Skip to main content

இதை செய்யாத வரை, மக்களை மோடி அரசால் காப்பாற்ற முடியாது... கே.எஸ்.அழகிரி

Published on 25/05/2020 | Edited on 25/05/2020
ks alagiri - Congress




தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி அறிவித்த நிவாரணம் ரூபாய் 20 லட்சம் கோடி, உண்மையில் கணக்கிட்டால் ரூபாய் 1 லட்சத்து  86 ஆயிரத்து 650 கோடி தான். இது மொத்த ஜிடிபியில் 0.91 சதவிகிதமே தவிர 10 சதவிகிதம் அல்ல.


பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 2018-19 இல் 5.87 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், 2019-20 இல் 2.57 லட்சமாக அது குறைந்துள்ளது.

வறுமை ஒழிப்புத் திட்டமான தீனதயாள் அந்தியோதயா யோஜ்னா-தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், 2018-19 ஆம் ஆண்டு புதிய வேலைவாய்ப்புகள் 1.78 லட்சத்திலிருந்து 44 ஆயிரத்து 66 ஆக 2019-20 இல் குறைந்துள்ளன.

 
இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த செயல்திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. இதிலிருந்து இந்தியாவை மீட்டு, மீண்டும் தொழில் உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு மேலும் அதிக நிதியை ஒதுக்கவேண்டும். வெறும் அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது. மக்களிடையே வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு நிதியை ஒதுக்க வேண்டும். இதை செய்யாதவரை பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை மோடி அரசால் காப்பாற்ற முடியாது.

 

 

Narendra Modi



 
மனித இனம் இதுவரை காணாத வகையில் கரோனா தொற்று காரணமாக அச்சம் பீதியால் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் வேலைவாய்ப்பு, வருமானத்தை இழந்து வாழ்வாதாரமே மிகப்பெரிய கேள்விக் குறியாகிவிட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி 136 கோடி மக்களுக்கு மொத்த உள்நாட்டு மதிப்பில் 10 சதவிகிதமான ரூபாய் 20 லட்சம் கோடி தொகுப்பு நிவாரண திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தின் விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நான்கு கட்டங்களாக வெளியிட்டார். அறிவிக்கப்பட்டது ரூ 20 லட்சம் கோடி நிவாரண திட்டமல்ல, அனைத்து அறிவிப்புகளையும் கணக்கிட்டால், ரூபாய் 1 லட்சத்து 86 ஆயிரத்து 650 கோடி தான் மத்திய அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்று நிதியமைச்சரின் அறிவிப்பை ஆய்வு செய்த பொருளாதார வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள். உண்மையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.91 சதவிகிதமே தவிர 10 சதவிகிதம் அல்ல. இதனால் நாட்டு மக்களிடையே பெருத்த ஏமாற்றமும், எதிர்காலம் குறித்து கடும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

 
நாட்டில் நிலவும் அசாதாரண சூழலின் காரணமாக 13 கோடி 50 லட்சம் பேர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டின் வளர்ச்சி விகிதம் 1 சதவிகிதத்திற்கு கீழே பூஜ்ஜியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால், நாட்டு மக்களில் எவரும் பாதிக்கப்படாதவர்களே இல்லை என்ற நிலை ஏற்படப் போகிறது.  இந்நிலையில் மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் எதிர்பார்த்த பலனை தராமல் மக்களை கடுமையாக பாதித்து வருகின்றன.


பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், தீனதயாள் அந்தியோதயா யோஜ்னா-தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் போன்றவற்றில், முதன்மையான வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் இந்த நிதியாண்டில் கடுமையாக குறையும் என நாடாளுமன்றத்தில் மத்திய தொழிலாளர் மறறும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தாக்கல் செய்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 2018-19 இல் 5.87 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், 2019-20 இல் 2.57 லட்சமாக குறைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றபின், பல மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. 2019-20 இல் இதுவரை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு உருவாக்குதல் பெருமளவு குறைந்துள்ளது.

வறுமை ஒழிப்பு திட்டமான தீனதயாள் அந்தியோதயா யோஜ்னா-தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், 2018-19 ஆம் ஆண்டு புதிய வேலைவாய்ப்புகள் 1.78 லட்சத்திலிருந்து 44 ஆயிரத்து 66 ஆக 2019-20 இல் குறைந்துள்ளன. குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடப்பு நிதியாண்டில் இதன் அளவு பெருமளவு குறைந்துள்ளது.

 

nakkheeran app




காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலும் வேலை வாய்ப்பு கடுமையாக குறைந்தது. 2018-19 இல் 26 ஆயிரத்து 796  மனித நாள்களிலிருந்து இருந்து 20 ஆயிரத்து 577 ஆக வேலைவாய்ப்பு குறைந்தது. இதனால் கிராமப்புற பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கவுசல்யா யோஜ்னாவின் கீழ், 2018-19 இல் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பெற்றோரின் எண்ணிக்கை குறைந்ததுள்ளது. பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை 2.4 லட்சத்திலிருந்து 1.74 லட்சமாகவும், வேலைவாய்ப்பு 1.35 லட்சத்திலிருந்து 1.10 லட்சமாகவும் குறைந்துள்ளது. இந்த மத்திய அரசின் திட்டங்களில் வேலை வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை போல, மாநிலங்களிலும் இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பமுடியவில்லை.

இந்நிலையில் இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த செயல்திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. இதிலிருந்து இந்தியாவை மீட்டு, மீண்டும் தொழில் உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு மேலும் அதிக நிதியை ஒதுக்கவேண்டும். வெறும் அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது. மக்களிடையே வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு நிதியை ஒதுக்க வேண்டும். இதை செய்யாதவரை பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை மோடி அரசால் காப்பாற்ற முடியாது. இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.