Skip to main content

அரசுப் பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு உடனே பணிநிலைப்பு வழங்க வேண்டும்! - மருத்துவர் ராமதாஸ்!

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

ramadoss

 

அரசுப் பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு உடனே பணி நிலைப்பு வழங்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் பகுதிநேரமாக பணியாற்றி வரும் சிறப்பாசிரியர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். பகுதி நேர ஆசிரியர்களின் 8 ஆண்டு கால கோரிக்கையை பரிசீலிக்கக் கூட அரசு முன்வராதது மிகவும் வேதனையளிக்கிறது.

 

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. ஆனால், அவர்கள் நடத்தப்படும் விதமும், அவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படும் விதமும் மிகவும் மோசமானவை. பகுதி நேர ஆசிரியர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக  இருந்தாலும் கூட, அவர்களுக்கு உதவ ஆட்சியாளர்களுக்கு மனம் வராதது வருத்தம் அளிக்கிறது.

 

தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் எவரும் கருணை அடிப்படையில் நியமிக்கப் படவில்லை. மாறாக, 05.03.2012 அன்று தமிழக அரசு பிறப்பித்த அறிவிக்கையின்படி வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது. இதற்காக இவர்களுக்கு மாதம் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆசிரியரும் அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணியாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அன்றைய நிலையில் மாதம்   ரூ.20,000 வருவாய் ஈட்டலாம்; காலப்போக்கில் பணி நிலைப்பு கிடைக்கும் என்பதால்தான் அவர்கள் பணிக்குச சேர்ந்தனர். இல்லாவிட்டால் ரூ.5,000 ஊதியத்துக்கு எவரும் பணிக்கு வந்திருக்க மாட்டார்கள்.

 

ஆனால், இதுவரை 8 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் அவர்கள் பணி நிலைப்பு செய்யப் படவில்லை. அவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கடந்த 7 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. 2014-ஆம் ஆண்டில் நான் வலியுறுத்தியதை ஏற்றுதான் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தினார். பின்னர் ஊதியம் ரூ.7,700 ஆக உயர்த்தப்பட்டது. ஆனாலும், அவர்களின் பணி நிலைப்பு கோரிக்கை மட்டும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை; அவர்களின் துயரக்கதை தொடர்கிறது.

 

Ad

 

பணி நிலைப்புக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை வைப்பதும், அவ்வப்போது போராட்டம் நடத்துவதும், அப்போதெல்லாம் அவர்களிடம் பேச்சு நடத்தும் அதிகாரிகள், 'உங்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்கிறோம்' என வாக்குறுதி அளிப்பதும் வாடிக்கையாகி விட்டன. ஆனால், 8 ஆண்டுகளில் ஆக்கப்பூர்வமாக எதுவும் நடக்கவில்லை; ஏமாற்றங்களே பரிசாக கிடைத்து வருகின்றன. அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டும் தான் அந்த குறைந்த ஊதியமும் வழங்கப்படுகிறது.

 

ஒவ்வொரு ஆசிரியரும் நான்கு பள்ளிகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு இன்றைய நிலையில் மாதம் ரூ.30,000 ஊதியமாகக் கிடைத்திருக்கும். ஒரு கட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் இரு பள்ளிகளில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதுவும் நடைமுறைக்கு வரவில்லை. எந்த விதமான கல்வித் தகுதியும் தேவைப்படாத, எத்தகைய பொறுப்பும் இல்லாத சாதாரண பணிகளுக்குக் கூட மாதம் ரூ.20,000 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், பட்டப் படிப்பும், பட்டயப் படிப்பும் முடித்த பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.7,700 ஊதியத்திற்கு மாதம் முழுவதும் பணியாற்ற வேண்டும் என்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும். அரசே ஆசிரியர்களை இப்படி அலைக்கழிக்கக்கூடாது.

 

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிலைப்பு செய்வது குறித்து குழு அமைத்து பரிசீலிக்கப்படும் என்று கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர்  செங்கோட்டையன் உறுதியளித்தார். அதன்பின் மூன்று ஆண்டுகளாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை. பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாகவும், அதற்கான பட்டியல் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு தெரிவித்தனர். ஆனால், அதுவும் நடக்கவில்லை என்பது தான் வேதனை.

 

Nakkheeran

 

பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக்குறைந்த ஊதியத்தில் அவதிப்பட்டு வருவதற்கு முடிவு கட்ட வேண்டும். அதைச் செய்ய அரசுக்கு பெரிய அளவில் செலவு ஆகிவிடாது. எனவே, பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வரும் 12,000 பேருக்கும் பணி நிலைப்பு அளித்து, காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.