Skip to main content

''போயஸ் கார்டன்  தீர்ப்பு மாதிரிதான் இந்தத் தீர்ப்பும் வரும்''-புகழேந்தி பேட்டி  

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

"This judgment will also come like the Boise Garden judgment" - Pugahendi interview

 

கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்குப் பின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கடந்த 10 நாட்களுக்குப் பிறகு நேற்று அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்பட்டு சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் மூன்றாவது மாடியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு பொருட்கள் காணாமல் போனதாக இபிஎஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா அதிமுகவின் கொள்கைப்பரப்புச் செயலாளராக இருந்தபொழுது வழங்கப்பட்ட செங்கோல் அதேபோல் அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசுப்பொருட்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களைக் காணவில்லை என அலுவலக மேலாளர் மகாலிங்கம் புகார் தெரிவித்துள்ளார்.

 

admk

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, ''மகாலிங்கம் என்றாலே நீங்கள் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அப்படியே ஒரு ஊமை விழிகள் குனிஞ்சுகிட்டே இருப்பார். பண்றது எல்லாம் பயங்கரமான வேலைகள். இவரெல்லாம் போய் இதைக் காணும் அதை காணும்னு சொல்லக்கூடாது. என் வீட்டில் புகுந்து நான் எடுக்கணுமா? அது அவருடைய சொந்த ஆபீஸ், சொந்த கட்சி, இன்னைக்கும் ஓபிஎஸ்தான் ஒருங்கிணைப்பாளர். நீங்க ஆயிரம் பேரைக் கையில் வைத்துக்கொண்டு பேசலாம். ஆனால் அவர்தான் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர். தொண்டர்கள்தான் ஓட்டு போட்டு முடிவெடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருகிறது. அந்தத் தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தத் தீர்ப்பில் இருக்கின்ற தவறுகளை எல்லாம் எடுத்துச் சென்று சொல்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. அங்கே பார்த்துக் கொள்வோம்.

 

எல்லார் மேலயும் ரெய்டு போகுது. சிபிஐ போகுது. ஜெயில்ல இருந்து கட்சி நடத்துவீங்களா? கம்பி எண்ணிட்டு கட்சி நடத்துவீங்களா பழனிசாமி. உங்களுக்கு ஜால்ரா அடிப்பார்களா அங்குள்ள லீடர்ஸ்கள் எல்லாம். இந்த கட்சி சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்று சொன்னால் ஓபிஎஸ் தான் இந்த சுதந்திர பூமியில் தலைவராக நடத்திச் செல்ல முடியும். ஜெயில்ல உட்கார்ந்து கொண்டு கட்சியும் நடத்த முடியாது. போயஸ் இல்லத்தை அரசு இல்லமாக மாற்றுவது தொடர்பான கேஸ் சி.வி.சண்முகம் தான் ரொம்ப நிதானமாக கொண்டு போய் கோட்ட விட்டார். அது தீபா தீபக்கிற்கு போயிடுச்சு. அடுத்து சுப்ரீம் கோர்ட்ல போயிட்டு கோட்டவிடுவார் பாருங்க. அவருடைய ஆத்திரமும், அவருடைய செயல் இழப்பும், அவருடைய நிதானமற்ற தன்மையும் தான் எங்களுக்கு ஏற்படுகின்ற வெற்றி. கவலையே இல்லை போயஸ் கார்டன்  தீர்ப்பு மாதிரி தான் இந்தத் தீர்ப்பும் வரும். இதில் எந்தச் சோர்வும் இல்லை. இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து போவதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. ஆகவே தொண்டர்கள், பொதுமக்கள் என தமிழக முழுவதும் ஓபிஎஸ் அலை வீசுகிறது. மக்கள் ஆதரிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். ஒரு தேர்தல் வந்தால் தெரிந்து விடும் எடப்பாடி பழனிசாமி யோகிதை. பேசட்டும்... பேசட்டும்... எவ்வளவு நாள் பேசுறாங்கன்னு பார்ப்போம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.