கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியான நிலையில், 104 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்த பா.ஜ.க. தற்போது ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அக்கட்சியைச் சேர்ந்த எடியூரப்பாவை கர்நாடக மாநில ஆளுநர் வஜுபாய் வாலா முதல்வராக இன்று பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணி அமைத்து பெரும்பான்மையை நிரூபித்தபிறகும், இவ்வாறு நடந்திருப்பதை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘போதுமான எண்ணிக்கையிலான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெறாவிட்டாலும், கர்நாடக மாநிலத்தில் ஆட்சியமைத்து நம் அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. இன்று காலை கிடைக்கவே இல்லாத ஒரு வெற்றிக்காக பா.ஜ.க.வினர் கொண்டாடிக் கொண்டிருக்கும் அதேவேளையில், ஜனநாயகத்தின் படுதோல்வியை எண்ணி இந்தியாவே அழுதுகொண்டிருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.