Skip to main content

கரோனா தொற்று அதிகரிப்ப்பு! முழு ஊரடங்கை செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்! 

Published on 22/08/2020 | Edited on 22/08/2020
Puducherry

 

 

புதுச்சேரியில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,600-ஐ கடந்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் 10,000-ஐ எட்டிவிடும். அதுபோல் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது. 

 

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், இறப்பு விகிதமும் உயர்வதாலும் கரோனா தொற்று சமூக பரவலாக மாறும் ஆபத்துள்ளதாக சமூக ஜனநாயக இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் எச்சரிக்கை தெரிவித்துள்ளன. மேலும் புதுச்சேரி அரசு - அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை கிட் மற்றும் போதிய படுக்கை வசதி ஏற்படுத்தவில்லை. கரோனா பரவலை தடுப்பதில் அரசு தோல்வி அடைந்துள்ளது எனவும் குற்றம் சாற்றுகின்றனர். 

 

இந்நிலையில், புதுச்சேரி முழுவதும் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும், அதற்கு முன்பாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரணத் தொகையும், அத்தியாவசிய உணவு பொருட்களும் வழங்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று (21.08.2020) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சி.ஸ்ரீதர், இராவணன் பகுத்தறிவு இயக்க தலைவர் இர.அபிமன்னன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி, இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பெ.பராங்குசம், தன்னுரிமைக் கழக தலைவர் தூ.சடகோபன், புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் பெ.ரகுபதி, புரட்சியாளர் அம்பேத்கர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழக செயலாளர் புதுவை தமிழ்நெஞ்சன், இயற்கை மற்றும் கலாச்சாரப் புரட்சி இயக்க தலைவர் பிராங்கிளின், சிந்தனையாளர்கள் பேரவைத் தலைவர் கோ.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் புதுச்சேரி அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்