Skip to main content

ஜெயக்குமார் பேட்டி... ராமதாஸ் நிம்மதி... 

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக 7 மக்களவைத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றது. வேலூர் தொகுதியை தவிர்த்து நடந்த தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். இதையடுத்து பாமகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கக்கூடாது என அதிமுகவின் நிர்வாகிகள் சிலர் கட்சியின் தலைமையிடம் சொல்லி வந்தனர். ஆனால் பேசியப்படி ராஜ்யசபா பதவி கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சியின் தலைவர்கள் நிர்வாகிகளை சமாதானப்படுத்தி வந்தனர். இதனால் ராஜ்யசபா சீட் கிடைக்குமா? கிடைக்காதா? என் குழப்பத்திலேயே இருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். 


  Jayakumar - Ramadoss


 

இந்த நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம் பெறாதது குறித்தும் பல கற்பனையான கதைகள், வதந்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. எந்த அனுமானத்திற்கும் பதில் சொல்ல முடியாது. 
 

ஆனால் ஒன்றே ஒன்று நிச்சயம். அ.தி.மு.க. ஒரு ஜென்டில்மேன் கட்சி. எனவே ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் பா.ம.க.வுக்கு மேல்சபை சீட் வழங்குவது தொடர்பான அ.தி.மு.க. நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவித்தார். ஜெயக்குமாரின் பேட்டியால் நிம்மதி அடைந்துள்ளார் ராமதாஸ்.


அதேநேரத்தில் அவருக்கு இன்னொரு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. தர்மபுரியில் தோல்வியடைந்த அன்புமணிக்கு அந்த பதவியை அளிக்கலாம் என்று ராமதாஸ் நினைத்திருப்பதாகவும், தொடர்ந்து அன்புமணிக்கே சீட் கொடுக்காமல், கட்சியில் உள்ள மத்தவங்களையும் கவனிங்கன்னு ராமதாஸிடம் நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாகவும், இந்த முடிவை மாற்ற முடியாது என பாமக பிரமுகர்கள் முரண்டு பிடிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.