Skip to main content

“அவர் ஏற்கனவே திமுக ஆட்சியை பாராட்டியவர் தான்” - அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

"He is the one who praised the DMK regime"- Minister AV Velu interviewed.

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பணிமனை ஈரோட்டில் திறக்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

 

அவர் பேசுகையில், "தி.மு.க. தோழமை கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டாலும், நாங்கள் தி.மு.க. வேட்பாளராக நினைத்துதான் தேர்தல் பணியைத் தொடங்கியிருக்கிறோம். ஜனநாயகத்தில் ஒரு காலத்தில் தேர்தல் நடைமுறை என்பது ஆளும் ஆட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் நடக்கும் தேர்தலாகும். இடைத்தேர்தல் என்பது ஆளும் ஆட்சியின் திட்டங்களை எடை போடும் தேர்தல் என்றே பத்திரிகையாளர்கள் கூறுவார்கள். எதிர்க்கட்சி பலமாக இருக்கும் பட்சத்தில், ஆளும் கட்சி போட்டி போட்டால்தான் வெற்றி பெற முடியும். இந்த இலக்கணத்தை உடைத்து எறிந்து ஜனநாயக அடிப்படையில் தோழமை கட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை அளித்து உள்ளார். தி.மு.க. இந்த தேர்தலில் நிற்க வேண்டும் என்ற நிலைப்பாடு நமது நண்பர்கள் மத்தியில் இருந்தாலும்கூட, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நமது வேட்பாளர் என்ற அடிப்படையில் போட்டியிடுகிறார்.

 

காங்கிரஸ் கட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு பதவிகளை வகித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் தி.மு.க.வுக்கும் பிரிக்க முடியாத ஒரு உறவு இருக்கிறது. அந்த உறவு தந்தை பெரியாரின் குடும்பத்தை சார்ந்தவர் என்பதுதான். எனவே நமது வேட்பாளரை வெற்றி பெற வைப்பதே இலக்கு. மறைந்த திருமகன் ஈவெரா நினைத்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நமக்கு வேட்பாளராக கிடைத்து இருக்கிறார். அவரை வெற்றி பெற வைத்து, திருமகன் நினைத்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற வேண்டும்." என்றார்.

 

"அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திமுக ஆட்சியில் 10% பணிகள் கூட நடக்கவில்லை எனக் குறை கூறியுள்ளாரே" என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "அவர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பதால் தமிழகத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறுகிறார். ஆனால், சட்டமன்றத்தில் முதல்வரைப் பற்றி, “இப்படியொரு முதலமைச்சரை நாங்கள் பார்த்ததே இல்லை” என்று பாராட்டி பேசியவர்தான் செங்கோட்டையன். இது சட்டமன்ற குறிப்பிலே இருக்கிறது. இந்த ஆட்சியில் செய்ய வேண்டிய திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு கட்டணமில்லாமல் பஸ்ஸில் செல்லும் திட்டத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த திட்டம் ஈரோட்டிலும் செயல்படுத்தப்படுகிறது. எனவே செங்கோட்டையன் எதிர்க்கட்சியில் இருப்பதால் சொல்லி இருக்கிறாரே தவிர, அவரது நெஞ்சமெல்லாம் தி.மு.க. ஆட்சியைப் பாராட்டிக் கொண்டே இருக்கும்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.