Skip to main content

"இரு அணிகளையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடாது" - கே.பி. ராமலிங்கம் 

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

k p ramalingam talks about erode by election in alliance 

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகின்றார். இதனையொட்டி திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதேபோன்று அதிமுக சார்பாக பழனிசாமி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ஈரோட்டில் நேற்று பாஜக சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கலந்துகொண்டார். பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  பேசுகையில், " ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா அல்லது அதிமுகவில் உள்ள இரு அணிகளில் எந்த அணிக்கு ஆதரவு அளிப்பது  என்பதை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இன்னும் இரு தினங்களில் அறிவிப்பார். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டால் அவர்கள் செய்யும் ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் அங்கீகாரத்தை தேடிக் கொள்வார்கள்.

 

எனவே இந்த இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அதிமுகவின் இரு அணியும் ஒன்று சேர வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு ஆகும்.  இரு அணிகளையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடாது. அவர்களின் கட்சி விஷயங்களில் தலையிட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. திமுகவிற்கு எதிராக மக்கள் உள்ளனர். எனவே பாஜக முன்னணியில் இருக்க வேண்டும் என்று மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஓ. பன்னீர்செல்வம் எங்களுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார்.  அதை நாங்கள் வரவேற்கிறோம்.

 

திமுகவை வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஒரே அணியில் இருந்து அவர்களை எதிர்க்க வேண்டும். பாஜக தேர்தலில் போட்டியிட்டால் திமுகவின் ஊழலை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்போம். திமுக கூட்டணிக் கட்சிகளை வீழ்த்த பாஜகவால் மட்டுமே முடியும். இந்த தேர்தலில் பாமக போட்டியிடாதது அவர்களது தனி கருத்து. இருந்தாலும் பாமக இன்னும் தேசிய கட்சியில் எங்கள் கூட்டணியில் தான் உள்ளது" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது