Skip to main content

''வருத்தப்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க... இனி இவ்வாறு நிகழாது''-மன்னிப்புக்கேட்ட கே.என்.நேரு!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

 "If you are upset, be patient ... This will not happen again" - KN Nehru

 

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பெயரைக் குறிப்பிட்டு ஒருமையில் பேசியது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் மதுரை பேருந்து நிலையம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், ''விரைவில் தமிழக முதல்வர் திறந்துவைப்பார்'' எனத் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், எம்.பி வெங்கடேசன் பெயரை ஒருமையில் குறிப்பிட்டு  அங்கு போய் கேளுங்கள் என்று அமைச்சர் பதிலளித்தார். நாடாளுமன்ற உறுப்பினரை இப்படி அமைச்சர் ஒருமையில் பேசியது அங்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

 "If you are upset, be patient ... This will not happen again" - KN Nehru

 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில், 'மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான ஊடகங்களின் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், சு.வெங்கடேசன் எம்.பி. குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது. பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், ஏற்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார். மேலும் பொதுவெளியில் அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படிப் பேசியதற்குக் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வந்தது.

 

இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேரு அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த பதிவில் 'பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் பாலகிருஷ்ணனுக்கும் பாராளுமன்ற உறுப்பினரை ஒருமையில் குறிப்பிட்டது மன வருத்தப்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் கே.என்.நேருவுக்கு உடல் நலக்குறைவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister KN Nehru fell ill during the election campaign!

கரூரில் தனது மகன் அருண் நேருவுக்காக பிரச்சாரம் செய்தபோது அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரச்சாரத்தை கைவிட்டு மருத்துவமனை சென்றார்.

பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் அருண் நேரு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று (27.3.2024) காலை கொசூர் பகுதியில் இருந்து பிரச்சாரம் துவங்கியபோது, நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தனது மகன் அருண் நேருவுக்காக வாக்கு சேகரித்தார்.

அப்போது “எனக்கு மயக்கமாக இருக்கிறது. ஒரு வரி மட்டும் பேசிவிட்டு கிளம்புறேன்” என்று கூறிய அமைச்சர் கே.என்.நேரு, “எனது துறையின் கீழ் வரும் குடிநீர் வாரிய பிரச்சினைகளை இப்பகுதியில் கண்டிப்பாக தீர்த்து வைப்பேன்” எனத் தெரிவித்து முடித்துக்கொண்டு பிரச்சார வாகனத்திலிருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மகனுக்காக சிறப்பு பூஜை! - அமைச்சர் கே.என். நேரு தீவிரம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Special pooja for son! Minister K.N. Nehru intensity

நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுக்க மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காகத் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. 

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க.வின் அருண் நேரு போட்டியிடுகிறார். இவர் தனது பிரச்சாரத்தை துவக்கி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பிரச்சாரத்தை துவங்குவதற்கு முன்னதாகத் தனது தந்தை கே.என். நேருவுடன் அவர்களின் குல தெய்வமான கருப்பண்ண சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர். 

திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்தில் இருக்கும் புத்தனாம்பட்டியில் உள்ள ஸ்ரீ மாவடி கருபண்ணசுவாமி, அமைச்சர் கே.என். நேருவின் குலதெய்வம். இந்தக் கோயிலில் நேற்று அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது மகனும் பெரம்பலூர் நாடாளுமன்ற தி.மு.க. வேட்பாளருமான அருண் நேரு ஆகியோர் சிறப்பு பூஜையை நடத்திவிட்டு முதற்கட்ட பிரச்சார பயணத்தை துவங்கினர். 

இந்த பிரச்சாரத்தில் அமைச்சரும், வேட்பாளர் அருண் நேருவின் தந்தையுமான கே.என். நேரு, துறையூர், புத்தனாம்பட்டி அபினிமங்கலம், துறையூர் ஒன்றியத்தில் உள்ள பகளவாடி, காளிப்பட்டி, சிங்களாந்தபுரம், கண்ணனூர், மதுராபுரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பயணம் செய்து தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார். 

துறையூர் நகரம் பாலக்கரையில் அமைச்சர் கே.என். நேரு பேசும்போது, “துறையூர் நகரை விரிவுபடுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். தற்பொழுது புறவழிச் சாலை, குடிநீர் வசதி திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மலைவாழ் மக்களுக்கு எடை மெஷின் அமைத்து தர கூறினார்கள். உடனடியாக திமுக அரசால் செய்து தரப்பட்டுள்ளது. இதுபோல் பல திட்டங்கள் நிறைவேற தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்” எனப் பேசினார்.

பிரச்சாரத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன், துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு தீவிர பிரச்சாரம் செய்தனர்.