Skip to main content

சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க ஜெ.அன்பழகனுக்கு தடை!

Published on 07/01/2020 | Edited on 07/01/2020

 

சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் கலந்துகொள்ள தடை விதித்திருக்கிறார் சபாநாயகர் தனபால். இந்த வருடத்திற்கான தமிழக சட்டமன்ற கூட்டம் கவர்னர் பன்வாரிலால் உரையுடன் 6-ந் தேதி கூடியது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 9-ந் தேதி வரை சட்டமன்றம் நடக்கவிருக்கிறது. 

 

j anbazhagan



கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று சபையில் விவாதம் நடந்தது. தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பலர் பேசினர். திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பேசும் போது, உள்ளாட்சித் தேர்தல் பற்றி சில விசயங்கள் குறிப்பிட, அதற்கு பதில் சொல்ல எழுந்தார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. 

   

அப்போது அவரைப் பார்த்து ஒருமையில் அன்பழகன் குறிப்பிட, அதிமுக உறுப்பினர்கள் கொந்தளித்தனர். அதற்கு திமுக உறுப்பினர்களும் ஆவேசப்பட்டனர். அப்போது, அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் தீர்மானத்தை அவை முன்னவரான ஓபிஎஸ் கொண்டு வர முயற்சித்தபோது, ‘’அன்பழகன் பேசியது தவறு. அதற்காக வருந்துகிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் ‘’ என கேட்டுக்கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 


 

இதனையடுத்து,  ‘’ மறப்போம் ; மன்னிப்போம் ‘’ என்கிற பாணியில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதை கைவிட்டார் ஓபிஎஸ். அதனை சபாநாயகர் தனபால் ஏற்றிக்கொள்ள, அன்பழகனுக்கு எதிரான தீர்மானம் கைவிடப்பட்டது.  இதனைத் தொடர்ந்து அன்பழகன் மீண்டும் பேச முயற்சித்தபோது, அவருக்கு வாய்ப்புத் தரப்படவில்லை. இதனை கண்டிக்கும் விதமாக சபாநாயகரின் இருக்கை அருகே சென்ற அன்பழகன், கையில் இருந்த கவர்னர் உரையை கிழித்து சபாவின் டேபிளில் வீசிவிட்டு வெளியேறினார். 


 

அன்பழகனின் அந்த செயலைக்கண்டு ஒட்டுமொத்த சபையும் அதிர்ச்சியடைந்தது. அன்பழகனின் செயலில் அதிர்ப்தியடைந்த சபாநாயகர், அவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டு வர ஓபிஎஸ்சை வலியுறுத்தினார். அதன்படி தீர்மானம் கொண்டுவரப்பட, கூட்டத்தொடர் முழுவதும் அன்பழகனுக்கு தடை விதித்து அறிவித்தார் சபாநாயகர். அப்போது, ’’ கூட்டத்தொடர் முழுவதும் வேண்டாம். தண்டனையை குறையுங்கள் ’’ என திமுக துரைமுருகன் கேட்டுக்கொண்டார். 
 


கூட்டத்தொடர் முழுவதும் எனில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் இந்த கூட்டத்தொடர், மார்ச்சில் நடக்கும் பட்ஜெட் கூட்டம், அதன் பிறகு மானிய கோரிக்கைகள் என சுமார் 45 நாட்களுக்கு சபை நடக்கும். அத்தனை நாட்களுக்கும் அன்பழகன் கலந்துகொள்ள முடியாது. அதனால் தான்,  இந்த கூட்டம் 9-ந்தேதி வரை நடப்பதால் அது வரைக்கும் அவருக்கு தடை விதியுங்கள் என கேட்டுக்கொண்டார் துரைமுருகன் என்கிறார்கள் திமுகவினர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.