Skip to main content

துணிச்சலான நடவடிக்கை... புதிய புரட்சி... - முதலமைச்சருக்கு ராமதாஸ் பாராட்டு..!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

pmk

 

துணிச்சலான நடவடிக்கை, புதிய புரட்சி என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை பாராட்டியுள்ளார். ஆந்திரத்தின் சமூகநீதிக் காவலராக ஜெகன்மோகன் ரெட்டி உருவெடுத்துள்ளார் என்றும் ஆந்திர அரசு வழியில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நலவாரியங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஆந்திர மாநில அரசு புதிய புரட்சியைப் படைத்திருக்கிறது. வன்னியகுல சத்திரியர்கள், அக்னிகுல சத்திரியர்கள், முதலியார்கள், யாதவர்கள், விஸ்வ பிராமணர்கள் என 56 வகையான பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் முன்னேற்றத்திற்காக, ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு நல வாரியத்தை ஆந்திர அரசு அமைத்துள்ளது. சமுதாயங்களின் முன்னேற்றத்திற்கான இந்த நடவடிக்கை மிக மிக வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.

 

சமூகநீதியின் தொட்டில் என்று கூறிக் கொண்டு தமிழகத்தை ஆண்டவர்களும், ஆள்பவர்களும் இட ஒதுக்கீட்டில் உள்ள குறைபாடுகளைக் களையவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் முழுமையான சமூகநீதியை வழங்கவும் மறுத்து சமூக அநீதியை இழைத்து வரும்  நிலையில், ஆந்திர அரசு மேற்கொண்டுள்ளது மிகவும் துணிச்சலான நடவடிக்கை ஆகும். 2019-ஆம் ஆண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ஆந்திரம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் சம்பந்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு முறையாகச் சென்றடையவில்லை என்பதை நேரடியாகக் கண்டறிந்தார். தாம் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு சமுதாய மக்களுக்குமான நலத்திட்டங்களை அவர்களுக்குக் கொண்டு சென்று சேர்க்க, 30 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியைத் தான் இப்போது அவர் நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம் ஆந்திரத்தின் சமூகநீதிக் காவலராக ஜெகன் மோகன் ரெட்டி உருவெடுத்துள்ளார். பாராட்டுகள்.

 

ஒவ்வொரு வாரியத்திற்கும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 56 வாரியங்களில், பாதிக்கும் கூடுதலாக, அதாவது 29 சமுதாய நல வாரியங்களின் தலைவர்களாக பெண்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், முதியோர் ஓய்வூதியம், பள்ளிக் கட்டணம், 45 முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் தொழில் தொடங்குவதற்காக ரூ.18,750 நிதி உதவி, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்தும் இனி சம்பந்தப்பட்ட சமுதாய நல வாரியங்கள் மூலமாகவே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய நல வாரியங்கள் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதால் யாருக்கும் விடுபடாமல் அனைவருக்கும் கிடைக்கும்; நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பிப்பவர்களும் அதிக அலைச்சல் இல்லாமல் எளிதாக உதவிகளைப் பெற முடியும். அந்த வகையில் இது அனைவருக்கும் பயனளிக்கும்.

 

jj

 

‘‘வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும்....’’ என்ற அவ்வைப் பாட்டியின் வரிகளைப் போல ஒரு நாட்டிலுள்ள சமுதாயங்கள் முன்னேறாமல், அந்த நாடு முன்னேறாது. ஆகவே, நாட்டை முன்னேற்ற சமுதாயங்கள் முன்னேற்றப்பட வேண்டும். அந்த வகையில் ஆந்திர அரசு அறிவித்துள்ள சமுதாய நல வாரியங்கள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகச் சரியான நடவடிக்கை ஆகும். தமிழகத்திலும் இத்தகைய சமுதாய நல வாரியங்களை அமைப்பதன் மூலம் அனைத்துச் சமுதாயங்களும் சம அளவில் வளர்ச்சி அடைவதை உறுதிசெய்ய முடியும். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி நல வாரியங்களை அமைப்பதன் மூலம் அச்சமுதாயங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்த முடியும்.

 

cnc

 

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி ஒவ்வொரு சமுதாயத்திற்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; ஒவ்வொரு சமூகத்துக்குமான நீடித்த வளர்ச்சி இலக்குகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்; அனைத்துத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக சமவாய்ப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்; தமிழ் நாட்டின் அனைத்து வகுப்புகளின் சமூக, பொருளாதார நிலைமையையும் முன்னேற்றத்தையும் துல்லியமாக அளவிடும் நோக்கில் பன்முகத்தன்மை குறியீட்டு எண்ணை (Diversity index) உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. கிட்டத்தட்ட இவ்விலக்குகளை  அடைவதற்கான முதல் படி தான் ஆந்திர அரசு அறிவித்துள்ள சமுதாய நல வாரியங்கள் ஆகும்.

 

தமிழ்நாட்டிலும் அனைத்துச் சமுதாயங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி உருவாக்கப்பட வேண்டும். அதற்காக, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள 263 சமுதாயங்களில், எந்தெந்த சமுதாயங்களின் மக்கள்தொகை 30 ஆயிரத்திற்கும் அதிகமோ, அச்சமுதாயங்களுக்கு தனித்தனி நலவாரியம் அமைக்க வேண்டும்; அவற்றின் தலைவராக அச்சமுதாய மக்களையே நியமிக்க வேண்டும். அதன்மூலம் தமிழகத்தின் நீடித்த வளர்ச்சிக்கு அரசு வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' எனக் கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.