Skip to main content

திரை மயக்கத்திற்கும் பண மயக்கத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்! -கௌதமனின் தமிழ்ப் பேரரசு கட்சி தீர்மானம்!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020
tamil perarasu katchi

 

திரை மயக்கத்திற்கும் பண மயக்கத்திற்கும் இடம் கொடுக்காமல் எதிர்காலத் தலைமுறைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு தமிழக மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் விழிப்போடு இருக்க வேண்டும் என்று தமிழ்ப் பேரரசு கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. 

 

2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்து தமிழ்ப் பேரரசு கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அக்கட்சியின் தலைவர் கௌதமன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு...

 

1. வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் போராடி உயிர் நீத்த 20க்கும் மேற்பட்ட பஞ்சாப் உள்ளிட்ட இந்திய ஒன்றிய  விவசாயிகளுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. 

 

2. விவசாயிகளுக்கு மட்டுமல்லாது மனித குலத்திற்கே எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மதிப்பளித்து மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். 

 

3. கொரோனா நிறைந்த காலக்கட்டத்தில் தங்களது உயிரைத் துச்சமாக மதித்து களப்பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. 

 

4. தங்களை மக்களுக்கான அரசு என்று பிரகடனப்படுத்தும் தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து எட்டு வழி சாலை திட்டத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும். மற்றும் கையகப்படுத்திய நிலங்களை உடனடியாக உரியவர்களிடம்  திரும்பவும் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசினைத் தமிழ்ப் பேரரசு கட்சி உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது. 

 

5. அனிதா மற்றும் விக்னேஷ் உள்ளிட்ட பனிரெண்டுக்கும் மேற்பட்ட எங்கள் தமிழ்ப் பிள்ளைகளின் உயிரை பலி வாங்கிய நீட் என்கிற எமனை மத்திய அரசு நிரந்தரமாக நீக்க வேண்டும்.

 

6.தமிழீழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழமே தீர்வு என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்க்கமாக முடிவெடுத்து அறிவித்தது போலவே அவர் வழியில் நின்று ஆட்சி செய்யும் அதிமுக அரசும் அதே நிலைப்பாட்டை கடைபிடிக்கவேண்டும். ஐநா உள்ளிட்ட உலகத்தின் பெரும் நீதிமன்றங்களில் தமிழீழப் பிரச்சினைகளில் தொடர்ந்து நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் தமிழக அரசு உரிய அழுத்தம் தந்து தமிழீழ தீர்வை உறுதிப்படுத்த வேண்டும்.

 

7.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட எழுவரின்  விடுதலையை உறுதிப்படுத்தாமல் காலம் கடத்திக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கங்களுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நீதியினை நிலைநாட்டி எழுவரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சி கேட்டுக்கொள்கிறது.

 

8. நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாத நிலையில் வல்லரசு நாடுகளோடு சேர்ந்து மேலை நாடுகளும் வாக்கு எந்திரத்தை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டு வாக்குச்சீட்டு முறையினைப் பயன்படுத்துவது போல் இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இருந்தாவது நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சி வலியுறுத்துகிறது. 

 

9. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது, கூட்டணி குறித்த நிலைபாடுகள் என இவை அனைத்தையும் முடிவு செய்யும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு வழங்கப்படுகிறது.

 

10. மதவாதம், இனவாதம், மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழ் மண்ணில் கலவரத்தைத் தூண்டும் அமைப்புகளுக்கு எதிராகவும் கட்சிகளுக்கு எதிராகவும் தமிழ்ப் பேரரசு கட்சி இறுதிவரை உறுதியுடன் போராடும். 

 

11. தமிழக மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் விழிப்போடு இருந்து திரை மயக்கத்திற்கும் பண மயக்கத்திற்கும் இடம் கொடுக்காமல் எதிர்காலத் தலைமுறைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டும் மண் வளம், தமிழர் மேம்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவைகளைப் பேணிப் பாதுகாக்கின்ற வகையில் எங்களைப்போன்ற கள வீரர்களை மட்டுமே ஆதரிக்க வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சி அன்போடு கேட்டுக் கொள்கிறது. 

 

12. இந்திய ஒன்றியத்திலுள்ள மற்ற மாநிலங்கள்  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அம்மண்ணின் மைந்தர்களுக்கே 85 சதவிகிதத்திலிருந்து 90 சதவிகிதம் வரை வேலை வாய்ப்பு என உறுதிசெய்து சட்டம் இயற்றியது போலவே தமிழ்நாடு அரசும் இனியும் காலம் தாழ்த்தாமல் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்ப் பேரரசு கட்சி தீர்மானம் இயற்றி வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தல் பறக்கும் படை கலைப்பு; எல்லையில் மட்டும் கண்காணிப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Dissolution of Election Flying Corps; Surveillance only at the border

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும்,  24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.

ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.