Skip to main content

திமுகவில் தலைவிரித்தாடும் உள்கட்சி கோஷ்டி பூசல்! உ.பி.க்கள் வேதனை!

Published on 11/06/2018 | Edited on 11/06/2018
theni

  

 தமிழகத்திலேயே திமுகவில் உள்கட்சி கோஷ்டி பூசல் நிறைந்த மாவட்டமாக விளங்கி வருவது தேனி மாவட்டம்தான்.

இந்த தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை முன்னாள் மாவட்டச் செயலாளர் மூக்கையா ஒரு கோஷ்டியாகவும், போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் இரண்டாவது கோஷ்டியாகவும், கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் மூன்றவாது கோஷ்டியாகவும், கம்பம் முன்னாள் எம்.பி.யும், கழக பேச்சாளருமான செல்வேந்திரன் நான்காவது கோஷ்டியாகவும் தற்போது மாவட்ட பொறுப்பாளராக இருக்கக்கூடிய ஜெயக்குமார் ஐந்தாவது கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். 

 

    ஆனால், தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிப்பட்டி என நான்கு சட்டமன்ற தொகுதிகள் தான் இருக்கிறது. அப்படி இருந்தும் கூட தி.மு.க.வில் உள்ள உள்கட்சி      கோஷ்டி பூசலால் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுகவை தக்க வைக்க முடியவில்லை. நான்கு தொகுதிகளையுமே அ.தி.மு.க. கைப்பற்றியது. இதனால் டென்சன் அடைந்த செயல்தலைவரான ஸ்டாலின் மூக்கையாவிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியை பறித்து ஓரம் கட்டினார். ஆனால் இருபது வருடங்களாக தொடர்ந்து மாவட்டச் செயலாளராக இருந்து வந்த மூக்கையாவின் பதவியை அதிரடியாக பறித்ததை கண்டு ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் மற்றொருபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான பொறுப்பாளர்களும், தொண்டர்களும் சந்தோச வெள்ளத்தில் மூழ்கினார்கள். 

 

இருபது வருடங்களாக மாவட்ட செயலாளராக இருந்த மூக்கையா கட்சியை வளர்ப்பதை விட தன்னை வளர்த்துக் கொண்டு கோஷ்டியைத்தான் உருவாக்கி வந்தார். இனிமேலாவது கட்சி வளர்ச்சிக்கும், தொண்டர்கள் அரவணைத்து போகக்கூடிய ஒரு மாவட்டச் செயலாளரை தளபதி நியமிக்க வேண்டும் என கட்சி பொறுப்பாளர்கள் எதிர்பார்த்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கம்பம் செல்வேந்திரனும், தலைமை வரை முட்டி மோதி பார்த்தார். ஆனால் அந்த அளவுக்கு தலைமையும், செல்வேந்திரனுக்கே செல்வாக்கு இருந்தும் கூட கட்சிப் பணியாற்றுவதற்கு செல்வேந்திரன் சரிபட்டு வரமாட்டார். காரில் உட்கார்ந்து கொண்டுதான் அரசியல் பண்ணுவார். தொண்டர்களையும் அரவணைத்து போகமாட்டார் என்று தலைமைக்கு தெரிந்ததின் பேரில் செல்வேந்திரனையும் தலைமை ஒதுக்கியது. அதுபோல் கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணனும், போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணனும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டி போட்டனர். இருந்தாலும் மாவட்டத்தில் முக்குலத்தோர் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருப்பதால் அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் மாவட்ட பொறுப்பாளராக நியமிப்பதின் பேரில் கட்சி வளர்ச்சியும் கை கொடுக்கும் என தலைமை முடிவு செய்தது. அந்த அளவிற்கு மாற்றுக் கட்சிகளிலும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் மாவட்டச் செயலாளராகவும் இருந்து வந்தனர். அதன் அடிப்படையில் தான் கம்பம் ஒன்றிய செயலாளராக இருந்த ஜெயக்குமாரை முன்னாள் அமைச்சரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமியின் பரிந்துரையின் பேரில் தேனி மாவட்ட பொறுப்பாளராக செயல் தலைவர் ஸ்டாலின் நியமித்தார். 

 

    அதுபோல் ஜெயக்குமாரும் மாவட்ட பொறுப்பு வந்த உடனே ஊர் ஊருக்கு கட்சித் தொண்டர்களை அரவணைத்து கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்தி கட்சி வளர்ச்சிக்கு ஆர்வம் காட்டி வந்தார். இருந்தாலும் உள்கட்சி கோஷ்டி பூசல் எதிரொலியாக மூக்கையா, ராமகிருஷ்ணன், செல்வேந்திரன், லட்சுமணன் ஆகியோரின் ஆதரவாளர்கள் சரிவர கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. அதுபோல் ஜெயக்குமாரும் தனக்கு வேண்டியவர்களுக்கு பதவிகளை கொடுத்து தனது ஆதரவாக ஒரு கோஷ்டியை உருவாக்கிக் கொண்டு மாவட்டம், நகரம், ஒன்றிய நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சரிவர மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டு கட்சி வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டவில்லை. இந்த விசயம் தலைமைக்கு எட்டியதின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவாலயத்திலிருந்து ஒரு குழு தேனி மாவட்டத்திற்கு விசிட் அடித்து கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அதிரடி விசாரணை செய்ததில் ஜெயக்குமாரின் செயல்பாடே சரிவர இல்லை என்பதை அறிவாலயத்திலிருந்து வந்த குழுவும் உறுதி செய்தது. அதுபோல் இந்த விசயம் முன்னாள் அமைச்சரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமியின் காதிற்கு எட்டவே உடனே ஜெயக்குமாரை திண்டுக்கல்லுக்கு வரச்சொல்லி சத்தம் போட்டதுடன்  மட்டுமல்லாமல் இனிமேலாவது கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அரவணைத்து கட்சியை வளர்க்க வேண்டும் என ஜெயக்குமாருக்கு அறிவுரை சொல்லி அனுப்பி இருப்பதாகவும் தெரிகிறது.

