Skip to main content

ராகுல்காந்தி பகிரங்கமாக அறிவித்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்: கே.எஸ். அழகிரி

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

ddd

 

2021 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், 25 சட்டமன்றத் தொகுதிகளை பெற்றது. மேலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள குமரி நாடாளுமன்றத் தொகுதியையும் பெற்றது.

 

இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 


தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், காங்கிரஸ் கட்சியின் தொகுதி ஒப்பந்தம் மிகுந்த மகிழ்ச்சியுடன் நிறைவேறியிருக்கிறது. மத்திய பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் இயங்கும் அ.தி.மு.க.வின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டதே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. 

 

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட அ.தி.மு.க. 5 லட்சம் வாக்குகள், அதாவது, 1.1 சதவிகித கூடுதல் வாக்குகளைப் பெற்றுத்தான் ஆட்சி அமைத்தது. அதேபோல, 2019 மக்களவை தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை விட 60 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று 54 சதவிகித வாக்கு வங்கியோடு 39 தொகுதிகளில், 38 இடங்களில் வெற்றி பெற்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இமாலய சாதனையைப் பெற்றது. 

 

இந்தப் பின்னணியில் தான், 2021 சட்டமன்றத் தேர்தலை தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் எதிர்கொள்ள இருக்கின்றன. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கொள்கையின் அடிப்படையிலானது. எண்ணிக்கையின் அடிப்படையிலானது அல்ல. தமிழக மக்கள் நலன்சார்ந்து, தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவது காலத்தின் கட்டாயமாகும். தமிழக மக்களுக்கு விடிவு ஏற்பட வேண்டுமானால், பா.ஜ.க.வின் பிடியில் இருக்கிற அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். 

 

நேற்று, தி.மு.க. சார்பில் திருச்சியில் நடைபெற்ற தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உரையாற்றும் போது, பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், ஜீவா ஆகியோர் விரும்பிய சமத்துவ ஆட்சியை நிச்சயம் அமைப்போம் என்று சூளுரை மேற்கொண்டதை தமிழக காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன். தமிழக அரசியல் வரலாற்றில் பல திருப்பங்களை உருவாக்கிய திருச்சி, மீண்டும்  திருப்பத்தை ஏற்படுத்துவதற்கு அடித்தளம் அமைத்திருக்கிறது. 

 

திருச்சி பொதுக்கூட்டத்தில், தமிழகத்தின் விடியலுக்கான முழக்கமாக 7 உறுதிமொழிகளை மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு அறிவித்திருக்கிறார். நவீன தமிழகத்தை உருவாக்குகிற நோக்கத்தில், தமிழகத்தின் வளர்ச்சியை சீர்குலைத்த அ.தி.மு.க. ஆட்சியை அகற்றி, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைக்கிற நோக்கத்தில், தொலைநோக்குப் பார்வையோடு உறுதிமொழிகளை அறிவித்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும். 

 

சமீபகாலமாக, எந்த திசையில் செல்கிறோம் என்று ஆட்சியாளர்களுக்கே புரியாமல் ஊழல் செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்ததால், தமிழகம் தத்தளித்துக் கொண்டிருந்ததை அனைவரும் அறிவார்கள். இந்நிலையில், 7 கோடி மக்களின் இதயங்களை வெல்வதற்கு 7 தொலைநோக்குத் திட்டங்கள் திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

 

திருச்சி மாநாட்டில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படுகிற வகையில், மாநாட்டில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்கள் வழிமொழிய, தமிழக விடியலுக்கான உறுதிமொழிகளை எடுத்திருக்கிறார். அந்த உறுதிமொழிகளின் அடிப்படையில் வருகிற சட்டமன்றத் தேர்தலை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

 

dmk

 

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களில் இருந்தும், 7 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியின் ஜனநாயக விரோத வகுப்புவாத அரசியலில் இருந்தும் தமிழகத்தை மீட்டெடுக்க தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பிரதான பங்கு வகிக்கிற காங்கிரஸ் கட்சி தீவிரமான முனைப்புடன், தோழமை உணர்வுடன் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மக்களவை தேர்தலில் பரப்புரை மேற்கொண்ட ராகுல்காந்தி 2021 சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டுமென்று பகிரங்கமாக அறிவித்ததை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

 

எனவே, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அரசியல் பாதை தெளிவாக அமைக்கப்பட்டு விட்டது. குறிக்கோள் அறிவிக்கப்பட்டு விட்டது. நோக்கம் தெளிவாக இருக்கிறது. செயல் திட்டம் தயாராகி விட்டது. மத்திய பா.ஜ.க. ஆட்சியின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் காலூன்றுவதற்கு காரணமாக இருக்கிற ஊழலில் ஊறித் திளைத்த அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவதே தமிழக காங்கிரசின் ஒரே நோக்கம், ஒரே குறிக்கோள். 

 

அந்த நோக்கத்தை அடைவதற்கு தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் இன்று முதல் கண் துஞ்சாமல், அயராமல் கடமை உணர்வோடு மதவாத, வகுப்புவாத சக்திகளை தமிழகத்தில் நுழையவிடாமல் தடுக்கும் மகத்தான லட்சியப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.