Skip to main content

''வந்தார்கள், போனார்கள் என்பதெல்லாம் எனக்கு தேவையில்லை... சசிகலாவுக்கும் இது பொருந்தும்''-வைரலாகும் ஜெ.தீபா ஆடியோ!

Published on 06/09/2022 | Edited on 06/09/2022

 

"I don't need those who have come and gone... The same applies to Sasikala's family" - J. Deepa audio goes viral!

 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

''அனைவருக்கும் வணக்கம். நான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் மாதவன். சில காலங்களாக ஒரு சில தவறான கருத்துக்கள் மீடியாக்களில் பரவி வருவதால் அதை மறுக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது என்பதால் மட்டுமே இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன். அதாவது ஒரு மிகுந்த கடுமையான மிகப்பெரிய சட்ட போராட்டத்திற்கு பின்னரே 'வேதா நிலையம்' என்ற போயஸ் கார்டன் என்ற எங்களது பூர்வீக சொத்து எனக்கு வந்தது. அதாவது எனது தந்தை ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தாயார் சந்தியா அவர்களால் வாங்கப்பட்டு கட்டப்பட்ட வீட்டில் குடும்பமாக அங்கே வாழ்ந்து வந்தனர். அந்த இல்லம் எனது பாட்டி சந்தியா அவர்களின் மறைவுக்கு பின்னர் எனது அத்தை ஜெயலலிதாவுக்கு உயில் வழியாக கொடுக்கப்பட்டது.  அதே நேரத்தில் எனது தந்தை ஜெயக்குமாரும் அங்கேதான் வசித்து வந்தார். அந்த காலகட்டங்களில் எனது அத்தை சினிமா துறையில் நடிகையாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரங்களில் அந்த காலகட்டத்தில் எனது தந்தை ஜெயக்குமார் அவர்களின் திருமண நடைபெற்றது. அதை எனது அத்தையும், அவர்களது உறவினர்களும், சித்திகள் போன்ற பெரியவர்கள் நடத்தி வைத்தனர். அதன் பின்னர் எனது தாயார் விஜயலட்சுமி, எனது தந்தை ஜெயக்குமாரும் எனது அத்தையுடன் அதே இல்லத்தில் கூட்டுக் குடும்பமாக தான் பல காலங்களாக வசித்து வந்தனர். இப்படிப்பட்ட சாதாரணமான இல்லமாக தான் அந்த வீடு அப்போது அந்த காலகட்டங்களிலிருந்தது. அந்த காலகட்டத்தில் அதே இல்லத்தில் வசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் நான் பிறந்தேன் அந்த வீட்டில். அதன் பிறகு ஒரு சில காலங்களுக்கு பின்னர் எல்லா குடும்பங்களிலும் உள்ளதுபோல் ஒரு சில மிகச் சிறிய கருத்து வேறுபாடு காரணமாக எனது தந்தையும், தாயாரும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

 

அதன் பின்னர் டி.நகரில் உள்ள எங்களது மற்றொரு பூர்வீக இல்லத்தில் நாங்கள் வசித்து வந்தோம். இதற்கு இடையே அத்தை அழைக்கும்போதெல்லாம் நாங்கள் அங்கு சென்று வருவோம். ஒருகால கட்டத்தில் எங்களை இங்கேயே இருக்கவைக்க விரும்பியதால் அங்கு வசித்து வந்தோம். அதன் பிறகு அவர் அரசியலில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து முழுமையாக வெளியே வந்து விட்டோம். இதுதான் அந்த வீட்டில் நாங்கள் வாழ்ந்ததற்கான எனக்குத் தெரிந்த விஷயங்கள். எனது தாய் வழியாகவும் தந்தை வழியாகவும் தெரிந்து கொண்ட ஒரு சில விஷயங்கள். ஆகவே அது எங்களுடைய பூர்வீக சொத்து என்பதில் எந்த கருத்து வேறுபாடும் யாருக்கும் இருக்க முடியாது. சட்ட ரீதியாக எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் அது பூர்வீக சொத்து தான். பாட்டி அவர்களால் வாங்கப்பட்டது. அதன் பின்னர் எங்கள் அத்தைக்கு அவர் கொடுத்தார். அத்தை திருமணமாகாதவர் என்பதால் தந்தை வழியாக அவர்தான் ஒரே உடன்பிறப்பு சகோதரர். அவருடைய பிள்ளைகளான எனக்கும் எனது சகோதரர் தீபக்கிற்கும் சட்ட ரீதியாக கோர்ட் வழியாகத்தான் இந்த சொத்தை நாங்கள் திரும்பப் பெற்றோம்.

 

இப்படி உள்ள சூழ்நிலையில் யாரோ மூன்றாவது நபர்கள் அத்தையுடன் இருந்தார்கள், வந்தார்கள், போனார்கள், சென்றார்கள் என்பதெல்லாம் என்னை பொறுத்தவரை எனக்கு இதெல்லாம் தேவையற்றது. எனக்கு தேவை என்னுடைய அத்தை மட்டும் தான். அவருடன் யார் இருந்தார், யார் போனார்கள் என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை இது என்னுடைய கருத்து. ஆகவே அவர் சொன்னார், இவர் சொன்னார், அவர்கள் விரும்பினார்கள், இவர்கள் விரும்பினார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரிந்தவரை தேவையற்ற கருத்துக்கள். அவருடன் அரசியல் பயணத்தில் எண்ணற்ற பேர் இருந்திருப்பார்கள். எத்தனையோ பேர் பணிக்கு இருந்திருப்பார்கள். மிகப்பெரிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார்கள். நினைத்துப் பார்த்தால் கூட பிரமிக்க வைக்கக்கூடிய அந்தஸ்திலும், பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட நபருக்கு எத்தனையோ பேர்களுடைய பணிகள் தேவைப்பட்டிருக்கும், உதவிகள் தேவைப்பட்டிருக்கும். ஆகவே அவருடன் பயணித்தவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர் இருந்திருப்பார்கள். அப்படி உள்ளவர்கள் எல்லாம் வந்து உரிமை கோர முடியாது. குடும்பத்திலோ, குடும்ப அந்தஸ்திலோ, குடும்ப சொத்துகளிலும் உரிமை கோர முடியாது. ஆகவே இதையெல்லாம் கடமையாக மறுக்கிறேன். அது யாராக இருந்தாலும் சரி. அவருடனே நாங்கள் பயணித்தோம் என்று சொல்லிக் கொள்ளும் சசிகலா அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் இது பொருத்தமானது. அவர்களுக்கும் நான் சொல்வது ஒன்றுதான் எல்லோருக்கும் சொல்வது ஒன்றுதான். இதுபோன்ற வதந்திகளை தயவு செய்து நீங்கள் மறுக்க வேண்டும். அந்த வீடு விற்பனைக்கு என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை, யாரையும் அணுகவும் இல்லை, யாரும் எங்களையும் அணுகவில்லை. வேதா நிலையத்தை பொருத்தவரை அதை பராமரிக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. அதை நாங்கள் கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்கிறேன். மிக விரைவில் அங்கே குடியேறும் எண்ணம் எனக்கு இருக்கிறது. ஆகவே இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்'' என தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.