Skip to main content

துரைமுருகன் வீட்டில் சோதனை -பின்னணியில் யார்?

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

 

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். மகனுக்காக பல்வேறு வியூகங்களில் தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார் துரைமுருகன். 

 

இந்த நிலையில் 29ஆம் தேதி இரவு காட்பாடியில் உள்ள துரைமுருகன் இல்லத்திற்கு இரவு 10.30 மணிக்கு வந்த மனோஜ், முரளிதரன், சதீஷ் ஆகிய 3 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதுதொடர்பாக துரைமுருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் வந்தார். பின்னர் அவர் தனது வழக்கறிஞர்களை வரவழைத்தார். வந்தவர்களிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளனர். அந்த அடையாள அட்டையில் அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரி விஜய் தீபன், தன்னுடைய தலைமையிலான குழுவினர்தான் அவர்கள் என்று தெரிவித்துள்ளார். சோதனை நடத்துவதற்கான வாரண்ட் காண்பிக்கப்படாததால் இருதரப்பும் வாக்குவாதம் நடந்தது. அதிகாலை 3 மணி அளவில் வீட்டினுள் சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
 



இதன் பின்னணி குறித்து விசாரிக்கும்போது, அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி.சண்முகம்தான் என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகின்றன. ஏ.சி.சண்முகம் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக உள்ளவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தார். இந்த தேர்தலில் பாஜகவின் தாமரை சின்னத்தில்தான் நிற்க விருப்பப்பட்ட நேரத்தில், ஐந்து தொகுதிகள் மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுக சின்னத்தில் போட்டியிடுகிறார். 
 

துரைமுருகன் மகன் போட்டியிடுவதால் தனக்கு நெருக்கடி இருக்கும் என்பதால், திமுக தரப்பு எப்படி வேலை செய்கிறது என விசாரித்துள்ளார். அப்போது, அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வாக்குகள் மற்றும் அதிமுகவில் உள்ள தலித் வாக்குகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை திமுக எடுத்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. 
 

இதையடுத்து திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வாய்மொழியாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் அதனை கொள்ளததால், பாஜகவின் தலைமையான டெல்லிக்கு தகவல் அனுப்பியதோடு, நான் அதிமுகவில் வெற்றி பெற்றாலும் பாஜக வேட்பாளர் போலதானே. அதனால் எனது வெற்றி பாதிக்கக்கூடாது அல்லவா என கூறியிருக்கிறார். இந்த தகவல் குறித்து விசாரிக்குமாறு டெல்லி கூறியதையடுத்து துரைமுருகன் வீடு, கல்லூரி, திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்துள்ளது என்கிறார்கள்.

 

duraimurugan



சோதனை குறித்து துரைமுருகன் செய்தியாளர்களிடம், வேலூரில் கதிர் ஆனந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்களை திசை திருப்பவே ஆளும்கட்சி இவ்வாறு செய்துள்ளது.  இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எங்களுக்கு மன உளைச்சல் தரவும், களத்திலே நேருக்கு நேராக நின்று எதிர்க்க பலமின்றியும் இவ்வாறு செய்கின்றனர். மிரட்டுவது, பொய் கூறுவது, பூச்சாண்டி காட்டுவது இதற்கெல்லாம் பயந்து ‘மோடி ஜே’ என கூறிவிடுவோம் என எண்ணுகின்றனர். அவ்வாறு ஒருபோதும் நடக்காது என்கிறார்.
 

A.C.SHANMUGAM


இந்தநிலையில் வேலூரில் ஏ.சி.சண்முகம் அளித்த பேட்டியில், துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று உள்ளது. இதற்கு நானும் பா.ஜனதா கட்சியும் தான் காரணம் என்று துரைமுருகன் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய். சென்ற மாதம் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடந்தது. நாங்கள் யார் மேலேயும் பழி போடவில்லை.
 

அண்ணன் துரைமுருகன் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். அரசியல் நாகரிகம் கருதி நான் இதுவரை எதுவும் பேசவில்லை. நான் பேச ஆரம்பித்தால் துரைமுருகன் ஒரு மாதம் தூங்க மாட்டார். இவர்களுக்கு எந்த நாட்டில் என்ன உள்ளது என்பதை நான் சொல்ல வேண்டியதாக இருக்கும். பொதுவாக இந்த ரெய்டு எல்லாம் ஒருவர் போனில் பேசுவதை வைத்து தான் உளவுத்துறை மூலம் அறிந்து சோதனை நடைபெறும். இது கூட தெரியாமல் அடுத்தவர் மீது பழிபோடுவது மிக தவறு என்கிறார்.

 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.