Skip to main content

இரட்டை வேடம் போடும் அதிமுக, பாமக... கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு!

Published on 04/04/2021 | Edited on 04/04/2021
ttttt

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பாடம் புகட்ட, அ.தி.மு.க.வின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்ற, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பதென தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தேர்தல் பரப்புரைகளில் பெருந்திரளான, அடர்த்தியான மக்கள் கூட்டம் அணி திரண்டு வருவதே அதற்கு சாட்சி. இதை சகித்துக் கொள்ள முடியாத அ.தி.மு.க., நாளேடுகளில் பக்கம் பக்கமாக ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை கூறி, கடைசி நாளில் கோயபல்ஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.

 

10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் சாதனைகள் என்று எதையும் கூற துணிவற்ற நிலையில்  இத்தகைய அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபடுவது பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு தோல்வி பயம் வெளிப்பட்டு விட்டதையே வெளிப்படுத்துகிறது. பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை தோற்கடிப்பதற்கு நியாயமான காரணங்களை வாக்காளர்களிடையே முன்வைக்க விரும்புகிறோம்.

 

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறுகிறார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2004 முதல் 2014 வரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்ததை எவராவது மறுக்க முடியுமா ? பா.ஜ.க. ஆட்சி அமைந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2015, 2016 இல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது யார் ? உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்குவதற்கு மிருகவதை தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பா.ஜ.க. மறுத்தது ஏன் ? ஜனவரி 2017 இல் மெரினாவில் நடந்த எழுச்சிப் போராட்டத்திற்குப் பிறகுதான் அ.தி.மு.க. அவசர சட்டம் கொண்டு வந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றதே தவிர, மத்திய பா.ஜ.க. ஆட்சியினால் அல்ல. எனவே, மோடி அவர்களே, தமிழக மக்களிடம் உங்களது கோயபல்ஸ் பிரச்சாரம் எடுபடாது.

 

தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். தற்போது, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 66.37 லட்சம். தமிழகத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு இதைவிட வேறு சான்று தேவையா ? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 9,251 பணியிடங்களுக்கு 20 லட்சம் மனுக்கள் குவிந்தன. ஒரு வேலைக்கு 231 பேர் விண்ணப்பித்தனர். 66 டி.எஸ்.பி. பதவிகளுக்கு 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதுதான் அ.தி.மு.க. அரசின் வேலை வாய்ப்பு வழங்கும் லட்சணம். தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவு பணியிடங்களுக்கு 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதில், பல பொறியியல், எம்.பி.ஏ. பட்டதாரிகள் அடங்குவர். எடப்பாடி அவர்களே, இதைவிட ஒரு அவமானத்தை தமிழகத்திற்கு உங்களால் இழைக்க முடியுமா?

 

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூன்று முறை கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அ.தி.மு.க. அரசு நடத்தியது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. தொழில்கள் தொடங்கப்பட்டு, லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாக எடப்பாடி கூறுகிறார். எந்த தொழிற்சாலையில் எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டது ? எடப்பாடி வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா ? தமிழகத்தில் ஆண்டுதோறும் 5 லட்சம் பட்டதாரிகள், 2 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்து விட்டு வெளியே வருகின்றனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க எங்கே தொழில் தொடங்கினீர்கள் ? எங்கே வேலை வழங்கினீர்கள் ? எடப்பாடி அவர்களே, பதில் கூறுவீர்களா ?

 

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 3.41 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் கடந்த மூன்றாண்டுகளில் திணிக்கப்பட்ட நீட் தேர்வின் மூலம் 13 மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேருகிற கொடுமை நிகழ்ந்தது. உள்ஒதுக்கீடு 7.5 சதவிகிதம் வந்தபிறகு, மொத்தமுள்ள 3400 இடங்களில் 405 மாணவர்களுக்குதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுதான் சமூகநீதியா ? மாநில பாடத் திட்டத்தில் படித்து, அதிக மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வாய்ப்பு கிடைக்காமல் அனிதா உள்ளிட்ட 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம் ? யார் பொறுப்பு ? நீட் தேர்வை தமிழகத்தில் திணித்த பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டாமா ?

