publive-image

மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க.சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று ஓபிஎஸ்-ன் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக 5000 க்கும் மேற்பட்டவர்களை திரட்டி தேனி பங்களாமேட்டில் ஓபிஎஸ்க்கு எதிராக பெரும் கூட்டத்தை திரட்டினார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் உதயகுமார் தி.மு.க. அரசை கண்டித்து நடந்த போராட்டத்தை மறந்து முழுக்க முழுக்க ஓ.பன்னீர்செல்வத்தை பற்றியே குற்றம் சாட்டினார்.

Advertisment

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, ''காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய ஆர்ப்பாட்டம் போலீஸாரின் கெடுபிடியால் தாமதாகிவிட்டது. தேனி நகரில் கூட்டம் அதிகமாக உள்ளது. அந்தக் கூட்டம் கலையட்டும் அதன்பிறகு செல்லலாம் எனப் போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். அதுமட்டுமில்லாது ஒபிஎஸ் தரப்பிலிருந்து வேறு தேனிக்குள் எப்படி வருகிறார்கள் எனப் பார்க்கலாம் என மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. இங்கு கூடியிருக்கிற கூட்டத்தை கட்டுப்படுத்த ஸ்டாலின் உத்தரவிட்டாரா, அல்லது ஓ.பி.எஸ் தூண்டுதலா எனத் தெரியவில்லை. எதிர்க்கட்சியை முடக்கும் ஆளும் கட்சியின் கைக்கூலிகளாக இருப்பவர்களை கண்டிக்கிறேன். ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கை தெய்வமாக வழிபடுபவர்கள் தேனி மாவட்ட மக்கள். அப்படி விஸ்வாசமான மக்கள் உள்ள தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ் போன்ற துரோகிகள் இருப்பது வருத்தமளிக்கிறது.

publive-image

Advertisment

ஏற்கெனவே தர்மயுத்தம் நடத்தியவர், தற்போது துரோகயுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் சிரிப்பு மர்ம சிரிப்பாக இருக்கிறது. துரோக சிரிப்பாக இருக்கிறது. அவரின் சிரிப்பு என்ன அர்த்தம் என கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தச் சிரிப்பை நம்பியதால் தான் துரோகத்துக்கு ஆளாகியுள்ளோம். அவர் பதவிக்கு ஆபத்து என்றால் தர்மயுத்தம் நடத்துவர், தொண்டர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் கண்டுகொள்ள மாட்டார். அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடும் திமுகவை பார்த்து கும்பிடுகிறார். அவரது மகனோ முதல்வரைச் சந்தித்து திமுக ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது என்கிறார்.

திமுகவை எதிர்த்து தான் அதிமுக தொடங்கப்பட்டது. ஆனால் அவர்களின் ஆட்சியை பாராட்டுபவர்களுக்கு இங்கு என்ன வேலை. அப்பாவுடன் சேர்ந்து போய் அங்கேயே சேர்ந்துவிடலாமே. ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என நமக்கு கிடைத்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிக்கு ரவீந்திரநாத் காரணம் இல்லை.‌ இங்குள்ள ஒவ்வொரு தொண்டனின் உழைப்பு. ரவீந்திரநாத்-திற்கு மக்கள் செல்வாக்கு இருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். நான் அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன்.

டெல்லியில் ஜனாதிபதி பிரிவு உபசார விழாவிற்கு அதிமுகவின் முகமாக அழைக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே. ரவீந்திரநாத்திற்கு அழைப்பு இல்லை. எதிரிகள் துரோகிகளை வீழ்த்துவதற்கு தற்போது தேனியில் கூட்டம் தன்னெழுச்சியாக கூடியுள்ளனர்.‌ மக்கள் ஆதரவு இல்லாததால் தேனியில் உள்ள வீட்டை ஓ.பி‌.எஸ் காலி செய்து விட்டு மாலத்தீவிற்கு இடம் பெயர்ந்து விடுவார். கட்சியில் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க 99 சதவீதம் பேர் ஆதரவளித்தனர்.‌ ஆனால் ஓ.பி.எஸ் அதற்கு மறுப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட்டு வந்தார். தற்போது கட்சியில் உள்ள நிர்வாகிகளை நீக்கி வருவதை பார்த்தால் இறுதியில் ஓ.பி.எஸ் மற்றும் அவருடன் இருக்கும் சில பேர் மட்டுமே எஞ்சியிருப்பர். அதிமுக தலைமை கழக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் கண்ணில் ரத்தம் வர வைக்கிறது. உங்கள் வீட்டை சூறையாட எவ்வளவு நேரமாகும் எனத் தெரியவில்லை.

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட பின் உடனடியாக வருவாய்த் துறையினர் வந்து சீல் வைத்தது எப்படி. எனக்கு 10 வருடமாக வருவாய்த் துறை அமைச்சராக நான் இருந்தபோது அவ்வளவு விரைவில் செயல்பட்டதில்லை. ரவுடிகளுடன் அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்தவர்கள் கொள்ளையர்கள். அங்கிருந்த பொருட்கள், ஆவணங்களை திருடி சென்றுள்ளனர். திமுக பார்த்து இருக்க வேண்டும். அறிவாலயத்திலும் திருட வருவார்கள். முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பின் போது 11நாட்கள் மௌன விரதம் இருந்தார். அதனால் 5 சதவீதம் வாக்கு குறைந்தது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கவே தயங்கினார். அவருடைய போடி தொகுதியை தவிர பக்கத்து தொகுதிக்குக் கூட சென்று பிரசாரம் செய்யவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

சேலம், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் உயர்மட்ட மேம்பாலங்கள் என கடந்த 4, ஆண்டுகளில் வளர்ந்துள்ளது. ஆனால் மூன்று முறை முதலமைச்சர், ஒரு முறை துணை முதலமைச்சராக இருந்த தேனியில் ஒரு மேம்பாலம் கூட கட்டவில்லை. நீங்கள் மட்டும் வீடு மேல் வீடு காடு மேல் காடு, தீவு என ஓ.பி.எஸ் மட்டும் சொத்து சேர்த்தார். பொதுக்குழு கூடிய போது தேனி மாவட்டம் முழுவதும் வந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்தனர். அவர் தேனி வரும் இதேபோல அலைகடலென திரண்டு வரவேற்பளிக்க காத்திருங்கள்'' என்று கூறினார்.