Skip to main content

கத்திரிக்காய் கதையை சொல்லி ஸ்டாலின், துரைமுருகனுடன் சி.வி.சண்முகம் காரசார விவாதம்

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

 

சட்டப்பேரவையில் இன்று ஹைட்ரோகார்பனுக்கு எதிரான தீர்மானத்தின்போது, இயற்கை எரிவாயு திட்டத்திற்கு யார் அனுமதி அளித்தது என்ற விவகாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே விவாதம் நடைபெற்றது.
 

மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ.  டி.ஆர்.பி.ராஜா:-
 

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக மக்கள் ஒருமித்த மனநிலையில் எதிர்த்து வருகிறார்கள். இந்த திட்டத்தை நமது மண்ணில் புகுத்த கூடாது. காவிரி டெல்டா பாசன பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
 

அமைச்சர் சி.வி.சண்முகம்:- காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டம் மூலம் மீத்தேன் உள்ள எரிவாயு எடுப்பது, மரபுசாரா கனிமங்களை எடுப்பது தொடர்பாக மத்திய அரசு புதிய கொள்கை அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி எண்ணெய் வளம் உள்பட அனைத்து விதமான இயற்கை வளங்களை ஒரே நிறுவனம் எடுக்க மத்திய அரசு ஒரு அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டது.

அதன்படி ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா ஆகிய இரு நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை இந்த திட்டத்துக்கு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை.
 

அது மட்டுமின்றி டெல்டா பகுதியில் விவசாய நிலங்களை அழித்து செயல்படுத்த திட்டமிடப்படும். எந்த ஒரு திட்டத்துக்கும் தமிழக அரசு ஒரு போதும் அனுமதி கொடுக்காது. கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கலாம். ஆனால் நில பரப்பளவில் மாநில அரசின் ஒப்புதல் பெற்றே எதையும் செய்ய முடியும்.
 

ஹைட்ரோகார்பன் திட்டம் உள்பட எந்த திட்டத்துக்கும் தமிழக அரசு தனது ஒப்புதலை இன்று வரை வழங்கவில்லை நாளையும் வழங்காது.
 

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஏற்கனவே ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசிடம் விண்ணப்பித்தது. ஆனால் அதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை.

 

 

தமிழக அரசு இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டது போல எல்லோரும் போராட்டம் நடத்துகிறார்கள். தி.மு.க.வினரும் போராட்டம் நடத்துகிறார்கள். இதில் எந்த வித உண்மையும் இல்லை.
 

2011-ம் ஆண்டு மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து, அப்போது தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க.தான் அனுமதி வழங்கியது. அதாவது ஆய்வு செய்வதற்கு அந்த நிறுவனத்துக்கு தி.மு.க. அனுமதி கொடுத்தது.

 

duraimurugan-stalin-cvs


2011-ல் ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆன பிறகு டெல்டா பகுதி விவசாய மக்களின் உணர்வுக்கு மதிப்பும், மரியாதையும் அளித்து ஒரு உயர்மட்ட குழு அமைத்து இந்த திட்டம் பற்றி ஆலோசித்தனர். இதைத் தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில் ஆய்வு நடத்த வழங்கப்பட்ட அனுமதியையும்  ஜெயலலிதா அவர்கள் ரத்து செய்தார்.
 

எனவே  ஜெயலலிதா கொள்கை தான் அரசின் கொள்கை,  ஜெயலலிதா வழியில்  ஜெயலலிதா சொன்னதை இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றும்.
 

ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும் அ.தி.மு.க. அரசு அது தொடர்பான ஆய்வுக்கோ அல்லது உற்பத்திக்கோ நிச்சயம் அனுமதி கொடுக்காது.
 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக ஒரு போதும் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கமாட்டார்.
 

டி.ஆர்.பி.ராஜா:- அமைச்சர் பேசும் போது, தி.மு.க. ஆட்சியில் தான் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு உரிமம் வழங்கியது போல பேசுகிறார். அது தவறு. தி.மு.க. ஆட்சியில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ஆய்வு நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
 

அமைச்சர் சி.வி.சண்முகம்:- நீங்கள் எத்தனை தடவை கூறினாலும் நடந்த உண்மையை மறைக்க முடியாது. 2010-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்தது.
 

1-1-2011-ல் தமிழக அரசு தமிழ் நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கலாம் என்று இசைவு தந்தது. எனவே உங்கள் ஆட்சியில்தான் இசைவு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் நிலைப்பாடு என்னவென்றால் ஹைட்ரோகார்பன் எடுக்க நீங்கள் ஆய்வுக்கே அனுமதி கொடுத்திருக்க கூடாது என்பதுதான்.
 

அந்த காலக்கட்டத்தில் துணை முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், அதிகாரி ராஜீவ் ரஞ்சன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலகத்தில் கையெழுத்தாகி உள்ளது. ‘‘தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன்’’ என்ற நிறுவனத்துக்கு ஆய்வுக்கான அனுமதியை தி.மு.க. அரசு கொடுத்துள்ளது.
 

(சி.வி.சண்முகம், 2011-ல் தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு முழுவதையும் படித்து காட்டினார்).
 

மு.க.ஸ்டாலின்:- அமைச்சர் விளக்கம் தரும் போது தவறான தகவலை தருகிறார். 2011-ல் தி.மு.க. ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டது. அந்த திட்டத்தை செயல் படுத்த நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை.
 

சி.வி.சண்முகம்:- தமிழ் நாட்டுக்குள் ஹைட்ரோகார்பன் திட்டமே வரக் கூடாது என்று நாங்கள் எதிர்த்து வருகிறோம். தி.மு.க. ஆட்சியில் ஏன் அந்த திட்டத்துக்காக ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தீர்கள்?


 

துரைமுருகன்:- பொதுவாக எந்த திட்டமாக இருந்தாலும் ஆய்வு என்பது வேறு, அனுமதி என்பது வேறு, ஆய்வையே முடிவு என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.
 

சி.வி.சண்முகம்:- கத்திரிக்காயை சாப்பிடுகிறோம் என்றால் அப்படியே சாப்பிட முடியாது வெட்டி, சுத்தம் செய்து சமைத்த பிறகே சாப்பிட முடியும். அது போல ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்ப்பதாக சொல்லும் நீங்கள், அது தொடர்பாக கிணறு தோண்ட ஏன் ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தீர்கள்? அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். நாங்கள் இப்படி ஆய்வுக்கு கூட அனுமதி கொடுக்கவில்லை. பிறகு ஏன் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்துகிறீர்கள்? மனித சங்கிலி போராட்டம் நடத்தியது எதற்காக? பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதன் நோக்கம்தான் என்ன?
 

மு.க.ஸ்டாலின்:- மத்திய அரசு உங்களது எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்து விடும் என்பதால் போராட்டம் நடத்துகிறோம்.
 

அமைச்சர் சி.வி.சண்முகம்:- கடல் பரப்பில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஆய்வு நடத்தினால் கூட அ.தி.மு.க. அரசு எதிர்ப்பு தெரிவிக்கும். தமிழ்நாட்டுக்குள் நில பரப்பளவில் மாநில அரசின் ஒப்புதலைப் பெற்றே எதையும் செய்ய முடியும். எனவே நீங்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை. ஹைட்ரோகார்பன் திட்டம் உள்பட மக்களை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதி கொடுக்காது என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.