Skip to main content

“அதிமுகவில் இருந்து வெளியே போனவர்கள் எல்லாம் அழிந்து போனவர்களாகதான் இருக்கிறார்கள்” ஜெயக்குமார் பேட்டி

Published on 16/05/2019 | Edited on 16/05/2019


திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட விளாச்சேரி பகுதியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளரை சந்தித்தார். அப்போது, மீண்டும் இந்து தீவிரவாதி என கமல் கூறியது குறித்து கேள்வி ஏழுப்பப்பட்டது. அதற்கு ஜெயக்குமார், “கமல் கூறிய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். எம்ஜிஆர் அவர்களின் படங்களிலும் கண்ணியம் கட்டுபாடு என அனைத்தும் இருந்தது. அதே போல் அரசியலும் இருந்தது. கமலைப் பொறுத்தவரை திரைப்படத்திலும் கண்ணியம் இல்லை அரசியலிலும் இல்லை. இந்த மாதிரி வார்த்தைகளை கூறும்போது வாங்கி கட்டி கொண்டு தான் இருக்க வேண்டும். தான் செய்தது தவறுதான் என்று கூறும்போதுதான் அனைவரும் சிறந்த மனப்பான்மையோடு ஏற்றுக் கொள்வார்கள். அதிமுக என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று. திமுக கூட்டணி என்பது காகித ஓடம். வருகிற 23ம் தேதி காங்கிரஸ், திமுக, அமமுக, ஆகியவை அந்த நிலைமைக்குதான் வரும்”என்றார். 

 

jayakumar


அரசியலுக்கு ரஜினிகாந்த் வந்தால் அதிமுக கூட்டணி வைக்கும் என ராஜேந்திரபாலஜி கூறியது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ரஜினிகாந்த் ஒன்றும் வேண்டாத மனிதர் அல்ல. எல்லோருக்கும் வேண்டியவர்தான். அதிமுகவிற்கு அவர் வந்தால் நல்லது” என்றார். மேலும் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஸ்டாலின் ஒரு கணக்கு வாத்தியாராக மாறியிருக்கிறார். அவர் கூட்டல் பெருக்களில் சிறந்தவராக இருக்கிறார். ஆனால், ஸ்டாலினுக்கு கழித்தல் தெரியாது 23ஆம் தேதிக்கு பின்பு அவர் கழித்தலில்தான் செல்வார். தமிழிசை தெரிவித்ததிற்கு ஸ்டாலின் நிரூபிக்க தயார் என்று தான் தெரிவிக்கிறாரே தவிர, நான் பேசவில்லை என்று அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. திமுகவிற்கு கொள்கை இலட்சியம் தொலைநோக்குப் பார்வை என எதுவும் கிடையாது. ஒன்று மட்டும்தான் உள்ளது அது அதிகாரப் பசி” என்றார்.
 

மேலும் அமமுக கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக அரசை கவிழ்க்க வேண்டும் என்று நினைப்பது மிகப்பெரிய துரோகம். இதை திமுக வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால், தினகரன் நினைப்பது பச்சை துரோகம். அதிமுகவில் இருந்து வெளியே போனவர்கள் எல்லாம் அழிந்து போனவர்களாகதான் இருக்கிறார்கள்.


தேர்தலுக்கு பின்பு அமமுக இருக்காது. அதிமுகவின் உண்மை தொண்டராக இருந்தால் அமமுகவில் இருந்து அதிமுகவிற்கு மீண்டும் திரும்புவார்கள். அமமுக ஒரு லெட்டர் பேடு கட்சி. வாக்கு சேகரிப்பதற்காக திருப்பரங்குன்றம் ஒட்டப்பிடாரம் அரவக்குறிச்சி சூலூர் என அனைத்து தொகுதிகளுக்கும் தினமும் செல்லும் தினகரன், இதுனாள் வரைக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற பின்பு நேரடியாக சென்று மக்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறாரா. சட்டமன்ற அலுவலகத்திற்கு கூட தினகரன் செல்லவில்லையே. கலைஞர் அவர்களால் 2003 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடிந்ததா? கலைஞர் கைது செய்யப்பட்ட போது அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். கலைஞரால் அது முடிந்ததா? கலைஞரால் அவர்களால் முடியாத ஒன்று ஸ்டாலினால் எப்படி முடியும்? ஜாதி, மத ரீதியாக கமல்ஹாசன் தமிழகத்திற்கு குந்தகம் விளைவித்து அதன் மூலம் ஆதாயம் தேட நினைத்தால் சட்டத்திற்கு முன் கமல்ஹாசன் நிற்க வேண்டிய நிலை வரும்.


7 தமிழர் விடுதலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “சட்டமன்றத்தின் மூலம் ஒரு தீர்மானம் ஏற்படுத்தி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 7 தமிழர் விடுதலை குறித்து மாநிலம் முடிவு செய்ய வேண்டிய  நிலைக்கு வந்தபோது  ஞாயிற்றுக்கிழமை கூட அமைச்சரவை கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு அமைச்சரவை முடிவு எடுத்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம் இந்த விஷயத்தை பொருத்தமட்டில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்