Skip to main content

குற்றங்களை நிரூபிக்க விசாரணை நடத்த வேண்டியதுதானே? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

Is it necessary to conduct an investigation to prove the crimes? - Former Minister Jayakumar

 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப் பதிவுசெய்த அதிகாரிகள், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது வீடு, சட்டமன்ற விடுதி உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்துவருகிறார்கள். இந்நிலையில், எம்.எல்.ஏ விடுதி அருகே அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது என தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர்.

 

அந்த வகையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, “ஆளுங்கட்சி என்ற மமதையில், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அடிப்படையில் இதுபோன்ற ரெய்டுலாம் செய்கிறார்கள். அதிமுக மீது எத்தனையோ அடக்குமுறைகள், காவல்துறை மூலம் கட்சியை அழிக்கலாம் என்ற முறையில் கடந்த காலங்களில் செய்தனர். அந்த எண்ணங்கள் ஒருபோதும் ஈடேறவில்லை. இது ஜனநாயகம் மலர்ந்த நாடு. ஆகவே இங்கு நீதிமன்றம், சட்டமன்றம், பத்திரிகைத்துறை மற்றும் நிர்வாகத்துறைகள் இருக்கின்றன. அதனால் நாங்கள் நீதிமன்றத்தில் எங்களது கருத்துகளை எடுத்துவைப்போம். அங்கு நிரபராதி என நிரூபிப்போம்.

 

அதேபோல் ஆட்சிக்கு வந்ததும் மக்கள் மத்தியில் அதிக பிரச்சினைகள் உள்ளது. அதைக் கவனிக்காமல், குறிப்பாக அதிமுகவின் மீதுள்ள இந்தக் காழ்ப்புணர்ச்சியில் இதுபோன்ற ரெய்டுகளை அரங்கேற்றி களங்கம் ஏற்படுத்த நினைத்தால் நிச்சயமாக அது நடக்காத விஷயம். புகார்கள் முன்பே கொடுக்கப்பட்டதாக இருந்தாலும் அதற்குரிய தீர்வை நீதிமன்றம் கொடுக்கும். நீதிமன்றம் இருக்கிற சூழ்நிலையில் இதுபோன்று செய்வது நிச்சயமாக கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்றுதானே பார்க்க முடிகிறது. நீதிமன்றத்திலேயே இவர்கள் எதிர் தரப்பினராக இருந்து புகார்கள் பற்றிய அவர்களது கருத்துகளை எடுத்துக் கூறியிருக்கலாமே. எதற்கு இதுபோன்று ரெய்டுகள் நடத்த வேண்டும். உயிரைவிட மானம் என்பது பெரியது. அதனால் நீதிமன்றத்திலே அவர்களிடம் இருக்கும் ஆதாரங்களைக் கொடுத்திருக்கலாமே.

 

புகார்கள் கொடுக்கப்பட்ட பின்னர் குற்றங்களை நிரூபிக்க விசாரணை நடத்த வேண்டியதுதானே. அதைச் செய்யாமல் சமூக விரோதியைக் கையாள்வது போன்று காவல்துறையினரைக் குவித்து இதுபோன்று செய்வது கட்சி பெயரைக் கெடுக்கும் வகையில்தானே இருக்கிறது. சரி, அது கடந்த காலத்தில் செய்தார்கள். அதேபோன்று அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அதிமுகவை அழிக்க முடிந்ததா? அது முடியாது. நீதிமன்ற தகவலின்படி அவர்கள் விசாரணை நடத்தலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அதிரடியாக பல இடங்களிலும் திடீரென ஏதோ பெரிய அளவில் இதுபோன்று ரெய்டுகளை நடத்தி அதிமுக பெயரைக் கெடுக்க நினைத்தால் அது ஜனநாயகப் படுகொலையாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்” என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.