Skip to main content

“திமுக இனி கதம் கதம்தான்!” -கே.டி.ராஜேந்திரபாலாஜி

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
ktr


சிவகாசி அருகே திருத்தங்கல்லில், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இணைந்து நடத்திய, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடன் உதவித் திட்டத்தின்கீழ் கடன் வழங்கும் நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக  பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு, 255 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 71 லட்சத்து 60 ஆயிரத்துக்கான கரோனா சிறப்பு கடன் காசோலைகளை வழங்கினார். 

அதன்பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி –

ஒன்றிணைவோம் வா என்று கூறி, மு.க. ஸ்டாலின் மட்டுமே நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். ஸ்டாலின் நடவடிக்கையை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ரோடு போடாத சாலைப் பணியில் டெண்டர் முறைகேடு என்றுகூறி திமுகவினர் வழக்கு தொடர்வார்கள். பொய் என்று தெரிந்தவுடன் அவர்களே வழக்கை வாபஸ் பெறுவார்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக என்பதை ஸ்டாலின் மறந்துவிடக்கூடாது. கலைஞர் இருக்கும்வரை திமுக சுயமரியாதையுடன் இருந்தது. தற்போது பிரசாந்த் கிஷோர் கூறும் ஆலோசனையைக் கேட்டு, கட்சியை நடத்த வேண்டிய அவல நிலையில் திமுக உள்ளது.

கரோனா நிவாரண உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு அதிமுக லாரி லாரியாக, வாரி வாரி வழங்கியதை நாட்டு மக்கள் அறிந்திருப்பார்கள். ஆனால், திமுக பெயரளவில் நிவாரணத்தை கொடுத்துவிட்டு, பெரிய அளவில் விளம்பரத்தை தேடியது. 

இன்றைக்கு  9 துறைகளில் மத்திய அரசின் தேசிய விருதை எடப்பாடியார் அரசு பெற்றுள்ளது. திமுக இனி கதம் கதம்தான். திமுக என்ற கட்சியே வரும் தேர்தலோடு முடியப்போகிறது. இனி எந்தத் தேர்தலிலும் திமுகவிற்கு வேலையே இருக்காது. திமுகவில் உள்ள 2-ம் கட்ட தலைவர்கள் எல்லாம் ஸ்டாலின் போக்கு கண்டு மனம் வெதும்பி போய் உள்ளனர். மீண்டும் அதிமுகதான் ஆட்சிக்கு வரும். எடப்பாடியார் தொடர்ந்து முதலமைச்சாராக பணியாற்றுவார்.” என்றார். 

‘திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் ஒரு பிடிபிடிப்பதற்கு எடப்பாடி பழனிசாமியே, கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு  ‘கீ’ கொடுத்திருக்கிறார்.   அதனால்தான், காரசாரமான இந்த அறிக்கை, பேட்டியெல்லாம்..’ என்கிறது, ஆளும்கட்சி வட்டாரம். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.