Skip to main content

அய்யோ என்னெத்த சொல்ல... ராஜேந்திர பாலாஜி பேட்டி

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

 

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார்.
 

மத்திய அமைச்சரவையில் இடம் வாங்காததற்கு அதிமுகவில் கோஷ்டி பூசலே காரணமா?
 

அமைச்சர் பதவி வாங்காத போதே பாஜக அடிமையா என்கிறீர்கள். அமைச்சர் பதவியை வாங்கினால் பாஜகவின் நிரந்தர அடிமை என்பீர்கள். நல்ல திட்டங்கள் வந்தால்போதும், மத்திய அரசிடம் இருந்து நிறைய நிதிகள் வாங்கி மக்களுக்கு நன்மை செய்தால் போதும். 


  K. T. Rajenthra Bhalaji


 

இந்த தேர்தலில் டிடிவி தினகரனின் நிலையை எப்படி பார்க்கிறீர்கள்?
 

அய்யோ என்னெத்த சொல்ல... யானை மாலை போட்டு ராணி ஆனமாதிரி நினைச்சு வந்தார். ஒரு படம் வந்தது பாத்தீங்களா... கே.ஆர்.விஜயாவுக்கு மாலை போட்டு ராணியாக்கிவிட்டுடும். அதைப்போல இவர் இணைந்தார். போகிற போக்கில் அவுங்க ஜெயிலுக்கு போவதற்கு முன்பு துணைப்பொதுச்செயலாளராக கையெழுத்துப்போட்டாங்களா இல்லையான்னு தெரியாது. நான்தான் துணைப்பொதுச்செயலாளர் என்று வந்துவிட்டார். தலைமைக்கழகத்திற்கு வந்தார். ஒரு ரூமில் சேரைப்பிடித்து உட்கார்ந்தார். உட்கார்ந்து அவருக்கு அவரே ஆர்.கே.நகரில் வேட்பாளராக அறிவித்தார். அப்பவே வில்லங்கம் வந்தது. கட்சிக்குள் பிரச்சனை வந்தது. எலெக்ஷன் நின்றது. அதுக்கப்புறம் அவராகவே அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார். அமைச்சர்களை ஒருமையில் பேச ஆரம்பித்தார். முதலமைச்சரையும் ஒருமையில் பேசும் அளவுக்கு வந்தார். எல்லோரும் ஒருமித்த முடிவு எடுத்து வெளியே தள்ளியாச்சி. கட்சிக்காரர்கள் எல்லோருக்கும் அவர் மேல வெறுப்பு. மீண்டும் ஒரு அடிமைத்தளத்திற்கு போக யாரும் விரும்பவே இல்லை. ஜெயலலிதா இருந்த வரை அவர்களை உள்ளே விடாமல் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். 
 

நீங்க சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தீர்களே?
 

அன்றைக்கு சசிகலா இருந்தார்கள். அவர்கள் பின்னால் ஒட்டுமொத்தமாக நின்றோம். அதற்கு பிறகு அவர்கள் குடும்பமே உள்ளே வந்தது. குடும்பமே உள்ள வந்ததை அவர்களால் தடுக்க முடியவில்லை. எத்தனை பேருக்கு யார் பதில் சொல்றது. அதனால் அவர்களை தடுக்கிற சக்தியாக இருந்தார் எடப்பாடி பழனிசாமி. அரசாங்கத்திற்குள் நுழைந்து அதிகாரம் செலுத்தக்கூடாத என்று தடுத்தார். உடனே நாங்கள்தான் கட்சி என்று தனியா கிளம்பிட்டார். அதனால் அவருக்கு பின்னடைவுதான். 


 

இப்போது அதிகாரத்தில் இருப்பவர்களில் எத்தனை பேர் சசிகலா குடும்பத்தின் தயவு இல்லாமல் அதிகாரத்திற்கு வந்தார்கள் என கேட்கிறார்களே?
 

நாங்கள் ஒரு உதவி செய்திருப்போம். அவர்கள் ஒரு உதவி செய்திருப்பார்கள். நாங்கள் உதவி செய்ததால்தான் அவர்கள் வந்தார்கள் என்று சொல்ல முடியாது. திறமை இல்லாதவர்கள் யாரும் அதிமுகவில் முன்னேறி வர முடியாது. ஜெயலலிதாவோட கவனத்தை கவர வேண்டும் என்றால் உழைத்தால்தான் முடியும். அப்போதுதான் அவர்கள் சீட் கொடுப்பார்கள். திறமை இருந்தால் எம்எல்ஏவாக, அமைச்சராக, எம்பியாக ஆக்கியிருப்பார்கள். கட்சியில் தகுதிக்கு ஏற்ப பதவிகள் வழங்கியிருப்பார்கள். எங்களால்தான் கட்சி, எங்களால்தான் கட்சி என்ற ஆணவப் பேச்சுதான் அவருடைய அழிவுக்கு காரணம். இவ்வாறு கூறினார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.