Skip to main content

அரசு, நிதி ஒதுக்காததால் ஊராட்சிப் பணிகள் பாதிப்பு... தலைவர்கள் புகார் மனு...

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

dddd

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், போதிய அளவில் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்கு, அரசு நிதி ஒதுக்காததால், பணிகளை செய்ய முடியாமல் ஊராட்சி மன்றத் தலைவர்கள் திணறி வருகின்றனர்.

 

இதனைக் கருத்தில் கொண்டு, பண்ருட்டி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்புத் தலைவர் வசந்தகுமாரி ஜெயராமன் தலைமையில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ரவிச்சந்திரன் ஆகியோரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுவை அளித்தனர்.

 

அந்த மனுவில், ஊராட்சிகள் மூலம் பணியாற்றும் ஊழியர்கள், ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் சிறுசிறு பணிகள் ஆகியவற்றிற்கு, ஊதியம் வழங்குவதற்காக, கணக்கு எண் ஒன்றிலிருந்து நிதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதில் பொதுநிதி ஊராட்சி செலவினங்களுக்கு இல்லாததால், ஊராட்சிப் பணிகளை மேற்கொள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், தங்களது சொந்தப் பணம் மற்றும் கடன் வாங்கிதான் ஊராட்சிப் பணிகளைச் செய்து வருகிறோம்.

 

இதே நிலை நீடித்தால், கிராம ஊராட்சிகளில் முக்கியப் பணிகள் கூட செய்ய முடியாமல் சுணக்கம் ஏற்படும். பொதுமக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்ய முடியாத நிலை உருவாகும். எனவே, ஊராட்சிகளில் வேறு கணக்கிலிருக்கும் நிதியை ஊராட்சி மன்ற கணக்கு எண் 1-க்கு மாற்றம் செய்ய வேண்டும். சுமார் 5 லட்சம் அளவிற்குக் குறையாமல் நிதியை மாற்றித் தருமாறு அதிகாரிகள் ஆவனசெய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

cnc

 

மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறி உள்ளனர். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர்கள் மணப்பாக்கம் சியாமளா சுரேந்தர், எல்.என்.புரம் தமிழ்ச்செல்வி செல்வமணி, கீழிருப்பு முருகன், குடுமியான்குப்பம் கலியமூர்த்தி, கருக்கை கலைமணி உட்பட 20க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கையெழுத்திட்ட அந்த மனுவை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

 

ஊராட்சிப் பணிகளைச் செய்வதற்கு பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் நிதி இல்லாமல் தடுமாறுகின்றனர். அரசும் அதிகாரிகளும் எப்போது நிதி நிலைமையைச் சரி செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 1 கோடி பறிமுதல்; ஊராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rs. 1 crore confiscation; Case registered against panchayat chairman

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மாவட்டம் எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா வீட்டில் ரூ.1 கோடி நேற்று (12.04.2024) தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி யார் மூலம் வந்தது என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. 

Next Story

முறைகேடு புகார்; ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Complaint of malpractice Panchayat  president suspended

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் முறைகேடு புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் கிராமத்தின் ஊராட்சி மன்றத்தலைவராக கீதா துளசிராமன் என்பவர் பதவி வகித்து வந்துள்ளார். இந்த சூழலில் சட்ட விதிகளை மீறி கட்டட வரைபடத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக அரசுக்கு நிதி இழப்பீடு செய்ததாகவும், முறைகேடாக தீர்மானங்களை நிறைவேற்றி ஊராட்சிக்கு சேர வேண்டிய நிதிகளை கால தாமதமாக செலுத்தியதாகவும் இவர் மீது புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இவர் மீதான முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் கீதா துளசிராமனை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.