Skip to main content

"ஜனவரி மாதம் சீக்ரெட்..." - அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த புதிர்..!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

K. A. Sengottaiyan

 

மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி விரைவில் வரும் என அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் தெரிவித்தார். 

 

கன மழையால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு, தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் (பெட்ஷீட்) போர்வைகள், 6 லாரிகளில் அனுப்பும் பணியை இன்று காலை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 

 

பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு, ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஒரு லட்சம் போர்வைகளை அனுப்ப, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரூபாய் 3.30 கோடி மதிப்பிலான போர்வைகள் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. எந்த மாநிலமும் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் போது நமது தமிழக அரசு உதவுகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலத்திற்குத் தற்போது வேண்டிய உதவிகளைச் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் 'டெட்' தேர்வில், பாஸ் செய்த ஆசிரியர்கள், ஏழு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பணியிடங்களை அரசுப் பள்ளிகளில் பெற, தகுதி படைத்தவர்கள். ஆனால், அப்படிப் பெற முடியவில்லை என்பதால் அவர்கள் டெட் தேர்வுச் சான்றிதழை நீட்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அதன்படி முதலமைச்சர் கடந்த மாதம் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, அவர்களுக்கான தகுதித் தேர்வு சான்றிதழுக்கான கால நீட்டிப்பைத் தரும்படி கோரினர். அதன்படி தற்பொழுது ஒருமுறை, டெட் தேர்வில் பாஸ் செய்தவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் பதவி பெறுவதற்கு தகுதி படைத்தவர்கள் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

cnc

 

மாநில அரசைப் பொறுத்தவரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவ இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் பெறுவதற்கு அரசு சட்டம் இயற்றி உள்ளது. இதற்காக கவர்னரின் ஒப்புதல் பெறுவதற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து, மீன்வளத்துறை அமைச்சர் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். எனவே விரைவில் தமிழக மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி வர உள்ளது. வரும் ஜனவரி மாதம் மக்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வர உள்ளது. இது குறித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்" எனக் கூறினார். "அது என்ன அறிவிப்பு" எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு "அது சீக்ரெட்" என புதிராகக் கூறிவிட்டுச் சென்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.