரையும், அதன் மூலவேரான தந்தை பெரியார் அவர்களைப்பற்றியும்  சிறுமதி கொண்ட சிலர் சமூக வலைதளங்களில் தங்களின் முகங்களை கழிவு நீரில் கழுவி தங்களுக்கே உரித்தான ஆபாச - அசிங்க - நரகல் நடையில் பேசும் ஒரு கழிசடை வேலையில் இறங்கி வருவதுபற்றி ஆத்திரத்துடன் சில முக்கியத் தோழர்கள் நம் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள். 

 

பன்றிக் காய்ச்சல் அவ்வப்போது வருவதில்லையா? அதற்காகப் பன்றிகளோடா கட்டிப் புரள முடியும்?

 

அரசின் காவல்துறை - குறிப்பாக நுண்ணறிவுப் பிரிவு  அதிலும் ‘சைபர் கிரைம்‘ என்ற ஒரு பிரிவு இருக்கிறதே - அது என்ன செய்துகொண்டிருக்கிறது? மதிப்பிற்குரிய தலைவர்களை இழிவுபடுத்தும் கிருமிகள் மீது ஒரு சார்பாக சாயாமல் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவர்களின் இன்றியமையாத கடமையல்லவா! அந்தக் கடமையை அவர்கள் செய்யவேண்டாமா?

 

அந்தத் துறை, சாய்ந்த ‘தராசாக’ மாறினால், மக்களின் தார்மீகக் கோபம் கொதி நிலையை அடையாதா? சில நேரங்களில் எல்லையையும் மீறிவிடாதா?


இதனை நினைவூட்ட வேண்டியது நமது கடமையாகும். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் - அதன் வரலாற்றில் -  எத்தனையோ காலிகளை, கூலிகளை, போலிகளைப் பார்த்து வந்திருக்கிறது - காலத்தால் காணாமல் போகக் கூடியவர்கள் அவர்கள். இழிசொற்களைத் தங்களின் கொள்கை வயலுக்கு எருவாக்கி, உலகளாவிய அளவில் வளர்ந்துவரும் இயக்கம் இது.

 

நரிகளின் ஊளைகளால் இது நலிந்துவிடக் கூடிய, நசிந்துவிடக்கூடிய இயக்கமல்ல. நம் பெரும் பணியைத் திசை திருப்ப, மண்டியிடும் - மன்னிப்பு ராஜாக்களால் முடியாது. குருவி கத்தியா கோட்டை குடை சாயும்?

 

குறுக்கு வழியில் விளம்பரம் பெறும் உத்தியாகவும் இருக்கக் கூடும். ஆத்திரப்படும் தோழர்கள் இவற்றை அலட்சியப்படுத்தி, வில்லை எடுத்துள்ள நமக்கு- இலக்கு முக்கியம் என்பதால், இலட்சியத்தை நோக்கிப் பயணிக்கவேண்டுமே தவிர, சில்லறைகளின் கூச்சலுக்கெல்லாம் செவி கொடுத்துக் கொண்டிருக்கக் கூடாது.

 

அதேநேரத்தில் இயக்கத்திற்கு நேரிடையாகத் தொடர்பு இல்லாத இளைஞர்கள் அதே மொழியில் பதிலடி கொடுத்தால், அதற்கு நாம் பொறுப்பல்ல. அவற்றை ஊக்கப்படுத்துவதும் நம் வேலையல்ல - அதை விரும்பவும் மாட்டோம். அதேநேரத்தில் புராணங்களில் உள்ளதை உள்ளபடி வெளியிடுவது எவ்வகையில் குற்றம் என்பது மிக முக்கியமான கேள்வி.

 

அய்யாவையே அசிங்கமாகப் பேசுகிறார்களே என்று இளைஞர்கள் ஆத்திரப்படுவது புரிகிறது - அய்யா என்ற மாபெரும் தலைவரைப் பேசினால் தங்களுக்கு விளம்பரம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள் - அற்பர்கள்! அடையட்டும், அற்ப சந்தோஷம்!

 

அருமை இளைஞர்களே, ஆத்திர உணர்ச்சியைப் புறந்தள்ளுங்கள். நம் இலட்சியப்பயணத்தைத் திசை திருப்பும் முயற்சிகளைக் கண்டு ஏமாறவேண்டாம்!


அதேநேரத்தில், தமிழக அரசும், காவல்துறையும் கைகட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பது - அவர்களுக்குக் கெட்ட பெயரைத்தான் சம்பாதித்துக் கொடுக்கும்!

 

இன்னும் சில மாதங்களில் இதற்குரிய கடுமையான விலையைக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுவதை தவிர்க்க இயலாததாகிவிடும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் நடத்தை விதிகள்; சமயோசிதமாகச் செயல்பட்ட திராவிடர் கழகத்தினர்

Published on 18/03/2024 | Edited on 19/03/2024
Rules of Conduct for Elections Dravidar Kazhagam who worked strategically

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணமாக வைத்து திண்டுக்கல்லில் தந்தை பெரியாரின் சிலையைத் துணியைக் கொண்டு மறைத்துள்ளனர். இத்தகைய செயலுக்கு திராவிடர் கழகத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் காஞ்சித்துரை ஆகியோர், கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெரியாரின் சிலையை மூடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவின் நகலைக் காண்பித்து சிலை மூடப்பட்ட அரை மணி நேரத்தில் பெரியார் சிலை மீண்டும் திறக்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

Next Story

“திராவிடர் கழகம் தான் எனக்கு தாய் வீடு” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

Dravidar Kazhagam is my mother's house says CM MK Stalin

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் தஞ்சாவூரில் கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திராவிடர் கழகம் சார்பில் தாய் வீட்டில் கலைஞர் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் தான் கலைஞருக்கு தாய் வீடு. தாய் வீட்டில் கலைஞர் என்ற புத்தகம் வெளியிடக் கூடிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாய் வீட்டில் கலைஞர் மிக மிகப் பொருத்தமான தலைப்பு. எனக்கும் திராவிடர் கழகம் தான் தாய் வீடு. தாய் வீட்டில் கலைஞர் என்ற நூலை வெளியிடுவதற்காக மட்டுமல்லாமல் நானும் என் வீட்டிற்குச் செல்கிறேன் என்ற உணர்வோடு தான் இங்கு வந்துள்ளேன். அதிலும் குறிப்பாகத் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அழைத்தால் எங்கும் போவேன். எப்போதும் போவேன். எந்த நேரத்திலும் போவேன். காரணம் என்னைக் காத்தவர். இன்றைக்கும் என்னைக் காத்துக் கொண்டிருப்பவர்.

 

அதிலும் குறிப்பாக மிசா காலத்தில் இருட்டறையில் எனக்கு தைரியம் கொடுத்தவர் தான் ஆசிரியர் கி. வீரமணி. தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இல்லாத நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவர் ஆசிரியர் கி. வீரமணி என்று கலைஞர் குறிப்பிட்டார். என்னைப் பொறுத்தவரையில் கலைஞர் இல்லாத நேரத்தில் கொள்கை வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் கி. வீரமணி. அதனால் தான் நாம் போக வேண்டிய பாதை பெரியார் திடல் தான் என்பதை நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன்” எனப் பேசினார்.