Skip to main content

எச்.ராசா, எஸ்.வி சேகரை கைது செய்ய வேண்டும்! ராமதாஸ்

Published on 22/04/2018 | Edited on 22/04/2018
svsekar 250.jpg


 

பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் எச்.ராசா, எஸ்.வி.சேகர் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

கல்லூரி மாணவிகளுக்கு அவர்களின் பேராசிரியையே பாலியல் வலை வீசிய விவகாரம், செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரிடம் ஆளுனர் புரோகித் நடந்து கொண்ட விதம் ஆகியவற்றைத்  தொடர்ந்து பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த எச்.ராசாவும், எஸ்.வி.சேகரும் தெரிவித்த கருத்துகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. அவர்கள் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களால் கூட ஏற்கமுடியாதவை.
 

பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்பதவியில் உள்ள பெரிய மனிதர்கள் சிலருக்கு பலியாக்குவதற்காக கல்லூரி மாணவிகள் சிலருக்கு அவர்களின் பேராசிரியை வலை வீசியது தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த விவகாரத்தில் சட்டம் அதன் கடமையை செய்யவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவும் அனுமதிக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும். ஆனால், யாருமே கேட்காமலேயே ஆளுனர் பன்வாரிலால் புரோகித், இதில் தலையிட்டு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ஒரு பெண் செய்தியாளர் எழுப்பிய வினாவுக்கு விடையளிப்பதற்கு பதிலாக, அவரது கன்னத்தில் தட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு பெண் பத்திரிகையாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தனது செயலுக்காக ஆளுனர் மன்னிப்புக் கேட்டார். இந்த சிக்கலுக்கு இத்துடன் முடிவு கட்டியிருந்தால் சர்ச்சை ஏற்பட்டிருக்காது.

 

h.raja


 

ஆனால், பாரதிய ஜனதா நிர்வாகிகளான எச்.ராசாவும், எஸ்.வி. சேகரும் ஆளுனரின் ஆதரவாளர்களாக மாறி பத்திரிகையாளர்கள் மீது அவதூறு வார்த்தைகளால் போர் தொடுத்தது மன்னிக்க முடியாததாகும். இந்த விஷயத்தில் கலைஞருக்கு எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில், கலைஞரையும், கனிமொழியையும் கொச்சைப்படுத்தும் வகையில் எச்.ராஜா சில கருத்துக்களைக் கூறி அவரது அகத்தின் அழுக்கை அம்பலப்படுத்தினார். மற்றொருபுறம், பெண் பத்திரிகையாளர்கள் பலரும் படுக்கையை பகிர்ந்து கொண்டு தான் பணிகளைப் பெறுகிறார்கள் என்று அருவருக்கத்தக்க கருத்தை எஸ்.வி.சேகர் முகநூலில் வழி மொழிந்தார். பெண்மையைப் போற்றும் தமிழகத்தில், பெண்கள் குறித்த எச்.ராசா, எஸ்.வி.சேகரின் பார்வை எந்த அளவுக்கு கேவலமாக உள்ளன என்பதற்கு அவர்களின் இந்தக் கருத்துக்களே சாட்சி.
 

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்தை வழி மொழிந்ததற்காக சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கலைஞர் மற்றும் கனிமொழி குறித்த அவதூறுகளுக்காக எச். ராஜா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும். சமூக ஊடகங்களை எச்.ராசா சாக்கடையாக்குவது இது முதல்முறையல்ல. திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டபோது, அதேபோல் தமிழகத்தில் தந்தை பெரியாரின் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று கூறி அனைவரின் கண்டனங்களுக்கும் ஆளானார். அதன்பின்னர் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று கூறி விவசாயிகளின் எதிர்ப்பை சம்பாதித்தார். இவ்வளவுக்கு பிறகும் எச்.இராசா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தமிழக பினாமி அரசு தயங்குவது ஏன்?
 

தமிழகத்தில் ஆட்சியாளர்களின் தவறுகளையும், ஊழல்களையும் அம்பலப்படுத்தும் அரசியல் தலைவர்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் அவதூறு வழக்குகளைப் பதிவு செய்யும் தமிழக அரசு, ஒட்டுமொத்த தமிழகத்தையே அவதூறாக பேசும் ராசா மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல்  வேடிக்கை பார்ப்பது ஏன்? தமிழக ஆட்சியாளர்களுக்கு ராசா மீது அந்த அளவுக்கு அச்சமா? பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாரதிய ஜனதா அலுவலக தூண்களின் கால்களில் கூட விழுந்து கிடக்கக்கூடாது.

 

Ramadhoss


 

பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் எச்.ராசா, எஸ்.வி.சேகர் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதேநேரத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதற்காக எஸ்.வி.சேகர்  வீட்டு முன் போராட்டம் நடத்திய செய்தியாளர்கள் திடீரென கல்வீச்சில் ஈடுபட்டது ஏற்கமுடியாதது. எனினும், அவர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.