Skip to main content

அரசு கொறடா உத்தரவின் படியே செயல்படுவேன் - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ...!

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

அதிமுக கொறடா ராஜேந்திரன் தமிழக சபாநாயகர் தனபாலிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற உறுப்பினர் பிரபு, விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் ,அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி ஆகியோர் அமமுகவில் பொறுப்பு வகிப்பதாகவும் அதிமுகவுக்கு எதிரான செயலில் ஈடுபடுவதாகவும் எனவே இந்த மூன்று பேர்  மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தகவல் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

prabhu


இதுகுறித்து கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற உறுப்பினர் பிரபு எம்.எல்.ஏ. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து எங்கள் மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்ய மனு அளித்துள்ளார். நாங்கள்  அரசு கொறடாவின் உத்தரவை எதிர்த்து எப்போதும் வாக்களிக்கவில்லை. சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிமுகவுக்கு ஆதரவாகதான் வாக்களித்துள்ளோம். அமமுக என்பது அதிமுகவின் அங்கம்தானே தவிர இது தனிக்கட்சி கிடையாது. எதற்காக அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை.


எனவே அதிகாரப்பூர்வமாக நோட்டிஸ் கிடைத்தவுடன் நாங்கள் சட்டபூர்வமாக அதனை சந்திப்போம். தொடர்ந்து நான் அதிமுக உறுப்பினராகவே உள்ளேன். அதிமுக எம்எல்ஏ வாக தான் செயல்படுகிறேன். நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேர்ந்துவிடவில்லை. நடைபெறுகின்ற இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அரசு கொறடாவின் உத்தரவின்படியே செயல்படுவேன். அதிமுகவை அழிப்பதற்காக நாங்கள் செயல்படவில்லை அதிமுக நல்ல தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் எனவும் அதிமுக உறுப்பினர்தான் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதுதான் அதிமுகவில் உள்ள அனைவரின் எண்ணம். மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர பாடு படுவோம்” என்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.