 

குடியுரிமை சட்டத் திருத்தம் மாநிலங்களவையில் 11 உறுப்பினர்கள் கொண்ட அ.தி.மு.க.வும், அன்புமணி ராமதாசும் ஆதரித்ததால் சட்டமாக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெற பா.ஜ.க.வை வலியுறுத்துவோம் என்று கூறுவதை விட இரட்டை வேடம் வேறு என்ன இருக்க முடியும் ?

 

பா.ஜ.க. அரசின் பொது முடக்கத்தினால் மாத ஊதியம் பெறுகிற 12 கோடி பேர் வேலை இழந்தனர். 7.5 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டனர். வளர்ச்சி மைனஸ் 23 சதவிகிதம். 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கிற பிரதமர் மோடியே, தமிழக மக்களிடம் வாக்கு கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ? கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் வளர்ச்சி அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பொது முடக்கம், தவறான பொருளாதார கொள்கை போன்றவைகள்தான் இதற்கு காரணம் என்பதை பிரதமர் மோடியால் மறுக்க முடியுமா ?

 

பா.ஜ.க. அரசு 2014 ஆம் ஆண்டு முதல் 17 முறை கலால் வரி விதித்து ரூ.21 லட்சம் கோடி வருமானத்தை பெருக்கிக் கொண்டது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றியது. பா.ஜ.க. ஒரு மக்கள் விரோத அரசு என்று கூறுவதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையா ?  இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93. ஆனால், சின்னஞ்சிறிய அண்டை நாடுகளான நேபாளத்தில் ரூ.76, இலங்கையில் ரூ.60, பாகிஸ்தானில் ரூ.51, பூடானில் ரூ.59. பிரதமர் மோடியே இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணமா ? 2014 இல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.410. தற்போது ரூ.875. இதன்மூலம் 25 கோடி தாய்மார்கள் தலைமீது சுமையை ஏற்றிய பிரதமர் மோடிக்கு பாடம் புகட்ட வேண்டாமா ?

 

மோடி ஆட்சியில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 2020 ஆம் ஆண்டில் மட்டும் 13 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மூன்று மடங்காகவும், அதானியின் சொத்து மதிப்பு 6 மடங்காகவும் உயர்ந்திருக்கிறது. பிரதமர் மோடியின் ஆட்சி ஒரு கார்ப்பரேட் ஆதரவு ஆட்சி என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் ? இந்தியாவில் உள்ள காப்பரேட்டுகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக 2020 இல் மொத்தம் வழங்கிய நன்கொடை ரூ.2773 கோடி. இதில் ரூ.1660 கோடி பா.ஜ.க.வுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகள் பா.ஜ.க.வுக்கு நன்கொடையை வாரி வழங்குவது ஏன் ? மோடி பதில் கூறுவாரா ? 

 

அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டிய பா.ஜ.க. ஆட்சியில், சமஸ்கிருத மொழியை வளர்ப்பதற்கு கடந்த 3  ஆண்டுகளில் ஒதுக்கிய தொகை ரூ.644 கோடி. ஆனால், தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 5 மொழிகளுக்கும் சேர்த்து ஒதுக்கிய தொகை வெறும் ரூ.29 கோடி. சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கிய பிரதமர் மோடி அவர்களே, உங்களை தமிழர் விரோதி என்று அழைப்பதில் என்ன தவறு ? இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுபவர்கள் 28,821. ஆனால், சமஸ்கிருதத்திற்கு ரூ.644 கோடி. 7 கோடி மக்கள் பேசுகிற தமிழுக்கு நீங்கள் ஒதுக்கிய தொகை ரூ.4 கோடி. தமிழக தேர்தல் பிரச்சாரத்தில்  நீலிக் கண்ணீர் வடிக்கும் மோடி அவர்களே, தமிழ் மொழியை வஞ்சிப்பது நியாயமா ?

 

கடந்த 10 ஆண்டுகளில் நிவாரண நிதியாக பிரதமர் மோடியிடம் கேட்ட மொத்த தொகை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 கோடி. ஆனால், பிரதமர் மோடி வழங்கியதோ ரூ.5778 கோடி. கேட்ட தொகையில் 5 சதவிகிதத்தை மட்டுமே வழங்கிய பிரதமர் மோடி அவர்களே, தமிழக மக்களிடம் வாக்கு கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

 

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முதலமைச்சர் எடப்பாடி மீது, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, சி.பி.ஐ. விசாரணைக்கு தடை உத்தரவை பெற்று, ஆட்சியில் நீடிப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. தடை உத்தரவை நீக்காமல் உங்களை பாதுகாப்பவர் பிரதமர் மோடி. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எடப்பாடி சி.பி.ஐ. விசாரணையிலிருந்து தப்ப முடியுமா ? 