 

    இதுபற்றி மாவட்ட பொறுப்பில் உள்ள சில உடன்பிறப்புகளிடம் கேட்டபோது... எல்லா அரசியல் கட்சியிலும் கோஷ்டி பூசல் இருக்குதுங்க. ஆனால் அங்கங்கே இரண்டு, மூன்று கூட இருக்கும். ஆனால் இந்த மாவட்டத்தில்  ஐந்து கோஷ்டியிருக்கு. இருந்தாலும் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் கோஷ்டி பூசலை மறந்து ஆறுதல் சொல்வது தான் மரபு. அப்படி இருக்கும் போது எந்த ஒரு கோஷ்டியிலும் இல்லாமல் அனைவரிடமும் அரவணைத்து போகக்கூடிய கம்பம் நகரத் துணைச் செயாளரான கராத்தே ராமகிருஷ்ணன் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு நூறு வருடம் வாழ வேண்டும் என தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். அதற்கு அ.தி.மு.க.வினர் தலைவரை தரக்குறைவாக விமர்சித்து இருந்தனர். அதனால் டென்சன் அடைந்த ராமகிருஷ்ணன் இ.பிஎஸ், ஓபிஎஸ்-ஐ பற்றி பேஸ்புக்கில் போட்டார். அதைக்கண்ட அ.தி.மு.கவினர் முதல்வரையும், துணை முதல்வரையும் அவதூறாக பேஸ்புக்கில் ராமகிருஷ்ணன் போட்டிருக்கிறார் என்று ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்திடம் சொன்னதின் பேரில் போலீசை தூண்டிவிட்டு ராமகிருஷ்ணன் மீது வழக்குப் போட்டு பதிவு செய்தனர். அப்படி இருந்தும் கூட நிபந்தனை ஜாமீனில் ராமகிருஷ்ணன் வெளியே வந்துவிட்டார். இதைக் கண்டித்து கம்பம் ராமகிருஷ்ணன், கம்பம் செல்வேந்திரன், போடி லட்சுமணன், மூக்கையா ஆகியோர் அறிக்கையும் விட்டு பாதிக்கப்பட்ட ராமகிருஷ்ணனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லிவிட்டு போனார்கள். அதுபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகரம், ஒன்றிய பொறுப்பாளர்களும் ராமகிருஷ்ணனை பார்த்து ஆறுதல் கூறியும் வருகிறார்கள். ஆனால் கட்சியின் மாவட்ட பொறுப்பாளராக இருக்கக்கூடிய ஜெயக்குமார் ஆளுங்கட்சியை எதிர்த்து ஒரு அறிக்கையோ, பாதிக்கப்பட்ட ராமகிருஷ்ணனை பார்த்து ஒரு ஆறுதல் சொல்லக்கூட வரவில்லை. இதுபோல்தான் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மாவட்ட பொறுப்பாளர் மதிப்பதில்லை. இப்படிப்பட்டவர் மாவட்ட பொறுப்பாளராக இருந்தால் எப்படி கட்சி வளர்ச்சியடையும் இன்னும் கோஷ்டி பூசல் தான் வளரும். 

 

ஏற்கனவே மாவட்ட பொறுப்பாளரான ஜெயக்குமாரின் ஆதரவாளரான கம்பம் நகர செயலாளர் செல்லப்பாண்டி ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு வெளியில் வந்தவர். அப்படிப்பட்டவர் தொடர்ந்து கட்சியில் இருந்தால் கட்சிக்கும் தலைவர் தளபதிக்கும் கெட்ட பெயர் தான் ஏற்படும் . அதனால் செல்லப்பாண்டி பதவியை பறிக்க வேண்டும் என தொடர்ந்து கட்சிப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் வலியுறுத்தியும் கூட எந்த ஒரு நடவடிக்கையும் மாவட்ட பொறுப்பாளர் எடுக்கவில்லை. இதுபோல் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி வருபவர்கள் சிலருக்கு பொறுப்புகளையும் கொடுத்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதன்மூலம் கட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது என்று கூறினார்கள். 

 

 ஆக, தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை தி.மு.க.வின் கட்சி வளர்ச்சியை விட உள்கட்சி கோஷ்டி பூசல் தான் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தலைவிரித்து ஆடி வருகிறது!

சார்ந்த செய்திகள்