Skip to main content

“அடிமட்ட தொண்டனாக செயல்படுவேன்” - நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி பரபரப்பு பேச்சு!

Published on 30/05/2025 | Edited on 30/05/2025

 

I will act as a grassroots volunteer Anbumani says at PMK executive meeting

பா.ம.க.வின் (நிறுவன) தலைவர் ராமதாஸுக்கும், அவரின் மகனும், அக்கட்சியின் (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணிக்கும்  இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று (29.05.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் அன்புமணி இன்று (30.05.2025) முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், “கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஏற்கனவே உள்ள உறுப்பினர்களுடைய புதுப்பித்தல் சம்பந்தமாக இங்கே 5 மாவட்டத்தின் செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் ஒன்றிய பேரூர் நகர நிர்வாகிகள் கூடியிருக்கின்றோம். இது ஒவ்வொரு முறையும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற நிகழ்வு.  நீங்கள் எல்லோரும் வேகமாக இந்த வேலைகளைச் செய்ய வேண்டும். விரைவில் முடிக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்ற நான்  தான் கட்சி என்று சொல்ல மாட்டேன். நாம் தான் சொல்லுவோம் பாட்டாளி மக்கள் கட்சி என்றால் அது நானோ, இவர்களோ கிடையாது. யாரோ நீங்கள் எல்லாம் நீங்கள் தான் பாட்டாளி. நீங்கள் இல்லையென்றால் கட்சி கிடையாது. இதில் என் சொத்தோ, பாலு சொத்தோ என யார் சொத்தும் கிடையாது. பொதுக்குழுவில் முறையாக நீங்கள் தான் என்னைத் தேர்வு செய்தீர்கள். உங்களோடு சேர்ந்து ஒரு அடிமட்ட தொண்டனாக நான் செயல்படுவேன். இது தான் என்னுடைய கடமை.

பொறுப்புகள் வரும் போகும். ஆனால்  உங்களுடைய அன்பு தான் நிரந்தரம். உங்களுடைய பாசம். அது என்றைக்குமே போகாது. அந்த வகையில் இன்றைக்கு காலையில் 5 மாவட்டங்கள் மாலையில் 6 மாவட்டம். நாளைக்குக் காலையில் 5 மாவட்டம் நாளை மாலை  6 மாவட்டம். நாளை மறுநாள் காலையில் மற்ற மாவட்டங்கள் எல்லாம் தொடர்ந்து மாவட்ட  மற்றும் மாநில நிர்வாகிகளைச் சந்தித்து கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும். நம்முடைய காவலர் சமூகநீதி போராளி மருத்துவர் ஐயா (ராமதாஸ்) நம் கட்சியைத் தொடங்கினார். தொடக்கத்தில் அவருடைய கொள்கைகள், வழிகாட்டுதல், சமூக நீதி, சமத்துவம், சனநாயகம் என அதனை மனதில் நிறுத்தி அந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் களத்தில் வேகமாக இறங்குவோம். அதில் உங்களில் ஒருவனாக முதல் தொண்டனாக உங்களுடன் சேர்ந்து நான் இறங்குவேன்.

நம் கட்சியைப் போன்று தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சியும் கிடையாது. அவ்வளவு கொள்கைகள், கோட்பாடுகள், செயல் திட்டங்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் நம்முடைய இலக்கு. அதை அடைவதற்கு நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒன்று சேருங்கள். இருக்கின்ற உறுப்பினர்கள் உங்களுடைய அட்டையைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். இது அடுத்த 3 வாரத்திற்குள் நடைபெற வேண்டும். இதனை எப்படி நீங்கள் செய்ய வேண்டும் என்று இங்கே மேடையில் இருக்கின்றவர்கள்  நானும் மேடையில் உங்களுக்குச் சொல்லுவோம். அதனை நீங்கள் வேகமாகச் செய்து முடிக்க வேண்டும்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்