அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான சிக்கல்கள் தற்போது வரை நீடித்துவரும் நிலையில், ஒருபுறம் ஓபிஎஸ் 'அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என அனைவருக்கும் அழைப்பு விடுத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி தரப்போ இந்த அழைப்பை ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து 'என்னைப் போன்ற மேலும் பலர் ஓபிஎஸ் பக்கம் வருவார்கள்' என ஐயப்பன் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தார்.

Advertisment

அதேபோல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ், 'அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட தொடர்ந்து முயற்சிகளை எடுப்பேன்' எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்தித்துப் பேசுகையில், ''அதிமுகவை அழிக்கும் வரை ஓபிஎஸ் ஓய மாட்டார். அதிமுகவை தனது குடும்ப சொத்தாக்கும் நோக்கில்தான் ஒன்றுசேர வேண்டும் என்ற நாடகத்தை ஓபிஎஸ் அரங்கேற்றி வருகிறார். அதிமுகவை ஓபிஎஸ் தனது குடும்ப சொத்தாக்கும் முயற்சி நான் உயிரோடு இருக்கும் வரை நடக்காது. மகாராணி போல் இருந்த சசிகலாவை சிறையில் தள்ளி அரசியல் அனாதையாக்கியவர் ஓபிஎஸ்.முதல்வர் பதவிக்கு தன்னைஉயர்த்திய டிடிவி தினகரனை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தியவர் ஓபிஎஸ். அரசியல் அடையாளம் இல்லாமல் இருந்த ஓபிஎஸ்-ஐ அழைத்து துணை முதல்வர் ஆக்கியவர் எடப்பாடி பழனிசாமி'' என்று தெரிவித்துள்ளார்.