 

அ.தி.மு.க. அரசின் மொத்த கடன் ரூபாய் 5 லட்சம் கோடி. பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 3 லட்சம் கோடி. ஆக, 8 லட்சம் கோடி கடனில் திவாலான நிலையில் இருக்கும் போது, இலவச அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வாரி வழங்கலாமா ? எடப்பாடி முதலமைச்சராகும் போது அறிவிப்புகளை வெளியிடலாம். ஆனால், ஆட்சியிலிருந்து வெளியேறுகிற போது அறிவிப்புகளை வெளியிட என்ன உரிமை இருக்கிறது ? ஆட்சியில் இருக்கும் போது செய்யாததை மூடிமறைக்க இத்தகைய இலவச அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றலாமா ?

 

10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு நியாயமான காரணங்கள் ஏதாவது ஒன்றை கூற முடியுமா ? வாக்காளர்கள் எடப்பாடியையும், தளபதி மு.க. ஸ்டாலினையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, அடுத்த முதலமைச்சராக மக்கள் யாரை தேர்வு செய்வார்கள் என்பதைத் தான் அனைத்து கருத்து கணிப்புகளும் தெளிவாக கூறுகின்றன. ஐம்பதாண்டு கால அரசியல், நிர்வாக அனுபவம் பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது காலத்தின் கட்டாயம். இதற்கு மக்களிடையே அமோக ஆதரவு பெருகி வருவதை தொலைக்காட்சிகளில் காண முடிகிறது.  ஆட்சி மாற்றம் உறுதி என்பது நாளுக்கு நாள் தெளிவாகி வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க, அராஜக ஊழல் ஆட்சி நடத்துகிற அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும். ஆட்சி மாற்றத்தின் மூலமே தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்பட முடியும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும்’ - விஜய் அரசியல் வருகை குறித்து கே.எஸ். அழகிரி

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
'It will help create a healthy environment in politics' - KS on Vijay's political visit Alagiri

விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வந்தது. மேலும் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் முடிவு செய்திருந்தார். இதனையடுத்து விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம், ‘பூத் கமிட்டிகளை வலுப்படுத்துங்கள்; எப்போதும் தேர்தலுக்குத் தயாராக இருங்கள்; நமது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் காலம் வந்துவிட்டது’ என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி வந்தார்.

இந்த சூழலில் விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் சூட்டப்பட்டு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அதே சமயம் நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படத்துறையில் செல்வாக்கு மிக்கவராக கலைப்பணி ஆற்றும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன். மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

'It will help create a healthy environment in politics' - KS on Vijay's political visit Alagiri

பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று சுட்டிக்காட்டி அனைவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருப்பது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் கட்சியை ஏன் தொடங்குகிறோம் என்பதற்கான அவரது விளக்கம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும் என்று நம்புகின்றேன். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஆளுநர் ஆர்.என் ரவியின் சர்ச்சை பேச்சு; கே.எஸ். அழகிரி கண்டனம்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Governor RN Ravi's controversial speech; K.S. Alagiri condemned

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசுகையில், “நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை.  நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947 இல் நாடு இரண்டாகப் பிரிந்தது. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்” எனப் பேசி இருந்தார். ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ஆளுநரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு வரலாற்றுத் திரிபு வாதங்களை செய்வதோடு, தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும், தமிழ் கலாச்சாரத்தை சிறுமைப்படுத்துகிற வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாள் விழாவை ஆளுநர் மாளிகையில் கொண்டாடுகிற போர்வையில் தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி அவர்களையே கொச்சைப்படுத்துகிற வகையில் கருத்துகளை கூறியிருக்கிறார். அதில் அவர் பேசும் போது, ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை, நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம் என்று காந்தியடிகளை சிறுமைப்படுத்துகிற வகையில் காழ்ப்புணர்ச்சியோடு கருத்துகளை கூறிய இவரை இந்திய விடுதலைப் போராட்ட தேசபக்தர்களின் ஆன்மா மன்னிக்காது.

இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய பெருமை 1885 இல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு. தென்னாப்பிரிக்க கருப்பு இன மக்களின் விடுதலைக்காக போராடி வரலாறு படைத்த மகாத்மா காந்தி 1915 இல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க முன்வந்த போது, அவரது தலைமையை நாடு ஏற்றுக் கொண்டது. அவரது வழிகாட்டுதலின்படி அகிம்சை வழியில் சத்தியத்தை கடைபிடித்து ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம் போன்ற போராட்ட வழிமுறைகளின் மூலம் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்திய மக்களை திரட்டியதில் மகாத்மா காந்தியின் பங்களிப்பை ஆயிரம் ஆர்.என். ரவிக்கள் ஒன்று சேர்ந்தாலும் மூடி மறைத்துவிட முடியாது.

Governor RN Ravi's controversial speech; K.S. Alagiri condemned

மகாத்மா காந்திக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் எத்தகைய உறவு இருந்தது என்பதை ஆர்.என். ரவி போன்றோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1938 இல் ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இளமை துடிப்புடன் செயல்பட்டு வந்த சுபாஷ் சந்திர போசை தலைவராக நியமிக்க பரிந்துரை செய்தவர் காந்தியடிகள். அதேபோல, 1939 இல் திரிபுரியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசை விட்டு வெளியேறியதோடு, இந்தியாவை விட்டு வெளியேறி ஆயுதம் ஏந்திய போராட்ட முறையை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து பிரிட்டீசாரின் பகை நாடுகளின் தலைவர்களான ஹிட்லரையும், முசோலினியையும் சந்தித்து அவர்களது ஆதரவை பெற்று, ஜப்பான் நாட்டின் ஒத்துழைப்போடு இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அணுகுமுறை பலன் தரும் என்று அவர் நம்பினார்.

பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போர் தொடங்கிய போது சிங்கப்பூர் வானொலியில் மகாத்மா காந்தியின் வாழ்த்துகளை கோருகிற வகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசும் போது, ‘தேசப்பிதாவே எங்களை வாழ்த்துங்கள், இன்ப துன்பங்களிலும், வெற்றி தோல்விகளிலும் நான் உங்களுடன் இருப்பேன். இந்தியா விடுதலை அடைவதற்கு எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மனமுவந்து அளிப்போம்” என்று அவர் பேசிய உணர்ச்சிமிகு உரை, இந்தியா எங்கும் எதிரொலித்தது. அப்போது அவர்கள் பயன்படுத்திய கொடி என்பது காங்கிரஸ் மகாசபை ஏற்றுக் கொண்ட கைராட்டை சின்னம் பொறித்த மூவர்ண கொடி தான் என்பதை அரைவேக்காடு ஆர்.என். ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக சுபாஷ் சந்திரபோஸ் தொடுத்த போராட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இரண்டாவது உலகப் போரில் சுபாஷ் சந்திரபோசை ஆதரித்த நாடுகள் தோல்வியடைகிற நிலை ஏற்பட்ட போது, இவரது முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள். 

150 ஆண்டு கால பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சையில் வழியில் போராடித் தான் வெற்றி பெற முடியும் என்ற மகாத்மா காந்தியின் அணுகுமுறை மூலமாகத் தான் இந்தியா விடுதலை பெற்றது. ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு வகிக்காமல், ஒரு துரும்பை கூட போடாமல் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக இருந்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்., இந்துமகாசபை வழிவந்த பாரதிய ஜனதா கட்சியினர். சுதந்திரம் பெற்று ஆகஸ்ட் 15, 1947 மற்றும் ஜனவரி 27, 1950-க்கு பிறகு ஜனவரி 26, 2022 வரை 52 ஆண்டுகள் நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுத்த தேசபக்தியே இல்லாத ஒரு பாசிச இயக்கம் தான் பா.ஜ.க. என்ற கரைபடிந்த வரலாற்றை எந்த சக்தியாலும் துடைக்க முடியாது. இதன்மூலம் ஆர்.என். ரவி போன்றவர்கள் செய்கிற வரலாற்று புரட்டுகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.