Skip to main content

கே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

 

அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, இன்று அதிகாலை தமிழக காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். 

கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டதற்குப் பிறகும், அவர் நடத்தும் சமூக வலைதளங்களில் அதிமுக கட்சி பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், இன்னும் அதிமுகவில் அவர் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருவதாகவும் அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு. இதன் அடிப்படையில் வந்த புகாரை தொடர்ந்து கோவை மாவட்ட சூலூர் பொலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர். 
          

கே.சி.பழனிசாமி எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி. 40 ஆண்டு காலமாக அதிமுகவில் இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தர்மயுத்தம் நடத்திய துணை முதல்வர் ஓபிஎஸ் ஆதராவளராக இருந்தார். ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைந்த பிறகும் அவரது ஆதரவாளராகவே செயல்பட்டார் கே.சி.பழனிச்சாமி. 

 

K. C. Palanisamy


           

 

ஜெயலலிதாவின் மறைவையொட்டி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா. இவரது நியமனம் செல்லாது என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார் கே.சி.பழனிசாமி. இதற்கு பதில் அளிக்குமாறு சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஆணையம். அவர் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் கடந்த 3 வருடங்களாக அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையே, சசிகலா நியமனத்துக்கு எதிராகவும் இந்த விவகாரத்தில் தகுந்த முடிவை ஆணையம் எடுக்க வலியுறுத்தியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கே.சி.பழனிச்சாமி. அந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. 
                

இந்த சூழலில், கடந்த 2018-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விவாகரம் தேசிய அளவில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய பாஜக அரசு நியாயமான நடவடிக்கையை எடுக்காது போனால் பாஜக அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக எம்.பி.க்கள் ஆதரிப்பார்கள் என்கிற ரீதியில், தொலைக்காட்சி விவாதங்களில் பதிவு செய்தார் கே.சி.பழனிசாமி. பாஜகவை நேரடியாக மிரட்டுவதாக இருப்பதாக அவர் மீது எழுந்த புகாரில் கே.சி.பி.யை எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்சும் இணைந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினர். 

 


           

ஆனால், தனது நீக்கம் செல்லாது என தெரிவித்த கே.சி.பி., ‘’ அதிமுக சட்ட விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளரால் மட்டுமே கட்சி உறுப்பினர்களை நீக்க முடியும். ஆனால், சட்டவிதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் அதிமுகவில் இல்லை என்பதால் முதல்வரும் துணை முதல்வரும் என்னை நீக்குவதற்கு அதிகாரமற்றவர்கள். அதனால் என்னை நீக்கியது செல்லாது ‘’ என போர்க்கொடி உயர்த்தினார். இந்த விவகாரம் இப்போதும் அதிமுகவில் அலையடித்துக் கொண்டுதானிருக்கிறது.
             

இதற்கிடையே, தேர்தல் ஆணையத்திலும் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் சசிகலா நியமனத்துக்கு எதிரான வழக்குகளில் சீரியஸ் காட்டி வந்தார் கே.சி.பழனிச்சாமி. சசிகலாவுக்கு எதிரான அரசியலை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். மேலும், அதிமுக கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் செய்து, பொதுச்செயலாளர் பதவியை ஒழித்துவிட்டு, அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் என பதவியை உருவாக்கினர் எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்சும். அதிமுக பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்ட இந்த சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது அதிமுக தலைமை. 
             
ஆனால், இந்த சட்ட திருத்தம் செல்லாது என்றும், இதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் மீண்டும் ஒரு வழக்கை ஆணையத்தில் தாக்கல் செய்தார் கே.சி.பழனிச்சாமி. இந்த புகாரும் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழலில், டெல்லியிலுள்ள மூத்த வழக்கறிஞர்கள், ‘’ ஆணையத்திலும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் கே.சி.பழனிசாமி போட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வையுங்கள். இல்லையெனில், எதிர்காலத்தில் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் ‘’ என எடப்பாடி பழனிச்சாமிக்கு தகவல் தந்தனர்.

இதனை அடுத்து, தலைமைச்செயலகத்துக்கு கே.சி.பி.யை எடப்பாடியும் ஓபிஎஸ்சும் வரவழைத்தனர். அந்த சந்திப்பின்போது, ’’வழக்குகளை வாபஸ் பெறுங்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை நாங்களும் வாபஸ் பெறுகிறோம்’’ என கே.சி.பி.க்கு அழுத்தம் தந்தனர். ஆனால், வழக்குகள் வாபஸ் பெறுவதில் அவசரம் காட்ட முடியாது என மறுத்து விட்டு வந்தவர், ’’அதிமுகவில் மீண்டும் என்னை இணைத்துக்கொள்வதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார்’’ என சொல்ல, அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அவரை கட்சியில் சேர்த்துக்கொண்டதாக எந்த தகவலையும் நாங்கள் சொல்லவில்லை என அதிமுகவிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 
         
இதனால் கோபம் அடைந்த கே.சி.பழனிச்சாமி, சசிகலா நியமனம், அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரணைக்கு வருவதில் தீவிரம் கவணம் செலுத்தி வந்தார். டெல்லி உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, பிப்ரவரி 6-ந்தேதி வருகிறது. இந்த சூழலில்தான் கடந்த ஒரு வாரமாக,’ வழக்குகளை வாபஸ் வாங்குங்கள் ’ என தொடர்ந்து அவருக்கு மிரட்டலும் அழுத்தமும் கொடுக்கப்பட்டது. ஆனால், வாபஸ் பெற அவர் மறுத்துள்ளார். இந்த சூழலில்தான், கைது நடவடிக்கை அவர் மீது பாய்ந்துள்ளது ‘’ என்கிறார்கள் கே.சி.பி.க்கு ஆதரவான அதிமுகவினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.