Skip to main content

''அவர் உளவுத்துறை பின்புலம் கொண்டவர்; மாநில அரசை சீர்குலைக்கவே வந்திருக்கிறார்''-கே.எஸ்.அழகிரி பேட்டி 

Published on 27/11/2022 | Edited on 27/11/2022

 

congress

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''தமிழக ஆளுநர் அப்பட்டமாக அரசியல் செய்கிறார். முதன் முதலாக தமிழக காங்கிரஸில் நாங்கள் தான் சொன்னோம் இந்த ஆளுநர் உள்நோக்கத்தோடு வருகிறார் என்று சொன்னோம். காரணம் அவர் உளவுத்துறை பின்புலம் கொண்டவர். மாநில அரசை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக வந்திருக்கிறார். பல உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் அதில் ஒரு உதாரணம், கோவையில் சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டது, உடனே ஆளுநர் வெளியுலகத்தற்கு 'இந்த விசாரணை நான்கு நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு விட்டது. இந்த நான்கு நாட்களில் முக்கியமான ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டன' என்று சொல்கிறார். விசாரணையை தள்ளி வைத்தது தமிழக அரசு என்று சொல்கிறாரா? அல்லது தமிழக காவல்துறையை சொல்கிறாரா? முக்கியமான ஆவணங்களை யார் அழிக்க முடியும்? அரசாங்கம் அழிக்குமா? காவல்துறை அழிக்குமா? இது ஒரு தேசவிரோத குற்றச்சாட்டு. ஒரு ஆளுநர் அதைச் சொல்லக்கூடாது.

 

கோவை சிலிண்டர் வெடிப்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. குற்றவாளிகள் தேடி கண்டுபிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டார்கள். விசாரணை நடைபெற்றது. ஒரு நிமிட நேரத்தைக் கூட தமிழக காவல்துறை விரயம் செய்யவில்லை. ஆளுநருக்கு சில உரிமைகள் உண்டு. அவர் முதலமைச்சரை கூப்பிடலாம், தலைமைச் செயலாளரை கூப்பிடலாம், காவல்துறை உயர் அதிகாரிகளை கூப்பிடலாம், கூப்பிட்டு தன்னுடைய கருத்துக்களை சொல்லலாம். அது ஆட்சி முறை. அது அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மதிக்கிறார் என்பதற்கு பொருள். ஆனால் அதற்கு மாறாக பொதுவெளியில் ஆர்.எஸ்.எஸ், பாஜக செய்தி தொடர்பாளர் போன்று சொல்வது என்ன நியாயம். தவறு அது. எந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டு இங்கு ஆளுநராக வந்திருக்கிறாரோ அதற்கு நேர் எதிரான செயல்பாடுகளை செய்கிறார். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் அதை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழகம் ஜனநாயகத்தின் தொட்டில். இதை போன்ற அத்துமீறல்களை ஒருபோதும் தமிழகம் ஏற்றுக்கொள்ளாது'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.