Skip to main content

என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ள ரூபாய் 25 லட்சம் போதாது... கே. பாலகிருஷ்ணன்

Published on 15/05/2020 | Edited on 15/05/2020
cpim



தொழிலாளிகளின் உயிர் பாதுகாப்பில் சிக்கனத்தை கடைபிடிக்கும் என்எல்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''07.05.2020 அன்று என்எல்சி நிறுவனத்தின் இரண்டாம் அனல்மின் நிலையத்தில் ஆறாவது பாய்லர் வெடித்ததில், இதுவரை 4 தொழிலாளிகள் மரணம் அடைந்திருக்கிறார்கள். இதர 4 பேர் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்கள், வேறு பலர் காயமடைந்துள்ளனர் என்கிற செய்தி வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலையும், முழுமையான ஆதரவையும் தெரிவிப்பதோடு, இந்த துயரத்துக்கு என்எல்சி நிர்வாகம் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

கடந்த கால விபத்துகளிலிருந்து நிர்வாகம் பாடம் கற்றதாக தெரியவில்லை. 2016ல் 5வது பாய்லரும், 2019ல் 6வது பாய்லரும் வெடித்து விபத்து ஏற்பட்டபோது அதற்கான காரணங்களை பரிசீலித்து அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால், அதனை நிர்வாகம் செய்யவில்லை. மேலும், பராமரிப்புக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. பாய்லர் கட்டமைக்கும் பிஎச்இஎல் போன்ற நிறுவனங்களின் உயர் தொழில்நுட்பத் திறனைக் கணக்கிலெடுத்து அவர்களிடம் பராமரிப்புப் பணியை ஒப்படைக்காமல், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் குறைந்த செலவில் உள்ளூர் காண்ட்ராக்ட் மூலம் அவசரகதியில் செய்யப்படுவது விபத்துக்கு ஒரு முக்கிய காரணமாக தெரிய வருகிறது.

 

 


மேலும், காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் இருப்பதும், தொலைநோக்குப் பார்வையுடன் முறையான கண்காணிப்பு செய்யாமலிருப்பதும், பாதுகாப்பு சாதனங்கள் விபத்தின்போது தேவைப்படும் உபகரணங்கள் போன்றவற்றின் பற்றாக்குறையும், நிர்வாகத்தின் அக்கறையற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. இது தொழிலாளிகளின் உயிரை மலிவாக கருதும் செயலாகும்.
 

 

தற்போது இந்த விபத்தின் காரணமாக தொழிலாளிகள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்கி அவர்களது உயிரும் வாழ்வும் மதிக்கப்படுகிறது என்கிற உணர்வை உருவாக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை நிர்வாகம் உடனடியாக எடுத்திட வேண்டும்;
 

nakkheeran app


 

1)    மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு நிர்வாகம் அறிவித்துள்ள ரூபாய் 25 லட்சம் போதாது. எனவே, அதனை உயர்த்தி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் கொடுக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு போதுமான இழப்பீடும், மீண்டும் பணியில் சேர முடியாதவர்களுக்கு அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு மாற்று வேலைவாய்ப்பும் அளிக்க வேண்டும்.
 

2)    விபத்து நடந்ததற்கான காரணங்களைப் பரிசீலிக்க உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்று அமைத்து அதில் தொழிற்சங்க பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு இதில் கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 

3)    எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கான வழிகாட்டுதலையும் உருவாக்கிட வேண்டும் என என்எல்சி நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது'' என கூறியுள்ளார்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 2000 கோடிக்கு என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை விற்க மத்திய அரசு ஆலோசனை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Central government advises to sell shares of NLC company for Rs.2000 crore

இந்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தினுடைய 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு இதேபோல் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அன்றைய ஆளும் கட்சியான அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தின. பிறகு தனியாருக்கு விற்கப்படுவதாக இருந்த 5 சதவீத என்.எல்.சி பங்குகளையும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வாங்குவதாக முடிவெடுத்தது. 

இந்த நிலையில், தற்போது மீண்டும் என்.எல்.சியின் 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 2013ல் என்.எல்.சியின் ஒரு பங்கின் விலை ரூ.75 ஆக இருந்தது. தற்போது ஒரு பங்கின் விலை ரூ. 200க்கும் மேல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி, 7 சதவீதம் பங்குகள் என்பது ரூ. 2000 கோடிக்கும் மேலாக வரும் எனச் சொல்லப்படுகிறது. 

தமிழ்நாடு அரசின் நிதி நிலை சூழ்நிலையில், 2000 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்க இயலுமா என்ற கேள்வி எழுவதாகச் சொல்லப்படுகிறது. என்.எல்.சி. இந்தியா லிமிடெட் அரசு நிறுவனத்திற்காகத் தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு உரிய நிவாரணமும், பணியும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனைக் கண்டித்து பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் போராடும் நிலையில், மத்திய பாஜக அரசு தற்போது என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பிரச்சனையைத் தீவிரப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Next Story

'சிறிய அணு உலைகள்'; என்.எல்.சியின் திட்டத்தால் அதிர்ச்சி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'small nuclear reactors'; Shocked by NLC's plan

என்எல்சியில் சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க திட்டம்தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான தகவலை என்.எல்.சி தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய அணுசக்தி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறிய வகை அணு உலைகள் மூலம் 300 மெகாவாட்டுக்கும் குறைவான மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாகவும், 2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வு இலக்கை  எட்ட சிறிய அளவிலான அணு உலைகள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் என்எல்சி-ன் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

nn

நெய்வேலி கடலூர் பகுதியில் என்எல்சிக்கு நிலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது  பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக தான். ஆனால் அந்த பகுதியில் 300 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறு அணு உலைகளை அமைப்போம் என்று சொல்வது மக்களுக்கு விரோதமானது. அணு உலையில் இருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாளக்கூடிய தொழில்நுட்பம் எந்த நாட்டிலும் கிடையாது. அப்படி சிறிய அணு உலைகள் அமைக்கப்பட்டால் அதன் கழிவுகளை என்ன செய்யப் போகிறார்கள். அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் எப்படி தடுக்கப்படும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. தமிழக அரசு மக்களின் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தது எதற்காகவோ அந்த பயன்பாட்டிற்கு மட்டும் அதனை பயன்படுத்த வேண்டும். நினைத்தபடி எல்லாம் மாற்றிக் கொள்ளும் எந்த உரிமையும் என்எல்சி நிர்வாகத்திற்கு கிடையாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க இருப்பதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.