ஜூ.வி.செய்தியாளர்கள் மீது வழக்கு! தமிமுன் அன்சாரி கண்டனம்!

ஜூனியர் விகடன் இதழின் செய்தியாளர் மற்றும் புகைப்படக்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளிடம் கருத்து கணிப்பு நடத்தியதற்காக ஜூனியர் விகடன் இதழின் செய்தியாளர் சிந்து, புகைப்படக்காரர் ராம்குமார் ஆகியோர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் குமரி மாவட்டம், மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது.இதை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

THAMIMUN ANSARI

அவர்களுக்கு இந்திய குடியுரிமை தேவையா?இரட்டை குடியுரிமை தேவையா?அல்லது இலங்கைக்கு திரும்பி செல்ல விருப்பமா?என்ற 3 கேள்விகளுடன் அம்மக்களை செய்தியாளர்கள் சந்தித்து கருத்து கேட்டதை தமிழக அரசு பொறுத்துக் கொள்ளாமல் வழக்குகளை பாய்ச்சியுள்ளது.

அந்த மக்களின் பிரச்சனைகள் மைய்ய நீரோட்டத்திற்கு வந்திருக்கும் போது, இது குறித்து அவர்களிடம் கருத்து கேட்பதில் எந்த தவறும் இல்லை. அதுதான் ஜனநாயகமாகும். உண்மையான நிலவரம் வெளி உலகிற்கு தெரியக்கூடாது என்ற நோக்கோடு மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. இது பத்திரிக்கையாளர்களின் நியாயமான சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்.

தமிழக அரசு, இவ்விரு பத்திரிக்கையாளர்களின் மீது போட்ட வழக்குகளை திரும்ப பெற்று, இதழியல் ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு கூறியுள்ளார்.

photographers reporters statement THAMIMUN ANSARI vikatan
இதையும் படியுங்கள்
Subscribe