Skip to main content

நாங்க என்ன குச்சிமிட்டாய் வச்சுகிறதா..? தி.மு.க.காரன் எங்க போவான்? கே.என்.நேரு பேச்சு: கை தட்டி, விசில் அடித்த தொண்டர்கள்

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

 

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்காத அதிமுக அரசை கண்டித்து ஜூன் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று கே.என்.நேரு பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

dmk k n neru


 

கே.என்.நேரு பேசுகையில், கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது திருச்சியில் உள்ள விவசாயிகள் நிலத்தடி நீர் விவசாயத்திற்கு குறைகிறது என்று சொன்னார்கள். உடனே கலைஞர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். தடுப்பணை கட்டிக்கொடுத்தார். அதே போல வெள்ளம் வந்தபோது, இந்த கோரையாறு உய்யக்குண்டானை சரி செய்ய 77 கோடியில் தொட்டி பாலம் கட்டிக்கொடுத்தார். 2 டேம், 8 ஏரி இருக்கிறது. 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற்று வருகிறது. அதனால் தற்போது இந்த தண்ணீர் பிரச்சனையில் இருந்து தப்பித்து இருந்தோம்.


 

 

இந்த 8 ஆண்டு ஆட்சியில் மேட்டூரில் இருந்து திறந்து விடும் தண்ணீரை 2 இலட்சம் கனஅடி காவிரியிலும், 3 இலட்சம் அடி கொள்ளிடத்திலும் தண்ணீர் விட்டால் 3000 கிராமங்கள் மேல் பயன்பெறும். தற்போது முதன்மை பொறியாளரிடம் கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடுங்கள் 500 கிராமங்களுக்கு மேல் நிலத்தடி நீர் பெருகும் என்றேன். ஆனால் அதை அவர் கேட்கவே இல்லை. திறந்தால் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு நாளிலே திறந்து விட்டு கடலிலே கலக்க செய்து விட்டார். இங்கே இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதை எல்லாம் கேட்கவில்லை என்று பேசிக்கொண்டு இருந்தவர், அடுத்து அரசியல் பக்கம் திரும்பினார். 
 

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. கட்சி கருத்து அல்ல. கூட்டணியில் சேர்ந்து எல்லாம் ஜெயிச்சுட்டாங்க. ஏற்கனவே கூட்டணியில் இருந்தபோது யுவராஜ், மயூரஜெயக்குமார் கழக ஆட்சியை தொடர்ந்து விமர்சனம் செய்தார்கள். காங்கிரஸ் கட்சியுடன் இருந்த இந்த உறவை கெடுத்தது இவர்கள்தான். சட்டமன்றத்தில் தலைவர் முன்னாடியே செல்லக்குமார் விமர்சனம் செய்கிறார். ஆனால் அதே செல்லக்குமாரை தற்போது கூட்டணியில் வேலை செய்து ஜெயிக்க வைக்கிறோம். 

 

dmk k n neru




நேற்று ஒருவர் பேசுகிறார் 'நாங்க தென்தென்னையில் 200 வட்டத்தில் 35 வட்டத்தை பெற்றே திருவேன்' என்கிறார். நான் தலைவருக்கு சொல்வேன். இந்த மக்களுக்கு நாம் பயன்பெற வேண்டும் என்றால் உள்ளாட்சி தேர்தலில் தனித்தே நின்றால் நன்றாக இருக்கும். எவ்வளவு நாளுக்குத்தான் பல்லக்கைத்தூக்குவது. தூக்கிக்கொண்டேதான் இருக்கிறோம். இது என்னுடைய கருத்து. தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ? அதை ஏற்றுக்கொள்வேன். காங்கிஸ் கட்சிக்குள் ஒவ்வொருத்தரும் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்கிற போட்டியில் 35 சீட்டு வாங்குவேன், 50 சீட்டு வாங்குவேன்னு சொல்றான். நாங்க என்ன குச்சிமிட்டாய் வச்சுகிறதா? தி.மு.க.காரன் எங்க போவன். இது என்னுடைய கருத்து. தலைவருடைய கருத்து அல்ல. திருச்சியை பொறுத்தவரையில் நாங்க தனியாக நிற்க வேண்டும் என்பதை சொல்லி வலியுறுத்துவேன் என்றார். 
 

அப்போது கூட்டத்தில் உள்ள தொண்டர்களின் கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆனது.  


 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்