Skip to main content

“சிபிசிஐடிக்கு மாற்றினாலே ஏமாற்றுவதுதான்” - வேங்கைவயலில் சீமான் பேட்டி

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

 "If  transfer to CBCID, it is cheating" - Seaman interview in Venkaivyal

 

அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் வசதிக்காக வைக்கப்பட்டிருந்த உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் இறையூர் அய்யனார் கோவிலில் ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுப்பு, இரட்டைக்குவளை முறை என பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவங்கள் தொடர்பாக தற்போது சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில், வேங்கைவயல் கிராமத்திற்குச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இதுவரை அரசு இதைப் பற்றி பேசவில்லை. கேட்டால் அவர்கள் சொல்கின்ற காரணம் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்ற மக்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டால் அவர்களுக்கு பாதுகாப்புக்கு யார் இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். ஒரு அரசே இப்படி சொல்லலாமா? இதைத்தான் பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பிலும் நீங்கள் சொன்னீர்கள். குறைந்த எண்ணிக்கையில் உள்ள மக்களிடம் நீங்கள் வரி வாங்குவது இல்லையா? வாக்கு கேட்பதில்லையா? நாங்கள் இந்த நாட்டின் மக்களா இல்லையா? நாட்டு மக்களுக்கு சட்டம் என்பது சமமாகத் தானே இருக்க வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு எந்த பாதுகாப்பும் கொடுக்க முடியாது அதே பெரும்பான்மையாக உள்ள மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என்றால் அவன் அந்த திமிரில் தானே இது போன்ற தவறுகளை தொடர்ச்சியாக செய்கிறான்.

 

nn

 

அரசே வரவில்லை; சட்டமே வரவில்லை; நாடே வரவில்லை என்றால் யார் வருவார். நீங்கள் வந்தாலும் வராவிட்டாலும் நான் வருவேன். எதனால் இவ்வளவு காலதாமதம் ஆகிறது. எல்லா விஷயத்திலும் இப்படித்தான் செய்கிறீர்கள். ஸ்ரீமதி விஷயத்திலும் இப்படித்தான் செய்தீர்கள். விசாரிக்கிறோம்; சிபிசிஐடிக்கு மாற்றுகிறோம் என்கிறீர்கள். சிபிசிஐடிக்கு மாற்றுகிறோம் என்றாலே ஏமாற்றுகிறோம் என்பது எங்களுக்கு தெரிகிறது. இந்த தவறை செய்தது யார் என்று கண்டுபிடிப்பதற்கு உலகம் முழுக்க விசாரணை செய்யப் போகிறீர்களா? இந்த சின்ன ஊர்தானே. இதில் இந்த தவறை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்க முடியாதா என்ன? இதில் அரசினுடைய  கையாலாகாத தனம் வெளிப்படையாக தெரிகிறது.

 

தங்கச்சி ஸ்ரீமதி வழக்கில் என்ன செய்தீர்கள்? அவர் இறந்துவிட்டார் என்று தெரிந்துவிட்டது. இரண்டு நீதிபதிகளை விசாரணைக்கு போட்டீர்கள். சிபிசிஐடி விசாரணை என்றீர்கள். அதற்குள் நீதிமன்றத்தில் வழக்கு வந்து விட்டது. நீதிபதி தற்கொலை என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அந்த மாதிரி சிபிசிஐடிக்கு ஏன் மாற்ற வேண்டும். சிபிசிஐடி முதல்வரின் கீழேதான் உள்ளது. காவல்துறை, உளவுத்துறை முதல்வருக்கு கீழேதான் உள்ளது. அப்பொழுது காவல்துறை, உளவுத்துறை பலவீனமாக இருக்கிறது. சிபிசிஐடி சரியாக இருக்கிறதா? இன்னும் எவ்வளவு நாள் விசாரிப்பீர்கள். காலம் கடத்தி இந்த பிரச்சனையை ஆறப்போட்டு மக்களுக்கு வேற பிரச்சனை வரும் பொழுது முடித்துவிட்டு விடுவீர்கள். டாஸ்மாக் சரக்கில் கலப்படம் என்று ஒரு புகார் வந்தால் எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுப்பீர்கள். இந்த சம்பவத்தில் இவ்வளவு மெத்தனம் காட்டும் நீங்கள் அப்படி ஒன்று நிகழ்ந்தால் எப்படி விரைவாக நடவடிக்கை எடுப்பீர்கள். இது அரசின் கையாலாகாத தனம்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.

Next Story

நா.த.க. சின்னம் தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Election Commission action for NtK party symbols related issue

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியினரிடயே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டது.

Election Commission action for NtK party symbols related issue

இதனையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கபட்ட மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தீப்பெட்டி, கப்பல், படகு, பாய் மரப்படகு அல்லது விவசாயம் சார்ந்த சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் கேட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.