Advertisment

''அழுத்தம் தராவிட்டால் ஆளுநர் மாளிகை அலமாரியில் உறங்கிக் கொண்டேதான் இருக்கும்'' - பாமக அன்புமணி ஆதங்கம்

publive-image

Advertisment

'தமிழ்நாட்டில் பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறைகளில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த இஸ்லாமியக் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது வருத்தமளிக்கிறது' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அதிக அளவாக 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவர். நன்னடத்தை அடிப்படையில் பலர் 7 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டதும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. ஆனால், வேறு சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய கைதிகள், அவர்களின் தண்டனைக் காலம் நிறைவடைந்தும் கூட, 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சிறைகளில் வாடிக் கொண்டுள்ளனர். கோவை மத்திய சிறையில் மட்டும் 38 கைதிகள் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனைக் காலத்தை நிறைவு செய்த அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. எனினும் எந்த பயனும் ஏற்படவில்லை.

இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சிசிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில் நம்பிக்கையளிக்கும் செய்தி இருக்கும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்தது. ஆனால், அத்தகைய நம்பிக்கை அளிக்கும் உத்தரவாதம் எதுவும் அரசு சார்பில் அளிக்கப்படவில்லை.

Advertisment

நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்வது குறித்து அரசுக்குபரிந்துரைக்க அமைக்கப்பட்ட நீதியரசர் ஆதிநாதன் குழு, ஒட்டுமொத்தமாக 264 கைதிகளை முன்கூட்டியேவிடுதலை செய்ய பரிந்துரைத்தது. ஆனால், அவர்களில் 49 பேரை மட்டுமே, முதல்கட்டமாக, விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்திருக்கிறது. அவர்களின் 20 பேர் இஸ்லாமியர்கள் என்பது மனநிறைவளிக்கும் செய்தியாகும். அவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரை ஆகஸ்ட் 28ஆம் நாள் அனுப்பப்பட்டு, 45 நாட்களாகியும் இதுவரை ஆளுநரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அது தொடர்பாக அரசின் சார்பில் ஆளுநருக்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்பது தான் கூடுதல் வருத்தமளிக்கிறது.

ஆளுநருக்கு பரிந்துரை அளித்ததுடன் தங்களின் பணி முடிவடைந்து விட்டது என்பதைப் போல, இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுத்த பிறகு இஸ்லாமியக் கைதிகள் உள்ளிட்ட 49 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். கைதிகளை விடுதலை செய்ய ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தைக் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்கவில்லை.

தமிழ்நாட்டிற்கு கடந்த பத்தாண்டுகளாக ஆளுநர்களாக வருபவர்கள், தண்டனைக் காலத்தை முடித்த கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்யும் விஷயத்தில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து கடந்த 09.09.2018 ஆம் நாள் அமைச்சரவைத் தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த போதிலும் கூட அப்போதிருந்த ஆளுநர் அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த அநீதி நடந்தது. அதன்பிறகு பேரறிவாளனே உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி 1346 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு மே மாதத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 49 கைதிகள் விடுதலை விவகாரத்திலும், அரசுத் தரப்பில் அழுத்தம் கொடுக்கப் படாவிட்டால், அவர்களின் விடுதலைக்கான பரிந்துரை ஆளுநர் மாளிகையின் அலமாரிகளில் உறங்கிக் கொண்டேதான் இருக்கும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியக் கைதிகளின் விடுதலை கானல் நீராகவே இருக்கும். அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தான் அவர்களுக்கு நீதி வழங்க முடியும்.

எனவே, உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, நீதியரசர் ஆதிநாதன் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 264 கைதிகளில், ஏற்கனவே ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்ட 49 பேர் தவிர மீதமுள்ளவர்களையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மூத்த அமைச்சர்கள் குழுவினர் ஆளுநரை நேரில் சந்தித்து, இஸ்லாமியக் கைதிகள் உள்ளிட்ட நீண்ட காலமாக சிறைகளில் வாடும் 264 பேரின் விடுதலை குறித்து விரைந்து முடிவெடுக்க வலியுறுத்த வேண்டும். ஆளுநர் தரப்பில் தாமதம் செய்யப்பட்டால், அவர்கள் அனைவரையும் நிபந்தனை இல்லாத சிறை விடுப்பில் அவர்களின் இல்லங்களுக்கு அனுப்ப வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Islamic pmk Prison
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe