Skip to main content

பேனா சின்னத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கிய ஜெயகுமார்!

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

Jayakumar started a signature movement against the kalaignar pen statue

 

முன்னாள் முதல்வர் கலைஞருக்கு கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு ஓப்புதல் வழங்கியதற்கு எதிராக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில் பேனா சின்னத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியுள்ளார்.

 

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயகுமார், “கடலுக்கு சொந்தக்காரர்களே மீனவர்கள்தான்.  எங்களது ஆட்சியில் மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்தோம். வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தோம். ஆனால், தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு மக்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அதுமட்டுமில்லாமல் அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில் தான் செயல்பட்டு வருகிறது. யாருடைய பணத்தில் ரூ.81 கோடி மதிப்பில் பேனா சின்னம் அமைப்பது. ஸ்டாலின் வீட்டுப் பணமா அல்லது திமுகவுடைய பணமா? மக்களுடைய வரிப்பணம். மக்களுடைய வரிப்பணத்தில் உங்கள் அப்பாவுக்கு நினைவுச் சின்னம் வைக்க வேண்டும் என்றால் என்ன நியாயம். 

 

சாதி, மதம் என அனைத்தையும் கடந்து உலகிற்கு பொதுமறையைக் கொடுத்த திருவள்ளுவரை விட கலைஞருக்கு 134 அடியில் சிலை வைப்பதா? இப்படி பேனா சிலை வைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பேனா சிலை அமையவுள்ள இடம் கடலும் ஆறும் கலக்கும் முகத்துவாரம். அந்த முகத்துவாரத்தில்தான் சிறிய மீன்கள், இறால்கள் உள்ளிட்டவை அதிகம் இருக்கும். அதனை நம்பி ஏகப்பட்ட கிராமங்கள் இருக்கிறது. இப்போது அங்கு பேனா சிலை அமைத்தால் மீன்களின் வரத்து குறைந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆனால், இதைப்பற்றி எல்லாம் இந்த அரசிற்கு அக்கறை கிடையாது” என்றார். 

 

இதனைத் தொடர்ந்து மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குறித்துப் பேசிய அவர், “கள்ளச்சாராயம் குடித்து மொத்தம் 14 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 48 பேருக்கும் மேல் சிகிச்சையில் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி இல்லை, சாராய மாடல் ஆட்சிதான் நடந்து வருகிறது. யார் யார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள், மதுவை கள்ளச்சந்தையில் விற்கிறார்கள் என்று போலீஸூக்கு தெரியாதா? ஆளுங்கட்சியும், போலீஸும் கை கோர்த்ததன் விளைவுதான் இன்று கள்ளச்சாரயத்திகு 14 பேர் பலியானது. அவர்களது குடும்பம் நடுத்தெருவில் நிற்பதற்கு காரணம் திமுக அரசுதான்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.