Skip to main content

“ஜெ. மறைந்தது டிச.4 தான்; ஆணையம் அமைத்தது யார்?; ஓபிஎஸ் ஈபிஎஸ் மறந்தாலும் தொண்டர்கள் ஏற்றுக் கொண்டார்கள்” - கே.சி. பழனிசாமி அதிரடி

Published on 04/12/2022 | Edited on 04/12/2022

 

"J. passed away only on Dec. 4; Who constituted the commission? Volunteers accepted even though OPS EPS was forgotten" KC Palaniswami action

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காமல் 2016ம் ஆண்டு டிச.5ம் தேதி மறைந்தார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெ. மரணம் குறித்து விசாரணை செய்த ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா டிச.4ம் தேதியே மறைந்துவிட்டார் என்று கூறியது. டிசம்பர் 4ஆம் தேதியான இன்று ஜெ. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அதிமுக முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் அடுத்த ஆண்டாவது ஜெ. மரண தினமாக இன்று (டிச.4) அனுசரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

 

சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதாவின் உண்மையான நினைவு தினம் இன்றைக்குத்தான். ஜெயலலிதா மறைந்தது டிசம்பர் 4 ஆம் தேதி தான். ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம் விலக வேண்டும். அதற்கு ஆணையம் அமைக்கவேண்டும் என கோரிக்கை வைத்தவர் ஓ.பன்னீர்செல்வம் தான். அந்த கோரிக்கையை ஏற்று ஆணையத்தை அமைத்தவர் ஈபிஎஸ். துரதிர்ஷ்டவசமாக ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு இன்று ஜெயலலிதாவின் நினைவு தினமாக இன்று அனுசரித்து இருக்க வேண்டும். அவர்கள் அனுசரிக்கத் தவறிவிட்டார்கள். 

 

"J. passed away only on Dec. 4; Who constituted the commission? Volunteers accepted even though OPS EPS was forgotten" KC Palaniswami action

 

அதிமுகவின் உண்மையான தொண்டர்களின் பிரதிநிதியாக நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் படி மத்திய அரசும் மாநில அரசும் மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதிமுக தொண்டர்களுக்கு இரு விஷயங்களில் சமரசம் இல்லை. ஜெ.வின் மரணத்தில் இருக்கும் மர்மத்திற்குக் காரணமானவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பது. இரண்டாவது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இரு கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டர்களின் பிரதிபலிப்பாக நாங்கள் மவுன அஞ்சலி செலுத்துகிறோம்.

 

ஜெ. மரண தேதியை அவர்கள் இதுவரை தெரியாமல் கூடச் சொல்லி இருக்கலாம். ஆனால் ஆணையத்தை அமைத்தது யார். அமைக்கச் சொல்லிக் கேட்டது யார் ஓபிஎஸ். அப்பொழுது ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவரை இருவரும் ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை.  இவர்களால் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு அடுத்த ஆண்டாவது கடைப்பிடிக்க வலியுறுத்துகிறோம். 

 

இந்த ஆணையம் திமுகவால் அமைக்கப்பட்ட ஆணையம் அல்ல. அதிமுகவால் அமைக்கப்பட்டது. அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் ஓபிஎஸ். அவர்கள் மறந்தாலும் உண்மையான அதிமுக தொண்டர்கள் டிசம்பர் 4ஆம் தேதியை ஏற்றுக்கொண்டார்கள்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.