Skip to main content

கரை வேட்டி கட்டாத மாவட்ட செயலாளராக அவர் செயல்பட்டிருக்கிறார்... -ஜோதிமணி

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

கடந்த ஏப்ரல் 18ம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கரூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்குப்பெட்டிகள் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது, வரும் மே 19ம் தேதி எண்ணப்பட உள்ளது. இதையொட்டி அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

jothimani


இந்த நிலையில் கரூர் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறித்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடனான கருத்து கேட்பு கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அன்பழகன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 

வாக்கு எண்ணும் அறைக்குள் யாரும் நுழைந்து விடாதபடி அமைக்கப்பட்டுள்ள கம்பி வலை மற்றும் துணை ராணுவம் மற்றும் காவலர்களின் சுழற்சி முறை பாதுகாப்பு பணி, சி.சி..டி.வி. கேமரா கண்காணிப்பு உள்ளிட்டவற்றை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட வேட்பாளர்களும், அந்தந்த கட்சியின் முகவர்களும் இருந்தனர்.
 

இதைத்தொடர்ந்து கரூர் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, 

 

jothimani



கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாகவே செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட தேர்தல் அதிகாரி தொலைபேசியில் என்னிடம், தேர்தலை நான் நிறுத்துவேன் என கூறும் அளவுக்கு மோசமான நிலை இருந்தது. மாவட்ட அதிகாரியே இப்படி இருக்கும் போது அவருக்கு கீழே உள்ள அதிகாரிகள் பாதுகாப்பு குறைபாடுடன் இருப்பது ஆச்சர்யம் இல்லை. வாக்கு எண்ணிக்கையை இவர்கள் தலைமையில் நடத்தக்கூடாது. வாக்கு எண்ணிக்கையை இந்த அதிகாரிகள் நடத்தினால் நியாயமாக இருக்காது.

மாவட்ட ஆட்சியர் எங்கள் மீது கொடுத்த பொய் புகாரில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தோம். விசாரணையில் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாருக்கு ஆதாரமாக சி.சி.டி.வி. பதிவைக் காட்ட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் மாவட்ட ஆட்சியர் கூறியது மிகப்பெரிய பொய் குற்றச்சாட்டு என்பதும், தேர்தல் அதிகாரிகளின் வழக்கத்தில் இல்லாத அளவில், ஒரு தேர்தல் அதிகாரி பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து, வேட்பாளர் மீதும், முகவர் மீதும் பொய் புகார் அளித்துள்ளார். எவ்வளவு தூரம் அவர் ஆளும் கட்சியின் ஊதுகுழலாக கரை வேட்டி கட்டாத மாவட்ட செயலாளராக செயல்பட்டிருக்கிறார் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும்.


தேர்தல் ஆணையத்தின்மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. புகாரை உடனே ஏற்றுக்கொண்டு அதிகாரியை அனுப்பி விசாரணை நடத்தியிருக்கின்றனர். மாவட்ட ஆட்சியரும், கண்காணிப்பாளரும் ஒரு தலைப்பட்சமாக நடந்து வருவதால் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதையும் பி.எஸ்.எப். படை வீரர்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர வேண்டும். மாவட்ட ஆட்சியரை மாற்றி விட்டு நியாயமான நேர்மையான ஒரு அதிகாரியை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்தி வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.