Skip to main content

திருமங்கலம் ஃபார்மலாவை மிஞ்சிய ஈரோடு ஃபார்முலா - ஜெயக்குமார் தாக்கு

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

jayakumar talk about erode east byeelection and dmk

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அதன் கூட்டணிக் கட்சியான திமுகவின் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கிழக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் அதிமுகவும் தங்களது தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. 

 

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைப்பதாகக் கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவிடம் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஈரோட்டில் திமுக கோமாளித்தனமான செயலை அரங்கேற்றி வருகிறது. ஆனால் ஒட்டகத்தின் மீது அமர்ந்து வாக்கு கேட்டது தவறு. அவர்கள் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களை தடுப்பதற்காக திமுகவினர் ஆங்காங்கே பந்தல் அமைத்து அடைத்து வைத்து அவர்களுக்கு 500 ரூபாய் பணமும், வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களும் கொடுக்கின்றனர்.

 

அதிலும் சைவ உணவு சாப்பிடுபவர்களாக இருந்தால் காய்கறிகள், அசைவ உணவு சாப்பிடுபவர்களாக இருந்தால் கறி, மீன், முட்டை என வேட்பாளர்களுக்கு கொடுத்து வருகின்றனர். இது ஜனநாயகத்தின் அத்துமீறல். என்னதான் ஒட்டகத்தில் போனாலும் கறி, மீன் கொடுத்தாலும் கடையில் டீ போட்டாலும் சரி இந்த இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றிபெறச் செய்து திமுகவிற்கு மக்கள் சவுக்கடி கொடுப்பார்கள். இந்த மலிவான செயல் திருமங்கலம் ஃபார்மலாவை மிஞ்சிய புது ஃபார்முலா. இத்தனை நாளாக ஏன் முதல்வர் ஸ்டாலின் சேலம் மணடல அளவிலான கள ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்கள், காவல் ஆணையர்களை அழைத்து கூட்டம் நடத்துகிறார்.

 

ஏனென்றால் இந்த நான்கு மாவட்டமும் இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பக்கத்தில் இருக்கிறது. அதனால் இந்த மாவட்டத்தின் வழியாக எங்கள் கட்சியினர் பணம் பட்டுவாட செய்வார்கள், அதனை நீங்கள் யாரும் தடுக்கக்கூடாது என முன்கூட்டியே சொல்லுவதற்காகத்தான் இந்த கள ஆய்வை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்களை ஏமாற்ற முடியாது. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்ட ஒழுக்கு சந்தி சிரிக்கிறது. ஒரே நாளில் ஒன்பது கொலை. கொலை, கொள்ளைகளின் மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளது. இதையெல்லாம் தடுக்காமல், கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்து போலியான வெற்றியை திமுக வாங்க நினைக்கிறது. ஆனால் அது மக்கள் மத்தியில் ஒருபோதும் நடக்காது” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்