Skip to main content

“மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் முதல்வர் ஏன் இங்கு வரவேண்டும்” - முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

"If the people are happy then why should the Chief Minister come here.." - Former Minister O. S. Manian

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சரும், நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக செயலாளருமான ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு விவரங்களைக் கேட்டறிந்தார்.

 

தலைச்சங்காடு, தர்மகுளம், நெப்பத்தூர், மணிகிராமம், திருவாலி, வேட்டங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட வயல்வெளிகள், குடியிருப்புப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் வடியாத நிலையில், இளம் சம்பா நாற்றுகள் அனைத்தும் அழிந்துவிட்டது. ஏற்கனவே பெய்த மழையில் பாதிக்கப்பட்டு மீண்டும் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் இருந்த தடம் தெரியாமல் இருக்கிறது. இதற்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் கனமழையால் விவசாயிகள், பொதுமக்கள் வேலையின்றி தவித்து வரும் நிலையில், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகா பகுதிகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்தது ஏற்புடையதல்ல. மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் தாலுகாவைச் சேர்ந்த அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

 

பயிர் இன்சூரன்ஸ் செய்வதற்கு காலக்கெடுவை நீட்டிப்பதுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தபடி இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும். இயற்கை பேரிடர் என்று சொல்லும் வகையில் குறுகிய நேரத்தில் பெய்த கனமழை கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களுக்கு பத்திரமாக அழைத்து வந்து அவர்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசு, அதனை உரிய முறையில் செய்யாததால் மக்கள் அனைவரும் தற்போது அவதியுற்று வருகின்றனர்.  

 

கஜா புயலின் போது மரணம் என்கிற நிகழ்வே இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. பருவகால மழை கடுமையாக இருக்கும்; அதுவும் சராசரி மழையை விட அதிகமான மழை இருக்கும்; எங்கெங்கே எவ்வளவு மழை அதிகம் இருக்கும் என முன்னெச்சரிக்கையாக சொல்லியுள்ளனர். இருந்தும், அதிகாரிகள் கடைமடை பகுதி வரை சென்று பாதிப்புகளைப் பார்க்காமல் மேடான பகுதியில் முக்கியச் சாலைகளில் சென்று பார்ப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேதனை அளிக்கும் செயலாக உள்ளது. 

 

ஐந்தாம் நாளாக வெள்ளம் வடியாமல் இருக்கக் காரணம், வடிகால் வாய்க்கால்களில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்ற மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு அதிகாரிகள் அரசிடம் நிதி கேட்டும் நிதி கொடுப்பதற்கு முன்வராததே ஆகும். தமிழக முதல்வர் பாதிப்பு அதிகம் உள்ள உட்கிராமம் வரை சென்று பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளைப் பார்த்திருந்தால் மக்கள் மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறார்கள் என்று கூறியிருக்க மாட்டார். மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருந்தால் அவர் வந்திருக்கவே வேண்டியது இல்லை. மக்கள் அவதியுற்று இருக்கிறார்கள் என்பதால் தான் அவர் வந்தார். அவ்வாறு வந்தவர் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. அவர் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்திருப்பார். நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியதாகத் தெரியவில்லை. ஐந்து தினங்களாக மின்சாரம் இன்றி இருளில் மக்கள் தவித்து வருவது இவர்கள் எடுத்து வரும் வெள்ள நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்” என்றார். 

 

தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த புதைவட மின்கம்பி திட்டம் தோல்வியானது என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய கருத்துக்கு, “நிலத்துக்கு அடியில் மின்விநியோகம் செய்யும் திட்டம் நிதி செலவு அதிகம். ஆகையால், தற்போது உள்ள அரசு சம்பளம், பென்ஷன், இரண்டு ஆண்டுகளாக வேலை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு பில் வழங்காதது போன்ற காரணங்களால் பஞ்சாயத்து பணங்களை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஆகையால், பூமிக்கு அடியில் மின்கம்பி புதைப்பது என்பது கனவில்தான் இவர்கள் காணவேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.