/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai high court 600_17.jpg)
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக தமிழகத்தில் கிடைப்பதாக திமுகவினர் குற்றம் சாட்டினர். கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தி.மு.க.வினர் கொண்டு சென்று சபாநாயகரிடம் காண்பித்தனர்.
கடந்த 19.07.2017 அன்று சட்டப்பேரவையில் குட்கா பாக்கெட்டுகள் மற்றும் புகைப்படங்கள் காட்டப்பட்டது தொடர்பாக உரிமைக்குழு நோட்டீஸ் வழங்கியதை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த ரிட் மனு மீதான வழக்கில் கடந்த 25.08.2020 அன்று, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற முதல் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து, கடந்த 07.09.2020 அன்று கூடிய உரிமைக்குழு, 19.07.2017 (மூன்றாண்டுகளுக்கு முன்னர்) அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மீண்டும் விவாதித்ததாகக் கூறி தமிழக சட்டப்பேரவைச் செயலாளர், தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, 14.09.2020 அன்று தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புது நோட்டீஸ்களின் நோக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களை நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில் இருந்து தடுப்பதும், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாகக் கையாண்ட விவகாரத்தைச் சட்டமன்றத்தில் எழுப்புவதைத் தவிர்க்கவுமே என்பது தெளிவாகிறதுஎன திமுக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இந்தப் புதிய நோட்டீஸ்களை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் புதிய ரிட் மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர். நாளை மறுதினம் பதிலளிக்க உரிமைக்குழு உத்தரவிட்ட நிலையில் திமுக மனுத்தாக்கல் செய்துள்ளது.
Follow Us