ADVERTISEMENT

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்! -ராமதாஸ்

01:36 PM Aug 29, 2020 | rajavel

ADVERTISEMENT

அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் குழந்தைகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம் ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கக்கூடாது; பெற்றோர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விறுவிறுப்படைந்து வரும் நிலையில், மாணவர்களிடம் கட்டாயமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வி அமைச்சரே எச்சரித்த பிறகும் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

அரசு பள்ளிகள் வலிமையாக இருந்தால் தான் அனைத்து மாணவர்களுக்கும் சமத்துவமான, தரமான கல்வியை வழங்க முடியும். இந்த தத்துவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த 17-ஆம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், இதுவரை, கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 80,000 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒருபுறம் மகிழ்ச்சியளிக்கும் நிலையில், அவ்வாறு சேரும் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் கவலையளிக்கின்றன.

சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கைக்கு ரூ.1000 முதல் ரூ.1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர். அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் எந்த விதமான ரசீதும் வழங்கப் படுவதில்லை என்று கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து சென்னை, திருப்பூர், அவினாசி உள்ளிட்ட இடங்களில் பெற்றோர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

அரசு பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. அவ்வாறு இருக்கும் போது அவர்களிடம் மாணவர் சேர்க்கைக்காக ரூ.6,000 வரை கட்டணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமானது அல்ல. தமிழகத்தின் பல பகுதிகளில் இது தொடர்பாக எதிர்ப்புக் குரல் எழுந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘‘அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட எந்த அமைப்பும், எதற்காகவும் கட்டணம் வசூலிக்கக்கூடாது; தமிழகத்தின் பல பகுதிகளில் அரசு பள்ளியில் சேர வந்த மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்துள்ள புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்’’ என்று எச்சரித்திருந்தார். அமைச்சரே எச்சரிக்கை விடுத்த பிறகும் அரசு பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது மிகவும் தவறு; இதை அரசு அனுமதிக்கக் கூடாது.

அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மாணவர்களிடமிருந்து நன்கொடை வசூலிப்பதாக சில பள்ளிகளின் நிர்வாகங்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படும் நிலையில், அதற்காக நன்கொடை என்ற பெயரில் கட்டணம் வசூல் செய்யப்படுவது தவறு. கரோனா பாதிப்பால் வாழ்வாதாரங்களை இழந்து தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வரும் பெற்றோர்களிடம் கட்டணம் செலுத்தும்படி கூறி சிரமப்படுத்தக்கூடாது.

அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் குழந்தைகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம் ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கக்கூடாது; பெற்றோர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கல்வித்தரத்தை மேம்படுத்தியும், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்தும் அரசு பள்ளிகளில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் பாடுபட வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT